சென்னை : ""வரும் சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டு போட்டதற்கான அத்தாட்சி ரசீது வழங்க வாய்ப்பு உள்ளது,'' என்று தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி கூறினார்.
சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் நடை பெற உள்ள தேர்தல் குறித்த, ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி, நேற்று இரவு 7.30 மணிக்கு டில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: வரும் சட்டசபை தேர்தலின் போதே, வாக்காளர்கள் ஓட்டு போட்டதற்கான அத்தாட்சி ரசீது வழங்குவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதே போல், வேட்பாளர்கள், தேர்தல் வரவு, செலவு பரிவர்த்தனைக்காக வங்கிகளில், புதிதாக தனி கணக்கு துவங்க வேண்டும் என்ற திட்டமும் இத் தேர்தலில் கண்டிப்பாக செயல் படுத்தப்படும். தேர்தலின் போது, அனைத்து இடங்களிலும் துணை ராணுவ படையினரை மட்டுமே பாதுகாப்பிற்கு பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை, தேர்தல் நேரத்தில் பரிசீலிக்கப்படும். எப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற கேள்விக்கு இப்போது பதில் சொல்ல முடியாது. இவ்வாறு தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி கூறினார்.
THANKS : DINAMALAR
No comments:
Post a Comment