இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Thursday, April 28, 2011

தமிழக அரசின் செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் செய்திக் குறிப்பு: மத்திய வெளி விவகாரத் துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தின்படி, 70 வயதுக்கு மேற்பட்ட ஹஜ் பயணிகள், இந்த ஆண்டு முதல் சக பயணி ஒருவரையும் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர். அதன்படி, இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியன்று, 70 வயது பூர்த்தியான பயணி, தம்முடன் ஒரு சக பயணியுடன் விண்ணப்பித்தால், இந்த ஆண்டு அவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட இருக்கைகள் அளிக்கப்படும். ஹஜ் பயணத்துக்கு ஏற்கனவே விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ள 70 வயதுக்கு மேற்பட்ட பயணிகள், தம்முடன் சக பயணியாக யாரை அழைத்துச் செல்ல உத்தேசித்துள்ளார் என்பதை தெரிவிக்க வேண்டும். இதன்மூலம், அப்பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட இருக்கைகள் வழங்க இயலும். இதற்கான தகுதி குறித்த விவரங்கள், www.hajcommittee.com என்ற இணையத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், 70 வயது பூர்த்தியானவர்கள், இதுவரை விண்ணப்பிக்காமல், தற்போது விண்ணப்பிக்க விரும்பினால், அவர்கள் தங்களது விண்ணப்பத்துடன், தாம் அழைத்துச் செல்ல விரும்பும் சக பயணியின் விவரத்துடன், தனியே தெரிவிக்க வேண்டும். உறுதி செய்யப்பட்ட இருக்கைகள், பன்னாட்டு பாஸ்போர்ட் வைத்துள்ள 70 வயதுக்கு மேற்பட்ட ஹஜ் பயணி மற்றும் சக பயணி ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்படும். ஹஜ் பயணத்தை அவர்கள் ரத்து செய்தால், எக்காரணத்தை கொண்டும், சக பயணிகள் தனியே பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஹஜ் பயணிகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் 30ம் தேதி கடைசி தேதி. இதில் மாற்றம் ஏதும் இல்லை. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்ப்டடுள்ளது.

THANKS:DINAMALAR

Wednesday, April 27, 2011

சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். ஆனால் நீதி…? PART - 2

இவ்வாறு இருக்க வரலாறுகளைப் புரட்டினால் முஸ்லிம்கள் தீவிரவாதமோ, பயங்கரவாதமோ செய்ததற்கான எந்தத் தடயங்களையும் நம்மால் காண முடியவில்லை. தன் வாழ்நாள் முழுக்க இந்து பக்தராக இருந்த, நிமிடத்திற்கு ஒருமுறை “ஹே ராம்” என்று முழங்கிய காந்திஜியைக் கொன்றொழித்த பயங்கரவாதத்தில் முஸ்லிம்களுக்குப் பங்கில்லை. ஆனால் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

பல இன மக்களும் வாழும் இந்தியாவில் ஒற்றுமை தழைத்தோங்க ஓங்கிக் குரல் கொடுத்த பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் வாரிசான இந்திரா காந்தியைச் சுட்டுப் பொசுக்கிய தீவிரவாத்தில் முஸ்லிம்களைக் காண முடியவில்லை. ஆனால் முஸ்லிம்கள் தீவிரவாதிகள்!

இந்திரா கந்தியின் புதல்வரும் இளைய தலைமுறையின் இதயத்தில் வாழ்ந்து தனது இளம் வயதில் இந்தியாவின் பிரதமரான ராஜீவ் காந்தியை வெடித்துச் சிதற வைத்து சின்னா பின்னமாக்கிய பயங்கரவாதத்தில் முஸ்லிம்களுக்கு எந்தச் சம்பந்தமுமில்லை. ஆனால் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்களின் அடையாளச் சின்னங்களையும், வழிபாட்டுத் தலங்களையும் குறிவைத்துத் தாக்கியதில் எந்த முஸ்லிமுக்கும் தொடர்பில்லை. திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலைகளிலும், கூட்டுக் கற்பழிப்புகளிலும் முஸ்லிமகளுக்குப் பங்கில்லை. ஆனால் முஸ்லிம்கள் அதி பயங்கரவாதிகள்!

இவர்கள்  தங்கள் சமூகம் அழிவுக்குள்ளாக்கப்படும்போதும், மனித சமூகத்தின் மானங்கள் குழிதோண்டிப் புதைக்கப்படும்போதும் உணர்வை இழக்காமல் உரிமை கேட்டார்கள். அதனால் பயங்கரவாதிகளாக மாற்றப்பட்டார்கள். இதன் விளைவு பல ஆயிரம் முஸ்லிம்களின் உயிர்கள் பறித்தெடுக்கப்பட்டன. பச்சிளம் குழந்தைகளின் அழகு மேனிகளோ தீக்கிரையாக்கப்பட்டு கரிக் கட்டையாயின.

இவை அனைத்தும் அரங்கேறிய பிறகும் நீதி கிடைத்ததா? இல்லையே. சட்டம் அனைவருக்கும் சமம் என்கிறார்கள். ஆனால் நீதி யாருக்கு?

சங்கர ராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கராச்சாரியாருக்கு கழிவறை செல்ல வாழை இலை கொடுக்கிறது காவல்துறை. அவரது வழக்கிற்காக விடுமுறை நாளிலும் நீதிமன்றக் கதவுகள் திறந்தன.

அதே நேரத்தில் கோவை வெடிகுண்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மதானி ஒன்பதரை வருடங்கள் சிறைக் கொடுமைகளை அனுபவித்த பிறகு நிரபராதி என்று அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே ஹிந்துத்துவ ஃபாசிச பயங்கரவாதிகளால் ஒரு காலை இழந்த மதானி, சிறையில் இருந்தேபோது தனது கட்டைக்கால் பழுதடைந்து விட்டது, அதற்காக சிகிச்சை எடுக்க மருத்துவமனை செல்ல ஜாமீன் வேண்டும் என்று கேட்ட பொழுது அனைத்து நீதிமன்றக் கதவுகளும் இறுக மூடிக்கொண்டதே.. ஏன்? இதுதான் சம நீதியோ?

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் கடும் சிறைவாசம். ஆனால் கோவை குண்டுவெடிப்பிற்குக் காரணமாக அமைந்த 19 முஸ்லிம்கள் உயிரோடு எரித்துக் கொல்லபட்ட கலவர வழக்கில் சம்பந்தபட்ட ஃபாசிஸ்டுகள் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லையே ஏன்?

மலேகான், அஜ்மீர், புனே, கோவா, ஹைதராபாத் என்று இந்தியாவில் நடந்த அநேக குண்டு வெடிப்புகளுக்குக் காரணமானது அபினவ் பாரத், சனாதன் சன்ஸ்தான் ஆகிய தீவிரவாத இயக்கங்கள்தான் என்றும், அதனைத் துடிப்போடு இயக்கிக் கொண்டிருப்பது ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்புதான் என்றும் அனைத்து ஆதாரங்களும் தெளிவாக கையில் இருந்தும் இன்னும் இந்தத் தீவிரவாத அமைப்புகளின் மீது நடவடிக்கை எடுக்கவோ அல்லது தடை செய்யவோ அரசாங்கம் தாயாராக இல்லையே ஏன்?.

பாபரி மஸ்ஜித் வழக்கின் உண்மை நிலையைக் கண்டறிய 17 ஆண்டுகள் விசாரணை நடத்தி, பல லட்சங்கள் செலவு செய்து, 1000 பக்கங்களுக்கு மேல் அறிக்கை தயார் செய்து அதில் அத்வானி, வாஜ்பாயி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி போன்ற ஹிந்துத்துவ தீவிரவாதிகள்தான் காரணம் என ஆதரத்துடன் அளிக்கப்பட்ட லிபரஹான் கமிஷனின் அறிக்கை இன்று எந்தக் குப்பைத் தொட்டியில் கிடக்கிறது என்று தெரியவில்லை.

இது போன்று தவறு செய்துவிட்டு தண்டனை அனுபவிக்காமல் சுதந்திரமாக குற்றவாளிகள் சுற்றித் திரிவதால் அரசாங்கத்திலும், அரசியலிலும், அதிகாரத்திலும் முஸ்லிம் சமூகம் தனது முத்திரைகளைப் பதித்து, இழந்த உரிமைகளை மீட்கப் போராடி வருகிறது. ஆனால் அது எடுத்து வைக்கும் அனைத்து முயற்சிகளையும் அடியோடு அழித்துவிடுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள் ஆளும் அதிகார வர்க்கத்தினர்.

அதற்காக அவர்கள் பயன்படுத்தும் மந்திரம்தான் இஸ்லாமிய தீவிரவாதம். இந்த ஃபாசிஸ்டுகளின் மந்திரத்தை உடைத்தெறிந்து உரிமைகளை மீட்க சமூகத்தை ஒன்றிணைக்க பாடுபடும் இஸ்லாமிய இயக்கங்கள் பயங்கரவாதச் சாயம் பூசப்பட்டு தடை செய்யப்படுகின்றன. அவ்வியக்கங்களை வீரியமாக வழி நடத்தும் தலைவர்களோ கைது செய்யப்பட்டு வெளியில் வரமுடியாத சட்டங்களின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

அந்த வரிசையில் சமீபத்தில் கேரளாவில் முஸ்லிம்களின் தலைவர் முஹம்மது நபியை இழிவு படுத்திய பேராசிரியரின் கை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டப்பட்டது. இதனை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இயக்கம்தான் செய்தது என்று கூறி எந்த ஆதாரமும் இல்லாமல் அதன் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்தது காவல்துறை.

அதோடு மட்டுமல்லாமல் அதன் அரசியல் ஆதரவு பெற்ற கட்சியான SDPI-யைச் சேர்ந்த தலைவர்கள், ஆதரவாளர்கள் பலரை விசாரணை என்ற போர்வையில் பலி வாங்கியது கேரள கம்யூனிஸ்டு அரசு.
காரணம், சமீப காலத்தில் இந்த பாப்புலர் ஃப்ரண்ட் என்ற இயக்கம் முஸ்லிம்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வருகிறது. அதே நேரத்தில் அதன் அரசியல் பிரிவான SDPI தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்து ஆதிக்க சக்திகளுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது.

ஆதலால் தீவிரவாதிகள் வரிசையில் இவர்களையும் இணைத்து இவர்களுடைய முயற்சிகளை முறியடித்து தடை செய்ய போட்ட நாடகம் பலிக்கவில்லை. காரணம் இந்தியா முழுவதும் இருந்த அனைத்துத் தரப்பு மக்களும் கண்டனக் குரல் எழுப்பினார்கள். இது ஃபாசிஸ்டுகளை நிலைகுலையச் செய்தது. இதே நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் தனது பணியை வீரியத்தோடு தொடர்ந்தது. SDPIயோ சமீபத்தில் நடந்த தேர்தலில் களமிறங்கி தனது வெற்றிக்காகக் காத்திருக்கிறது.

இந்தச் சூழலில் ஃபாசிஸ்டுகள் தங்களின் சதி பலிக்காததால் தங்களது தில்லுமுல்லு வேலைகளைத் தொடங்கி இருக்கிறார்கள். கடந்த புதன்கிழமை கேராளாவின் ஒற்றப்பாலம் பகுதியின் SDPI மண்டலத் தலைவர் மரைக்காயர் (40) என்பவரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி படுகாயப்படுத்தி விட்டு சென்றிருக்கிறது. இப்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது போன்ற மதத் துவேஷத்தை ஏற்படுத்தி அதில் இரத்த ஆறை ஓடச் செய்து குளிர்காயும் ஃபாசிசக் கும்பலைக் கைது செய்யுமா காவல்துறை? எத்தனை முறை அலைக்கழிக்கப்ப்ட்டாலும் முஸ்லிம் சமூகம் நீதிக்காக நீதிமன்றத்தை நோக்கிக் காத்திருக்கிறது.

கை வெட்டு சம்பவத்தில் காண்பித்த அக்கறையையும், ஆர்வத்தையும், முனைப்பையும்  இந்தக் கொலை முயற்சி வழக்கிலும் காட்டுமா கேரள காவல்துறை?

பொறுத்திருந்து பார்ப்போம். சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான்; நீதியும் ஒன்றாகும் காலம் வருமா? காத்திருப்போம்.

புதுவலசை ஃபைஸல்

சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். ஆனால் நீதி…? PART - 1

சமீப காலமாக இந்தியாவில் நடந்து வரும் நிகழ்வுகளைப் பார்த்தால் முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவிற்காக போடப்பட்ட திட்டத்திற்குள் அரசாங்கமும், அதிகாரச் சட்டமும், காவல்துறையும், நீதித் துறையும் மூழ்கிக் கொண்டிருக்கிறதோ என்ற எண்ணத் தோன்றுகிறது. 
முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகளாக சித்தரிக்கும் சித்து விளையாட்டு அமெரிக்கா மற்றும் அதன் கள்ளக் குழந்தையான இஸ்ரேலால் முழு வேகமாக உலகம் முழுவதும் பரப்பப்பட்டு வருகிறது. அதற்கு இந்தியா என்ன விதிவிலக்கா? ஆளும் அரசாங்கம் (காங்கிரஸ்) அமெரிக்காவின் கைப்பாவையாகவும், ஆண்ட அரசாங்கம் (பா.ஜ.க.) இஸ்ரேலின் நெருங்கிய நண்பானாகவும் இருக்கிறதே… இதற்கு மேல் என்ன வேண்டும்?

அமெரிக்கா போடும் திட்டங்களுக்கு ஆமா சாமி போடுவதையே வேலையாகக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. சமீபத்தில் ஹிலாரி கிளிண்டன் இந்தியா வந்திருந்தபோது EUM (End Use Monetary)  என்ற ஓர் ஒப்பந்தத்தைப் போட்டு இந்திய இறையாண்மையை அமெரிக்காவுக்கு விற்றது.

 இதற்கு எடுத்துகாட்டு. இந்தியாவில் ஏதேனும் ஒரு இடத்தில் குண்டு வெடித்தால் இதற்குக் காரணம் முஸ்லிம்கள் என்று அமெரிக்க உளவுத்துறை கதறுகிறது. அதை அப்படியே ஏற்றுக்கொண்டு எந்த விசாரணையும் இல்லாமல் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை அள்ளிக்கொண்டு போகிறது இந்திய காவல்துறை.

ஆனால் தேர்தல் நேரத்தில் மட்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு ஆபத்து என்று  கூப்பாடு போட்டே அப்பாவி முஸ்லிம்களை கைக்குள் வைத்திருக்கும் காங்கிரசின் நிலையைப் பார்க்கும்போது இவர்கள் முஸ்லிம் சமூகத்தை நம்ப வைத்து முதுகில் குத்துபவர்கள் என்பதை உணர முடிகிறது.

இந்தியாவில் முஸ்லிம்கள் இல்லாமல் ஆக்குவதையே இலட்சியமாகக் கொண்டு அரசியல் நடத்தும் சங்கப் பரிவாரக் கட்சியான பா.ஜ.க.வோ இஸ்ரேலை ஒரு நாடாகவே அங்கீகரிக்காத இந்திய அரசாங்கத்தை இஸ்ரேலுக்கு அடமானம் வைத்தது. ஆயுதம் வாங்குவதில் ஆரம்பித்து, இராணுவத்திற்கு பயிற்சி அளிப்பது, சாய்பாபா கோயிலுக்கு பாதுகாப்பு கொடுப்பது, விண்ணில் விண்கலங்கள் ஏவுவது  என அனைத்திலும் இஸ்ரேலுடைய தொடர்பை ஏற்படுத்தி இவர்களை நம் வீட்டின் வாசல் வரை கொண்டு வந்து விட்டார்கள்.

 மாதம் ஒரு முறை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.  தலைவர்கள்  இஸ்ரேல் சென்று விருந்து சாப்பிடுவது, இஸ்ரேலிய அதிகாரிகள் தயான்ந்த சரஸ்வதியின் காலைத் தொட்டுக் கும்பிடுவது என இவர்களது உறவு நீண்டு விட்டது.

இந்த இஸ்ரேலியர்களைப் பற்றி நமக்கு நன்றாகத் தெரியும். வாழ்வதற்கு இடம் இல்லாமல் நாடோடிகளாய் அலைந்த காலத்தில் இருக்க இடம் கொடுத்து அரவணைத்த அண்டை வீட்டுக்காரர்களையே அடிமைகளாக்க இப்போது முயற்சி செய்கிறார்களள். அவர்களது உறைவிடங்களையே தமதாக்கிக் கொள்ள விழைகிறார்கள். பச்சிளம் குழந்தைகள் என்றும் பாராது, பாவம் வயோதிகர்கள் என்ற எந்த எண்ணமும் இல்லாது நித்தம் நித்தம் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி அப்பாவிகளின் உயிர்களைக் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுடன் உறவு வைத்து இந்தியாவையும் அதில் வாழும் அப்பாவிகளையும் பலிகடாவாக்க நினைக்கிறது அதிகார பாசிச வர்க்கம். அதன் விளைவு இன்று இந்தியாவில் நீதி செத்துக் கொண்டிருக்கிறது. 1400 வருட பழமை வாய்ந்த பாபரி மஸ்ஜித் நம் கையை விட்டுச் சென்று விட்டது.

பாபரிப் பள்ளி ஃபாசிஸ்டுகளின் கையில் சிக்குண்டு கதறியதை.ஒட்டுமொத்த உலகமே பார்த்துக் கொண்டிருந்தது. அப்படியிருந்தும் நீதி இன்று யார் பக்கம்? 
பாபரி மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கின் தீர்ப்பைக் கேட்ட ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஒரு கேள்வி எழுந்தது. “ராமர் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில்தான் பிறந்தார்” என்ற எந்தவொரு ஆதாரமுமில்லாத வாதத்தை வைத்து தீர்ப்பு வழங்கிய நிதீமன்றத்திடம் “நான் சென்னை அரசு மருத்துவமனையில்தான் பிறந்தேன், அதற்கான பிறப்புச் சான்றிதழும் என்னிடம் இருக்கிறது, எனவே சென்னை அரசு மருத்துவமனையை என் பெயருக்கு எழுதித் தர வேண்டும்” என்று வழக்கு தொடர்ந்தால் என்ன நடக்கும்?

பாபரி வழக்கில் எவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டதோ அதே போன்ற ஒரு தீர்ப்பு அனைவருக்கும் வழங்கப்படுமா என்ற கேள்வி அமைதியை விரும்பும் ஒவ்வொரு இந்திய குடிமகனின் ஆழ்மனதிலும் எழாமல் இல்லை.

அரசாங்கங்களும், நீதித்துறையும் இவ்வாறிருக்க மற்றொரு புறமோ காவல் துறையும், பத்திரிகைத்துறையும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக்குவதில் முழு மூச்சுடன் கைகோர்த்து வேலை செய்கின்றன. கஷ்மீரில் குண்டு வெடித்தாலும், கன்னியாகுமரியில் குண்டு வெடித்தாலும் அது முஸ்லிம்களால் மட்டுமே நடத்தப்பட்டது என்ற கோணத்திலேயே விசாரணையைத் தொடங்குகிறது காவல்துறை.

அதற்கு உடந்தையாக பத்திரிகைத்துறையோ வாய்க்குள் நுழையாத புதுப்புது பெயர்களை வைத்து தீவிரவாத இயக்கம் என்று அறிவித்து தனது கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு அத்தோடு “முஸ்லிம் தீவிரவாதிகள்” என்ற வார்த்தையையும் மறவாமல் இடையே புகுத்தி முஸ்லிம் விரோதப் போக்கை வளர்த்து விடுகிறது.

Tuesday, April 26, 2011

மாணவர்களுக்கு அளிக்கும் தரமான கல்வி தான் சமுதாய முன்னேற்றத்தை தீர்மானிக்கிறது - பாலகுருசாமி

மாணவர்களுக்கு அளிக்கும் தரமான கல்வி தான் சமுதாய முன்னேற்றத்தை தீர்மானிக்கிறது என்பதால், புதிதாக அமையவுள்ள அரசு, கல்வியின் தரத்தை உயர்த்த என்னென்ன செய்ய வேண்டும் என பட்டியலிடுகிறார், அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தரும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையக் குழு முன்னாள் உறுப்பினருமான பாலகுருசாமி.

கல்வித் தரம் சிறப்பாக உள்ளது என, நம் ஆட்சியாளர்கள் மார்தட்டிக் கொள்கின்றனர். பள்ளிக் கல்வியானாலும், உயர் கல்வியானாலும் கல்வியின் தரம் பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதே உண்மை. ஆசிரியர் பற்றாக்குறை, மோசமான உள்கட்டமைப்பு, தரமில்லாத பாடத்திட்டம், தேர்வில் முறைகேடு என, குறைகள் பல உள்ளதால், கற்பிக்கும் கல்வியில் தரம் இல்லை.தனி மனிதனின் வளர்ச்சி தான் சமூக வளர்ச்சி; சமூக வளர்ச்சி தான் நாட்டின் வளர்ச்சி. வளர்ந்த நாடுகளில் உயர்கல்வி பெறுவோர், 40-50 சதவீதம். நம் நாட்டில் இது, 10 சதவீதம் மட்டுமே. இதை அடுத்த ஐந்தாண்டுகளில், 15 சதவீதமாக உயர்த்த நிறைய கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் தேவை.பள்ளிக் கல்வியை முடிக்கும் மாணவர் சதவீதத்தை உயர்த்த, அரசு நடவடிக்கை எடுத்தால் தான், உயர்கல்வியில் சேருபவர் எண்ணிக்கை உயரும். அதற்கேற்ப ஆசிரியர்கள், அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடம் நடத்த வேண்டும். ஆழமாக கற்பிக்க வேண்டும்; நுனிப்புல் மேயக் கூடாது.

தனியார் பள்ளிகளில் குறைந்த சம்பளம்; அதிக பொறுப்புகள்; இதனால் தேர்ச்சி சதவீதம் அதிகம். அரசுப் பள்ளிகளில் அதிக சம்பளம் பெறும் ஆசிரியர்களில் பலர், தங்கள் பொறுப்பை உணர்வதே இல்லை. இன்று கல்வித் தரம் வீழ்ச்சி அடைய, அர்ப்பணிப்பு உணர்வு இல்லாத ஆசிரியர்களே காரணம்.பள்ளியானாலும், கல்லூரியானாலும், ஆசிரியர்களுக்கு திறமைக்கேற்ப சம்பளம், ஊக்க ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். மதிப்பெண்ணை இலக்காக கொண்ட தேர்வு முறைகள் மாற்றப்பட வேண்டும். நல்ல பண்புகள் இல்லாத கல்வி, வாழ்க்கைக்கு உதவாது. கல்விக்கு ஒதுக்கப்படும் தொகையை செலவாக கருதாமல், முதலீடாக கருதி, உயர்கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.தமிழக பொறியியல் கல்லூரிகளில் படித்து முடிக்கும் மொத்த மாணவர்களில், 15 சதவீதத்தினர் மட்டுமே வேலைக்கு தகுதியானவர்களாக உள்ளனர். இலவசங்களை அளிப்பதற்கு பதிலாக, கல்வி, மருத்துவ மையங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலாம்.வேலை தரும் நிறுவனங்களால் நிராகரிக்கப்படும், பி.இ., பட்டதாரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகளில் குறைந்த சம்பளத்தில் ஆசிரியர்களாக சேரும் அவலம் உள்ளது.

இவர்களிடம் படிக்கும் மாணவர்களின் தரம் எப்படி இருக்கும்? பள்ளி, கல்லூரி படிப்பின் போதே, ஆங்கிலத்தில் பேசும் திறன், குழு கலந்தாய்வு,மேடைப் பேச்சு, தலைமை பண்பு ஆகிய திறன்களை வளர்க்க பயிற்சி அளித்தால், படித்து முடிக்கும் அனைவராலும் வேலை பெற முடியும். ஆசிரியர் பயிற்சி மற்றும் நியமனத்துக்கு நீண்டகால திட்டம் வகுத்து, முதலில் தரமான ஆசிரியர்களை உருவாக்க வேண்டும்.தமிழில் பொறியியல் படிப்பு கொண்டு வருவதில் எனக்கு உடன்பாடு கிடையாது.அதற்கான பாடத் திட்டம், புத்தகங்களை முதலில் உருவாக்க வேண்டும். தமிழகத்தில் படிப்பை முடிப்பவர்கள் அனைவருக்கும் இங்கேயே வேலை கிடைப்பதில்லை. தேசிய அளவிலும், உலகளவிலும் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள், மாணவர்களின் இலக்காக இருக்கும் போது, தமிழில் மட்டுமே பொறியியல் பாடங்களை படிப்பது, வேலை பெற எந்த வகையிலும் உதவாது.

தொழில் துறையினரின் தேவைகளை கேட்டறிந்து, அதன் அடிப்படையில் பாடங்களை வடிவமைப்பது வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும்.நம் கல்லூரி, பல்கலைகள் மீது மக்களுக்கு நம்பகத்தன்மை இல்லை. மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு எந்த பல்கலையும் தீர்வு காண முன்வராததே காரணம்.பல்கலை துணைவேந்தர்கள் மக்கள் பணத்தில் அடிக்கடி வெளிநாடு செல்ல தடை விதிக்க வேண்டும். காரணம், வெளிநாடு சென்று திரும்புபவர்கள், ஆராய்ச்சியை மேம்படுத்தவோ பாடத்திட்டங்களில் புதுமையை புகுத்தவோ முயற்சிப்பதில்லை.பல்கலை துறைகளின் புதிய கண்டுபிடிப்பு, பதிவு செய்துள்ள காப்புரிமை எண்ணிக்கை, தேர்ச்சி சதவீதம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் துணைவேந்தர்களை அரசு கேள்வி எழுப்ப வேண்டும். சிறப்பாக செயல்பட்ட துணைவேந்தர்களுக்கு மட்டும் அனைத்து சலுகைகளும் வழங்கலாம்.அரசுக்கு நெருக்கமான யார் வேண்டுமானாலும் துணைவேந்தராகும் அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கல்வித் துறை மட்டுமல்ல, அனைத்து துறைகளின் செயல்பாடுகளும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். குறிப்பாக, மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நியமனம், பதவி உயர்வு, பாடத்திட்டம் வடிவமைப்பு, விடைத்தாள் மதிப்பீடு, நிதி நிர்வாகம் ஆகியவை வெளிப்படையாக இருக்க வேண்டும். இது அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கையை வரவழைக்கும்.

THANKS ; DINAMALAR

நபிகளாரின் இறுதிப் பேருரை

1417 ஆண்டுகளுக்கு முன் ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு பெருமானார்(ஸல்) அவர்கள் அரபாத் பெருவெளியில் உரை நிகழ்த்தினார்கள்:அதில் பத்து விசயங்களை தமது அன்புக் கட்டளைகளாக உலகின் முன் வைத்தார்கள்.

1. ( மக்களே! ) நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது எனக்குத் தெரியாது. இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே உங்களது உயிரும், உடைமையும்,கண்ணியமும் பரிசுத்தமானவையாகும். (இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில் தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது.)இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம் நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

2.  ( மக்களே! ) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது குடும்பமத்தினருக்கல்ல.,அவருக்கே வழங்கப்படும். தந்தை தன் பிள்ளைக்கோ,பிள்ளை தன் தந்தைக்கோ அநியாம் செய்யவேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ, பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்படமாட்டாது.

3.  ( மக்களே! ) அஞ்ஞான காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட) கொலைகளுக்கும், கொடுஞ்செயல்களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. முதலாவது எனது குடும்பத்தைச்சார்ந்த ரபீஆ இப்னுல் ஹாரிதின் கொலைக்கு பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக நிறுத்திவிட்டேன்.(அறியாமைக்காலத்தில் நிலவிய பழிக்குப்பழியும் உயிர்போக்கும் மடமையும் இனி கூடாது.)

4.  ( மக்களே! ) வட்டி வாங்குதல் இனி உங்களுக்குத் தடுக்கப்படுகிறது. அஞ்ஞான காலத்தில் ஏற்பட்ட வட்டித் தொகையனைத்தும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன. (கடன்பட்டவர்கள் முதலை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டால் போதுமானது.)முதலாவது எனது பெரிய தந்தையார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களுக்கு வரவேண்டிய வட்டித் தொகையனைத்தும் தள்ளுபடி செய்துவிட்டேன்.

5.  மக்களே! பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொகொள்ளுங்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்ளது போல், உங்கள் மீதும் உங்கள் மனைவியர் மீது உரிமையுண்டு). அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்ட (அமானிதம்) அடைக்கலப் பொருள்களாவர். அல்லாஹ்வின் பெயரால் அவர்களை உங்கள் மனைவியராகப் பொறுப்பேற்றிருக்கிறீர்கள். அவர்களின் கடமை, நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்கலாகாது. மீறினால் படுக்கையை விட்டு சிறிது காலம் விலக்கிவைக்கவோ,காயம் ஏற்படாதவாறு அடிக்கவோ செய்யுங்கள். (அதுபோல) உங்களது கடமை நீங்கள் அவர்களுக்கு வேண்டிய உணவு,உடைகளை வழங்கி (அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்து அவர்களது) நன்மைகளைப் பேணி வாருங்கள்.

6.  மக்களே! எனது வார்த்தைகளை கவனத்துடன் கேளுங்கள், கேட்டு நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எல்லா முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சகோதரரே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரே சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள! ஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாகக் கொடுத்தாலன்றி, மற்றவர் எடுப்பது (ஹராம்) தடுக்கப்படுகிறது. அநியாயம் செய்வதிலிருந்து கவனத்துடன் விலகிக் கொள்ளுங்கள். உங்களிடம் இரு பெரும் பொக்கிஷங்களை விட்டுச்செல்கிறேன். அவைகளை பின்பற்றும் வரையில் வழி தவறமாட்டீர்கள். முதலாவது எனது திருவேதமான திருக்குர்ஆன்! இரண்டாவது இறைவனது தூதரான எனது வாழ்கை நெறிகள் (ஸுன்னத்)!

7.  மக்களே! எனக்குப்பிறகு எந்த ஒரு இறைதூதரும் (நபியும்) இல்லை. உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் வரப்போவதில்லை. தெரிந்து கொள்ளுங்கள்! உங்களைப் படைத்துக் காக்கும் உங்கள் இறைவனையே வணங்குங்கள். உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றி வாருங்கள். ரமளான் (என்னும் புனித) மாதத்தில் நோன்பு நோற்று வாருங்கள். உங்கள் செல்வத்துக்குரிய ஸகாத்தை (கணக்கிட்டு) உங்ளைப் பரிசுத்தப் படுத்துவதற்காக வழங்கி வாருங்கள். உங்கள் இறைவனின் இல்லத்திற்குச் சென்று ஹஜ்ஜுக் கடமையையை நிறைவேற்றி வாருங்கள். உங்களை ஆளும் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். இவற்றால் நீங்கள் உங்களுக்காகச் சித்தப்படுத்தப்பட்டுள்ள சுவனத்திற்குச் செல்வீர்கள்.

8.  மக்களே! உங்கள் இறைவனை மிக விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரணை செய்வான். எனக்குப்பிறகு நீங்கள் உங்ளுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிவிடவேண்டாம். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக சைத்தான் உங்களின் இந்த பூமியில் அவனை வணங்குவதைக் குறித்து (ஏமாற்றமடைந்து) முற்றிலும் நிராசையடைந்து விட்டான். ஆயினும் நீங்கள் மிக இலேசாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யவைத்து சைத்தானுக்கு (உடன்பட்டு) தலைவணங்குவீர்கள். அதன் மூலம் அவன் மகிழ்சியடைவான். ( எந்தவகையிலும் சைத்தானியச் செயல்களுக்கு இசைந்துவிடாதீர்கள்)

9.  மக்களே! அறிந்து கொள்ளுங்கள!. உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே! இறையச்சம் கொண்டோரைத்தவிர, 'அரபிகள் அஜமி (அரபியல்லாதார்)களை விட உயர்ந்தோருமல்ல. அதுபோல் அஜமிகள் அரபிகளைவிட உயர்ந்தோருமல்ல. வெள்ளை நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை விடவோ சிறந்தோருமல்ல. அனைவரும் ஆதமுடைய மக்களே! அந்த ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவரே. (ஜாதித்திமிர், நிறத்திமிர்,குலத்திமிர் அனைத்தையும் இதோ எனது காலின் போட்டு மிதிக்கிறேன்.) சொற்பொழிவை முடித்த வள்ளல் பெருமானார்(ஸல்) வெள்ளம்போல் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கிக் கேட்டனர்.

10.  ( மக்களே! ) இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா? இறைவன் எனக்களித்த தூதை நிறை வேற்றிவிட்டேனா? என என்னைப்பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது), இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறுவீர்கள்? 'நிச்சயமாக (இறைவனது கட்டளைகளை) எங்களுக்கு) அறிவித்துவிட்டீர்கள்! இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாக நிறைவேற்றிவிட்டீர்கள்! எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்.!' அந்த மாபெரும் மனிதக்கடலிலிருந்து ஒருமுகமாக வான்முட்ட எழுந்தது இந்தப் பேரொலி. இதைக்கேட்ட இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி தங்களது திருக்கரங்களை உயர்த்தி,' அல்லாஹும்மஷ்ஹது! அல்லாஹும்மஷ்ஹது!! அல்லாஹும்மஷ்ஹது!!! இறைவா!நீயேஇதற்கு சாட்சி! இறைவா!நீயே இதற்கு சாட்சி! இறைவா! நீயே இதற்கு சாட்சி! என்று மும்முறை முழங்கினார்கள்.மேலும் இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கும் என்னுடைய இந்தச் செய்திகளைத் தெரிவித்துவிடுங்கள். ஏனெனில் நேரில் கேட்போரைவிட கேள்விப்படுவோரில் சிலர் நன்கு விளக்கமுடையோராக இருப்பர். 

Sunday, April 24, 2011

யா அல்லாஹ் இவர்களுக்கு ஹிதாயத்தை கொடு...

முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு - நீதிபதி மார்கண்டேய கட்ஜு

17.04.2011 அன்று டெல்லியில் நடந்த INSTITUTE OF OBJECTIVE STUDIES என்ற கருத்தரங்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு பேசும் பொழுதுஇந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும். இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும், இந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும், கஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும் பல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன. ஆனால், உண்மை எதுவெனில்,மைசூர் மன்னன் மாவீரன் திப்பு சுல்தான் 153 கோயில்களுக்கு மானியம் கொடுத்துள்ளார்.மேலும் சமஸ்கிருதம்- உருது மொழி இணைந்த இந்திய கலாச்சாரத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
ஆனால் அதனை மறைக்க முகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி என்று கூறினார்.தன்னுடைய இந்த உரைக்கு ஆதாரமாக வரலாற்று ஆசிரியர் B.N.பாண்டே எழுதிய “History in the Service of Imperialism” வரலாற்று நூலை மேற்கோள் காட்டி உள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பேச்சு உச்ச நீதி மன்றத்திலும் வெளிப்படவேண்டும். ராமர் கோயிலை இடித்து தான் பாபர், பள்ளிவாசல் கட்டினார் என்ற வாரலாற்று திரிப்பை உடைக்க மார்கண்டேய கட்ஜு முன்வரவேண்டும். அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அயோக்கிய தீர்ப்பை ரத்து செய்து, உச்ச நீதி மன்ற தானாக இவ்வழக்கை மறுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

Saturday, April 23, 2011

குஜராத் படுகொலை : முஸ்லிம்களுக்கு பாடம் புகட்டுவதற்காக மதக் கலவரத்தை வேண்டுமென்றே அனுமதித்தார் மோடி!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட மதக் கலவரத்தை குஜராத்தின் முதலமைச்சர் நரேந்திரமோடி வேண்டுமென்றே நடக்க அனுமதித்திருந்தார்

என்று மூத்த போலிஸ் அதிகாரி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கலவரத்தின்போது உதவி கோரி மக்கள் விடுக்கும் அழைப்புகளை புறந்தள்ளுங்கள் என்று போலிஸ் அதிகாரிகளுக்கு நரேந்திரமோடி உத்தரவிட்டிருந்த கூட்டத்தில் தானும் கலந்துகொண்டிருந்ததாக சஞ்சீவ் பட் என்ற அந்த உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் “கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தால் இந்துக்களிடையே பெரும் கொந்தளிப்பு காணப்படுகிறது. இத்தகைய சம்பவம் இனி நிகழாதவாறு இஸ்லாமியர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.” என்று மோடி கூறியதாக அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தற்போது, அவர் மாநில ரிசர்வ் போலீஸ் பயிற்சி மையத்தின் முதல்வராக உள்ளார்.

எஸ்எஸ்எல்சிக்குப் பிறகு.... வாழ்வை வளமாக்கும் மேல் படிப்புகள்!

பள்ளிக் கல்வி பயிலும் ஒவ்வொருவருக்கும் முக்கியமான காலகட்டம் எதுவெனில் பத்தாம் வகுப்பு முடித்த பின்னர் என்ன படிக்கலாம் என்பதை தேர்வு செய்வதில்தான் உள்ளது. நாம் தேர்ந்தெடுக்கும் படிப்புதான் நம்மை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும். பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் இளைய தலைமுறையினருக்கு சில யோசனைகள் :


மூன்று வழிகளில் மேற்படிப்பு

பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மேல் படிப்பிற்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன. அவை :

1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு

2. பட்டய படிப்பு (டிப்ளமோ)

3. சான்றிதழ் படிப்பு (ITI)

பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்தெடுப்பது மேல் நிலை (+1,+2) படிப்புதான். அதை பற்றி முதலில் பார்ப்போம்.

1 . மேல் நிலைப் பள்ளி (+1,+2) படிப்பு :

அ. First Group எனப்படும் கணிதம், வேதியில், இயற்பியல், உயிரியல் பிரிவு : பெரும்பாலும் மாணவர்கள் விருப்பும் பிரிவு. இந்த பிரிவில் படிப்பதன் மூலம், பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma), மருத்துவம் (MBBS, BDS, B.Phar, Nursing etc...), சட்டம், ஆசிரியர் படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் மேல் படிப்பு படிக்கலாம். அரசு துறை, தனியார்துறை என பெரும்பாலான துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது.

இந்த பிரிவில் படிப்பது மிக சிறந்தது.

எதிர்காலத்தில் அதிக வேலைவாய்ப்பு உள்ள பிரிவு இதுதான், எனவேதான் இந்த பிரிவிற்க்கு அதிக போட்டி இருக்கும், மாணவர்கள் பெரும்பாலும் இந்த பிரிவில் படிக்க முயற்சி செய்யவும். குறிப்பிட்ட பள்ளிகளில் இந்த குரூப் கிடைக்காவிட்டால், இந்த குரூப் கிடைக்கும் பள்ளியில் சேருவது மிகவும் சிறந்தது.

ஆ. கணிதம், வேதியில், இயற்பில், கணினி அறிவியல் பிரிவு :

பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. (மருத்துவம் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது). மருத்துவத் துறை தவிர்த்து மற்ற பெரும்பாலான துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. First Group கிடைக்காத மாணவர்கள் இந்த குரூப் கல்வியை தேர்ந்தெடுக்கவும். அதிக வேலைவாய்ப்பு பெற்றுதரும் குரூப்பில் இதுவும் ஒன்று.

இ. வேதியில், இயற்பில், தாவரவியல், விலங்கியல் பிரிவு :

மருத்துவம் (MBBS, BDS, B.Phar, Nursing etc...) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. (பொறியியல் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது). அதிகமாக மருத்துவம் சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது

ஈ. Commerce, Accountancy, பொருளாதாரவியல் பிரிவு :

B.Com, CA (Charted accountant ), M.Com படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த குருப் கல்வியை தேர்ந்தெடுக்கலாம். அரசு வேலை, Accountancy துறையில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளது.

உ. வரலாறு, பொருளாதாரவியல் :

எதிர்காலத்தில் B.A., M.A., படிக்கலாம். அரசு தேர்வுகள் மூலம் வேலைவாய்ப்பு, ஆசிரியர் பணிகள் போன்றவற்றில் வேலைவாய்ப்புகள் உள்ளன

ஊ. Vocational குரூப் :

தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகள் அடங்கிய பிரிவு, பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma ) சார்ந்த படிப்புகள் படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது.


II. பட்டய படிப்பு (டிப்ளோமா):

இது 3 ஆண்டு படிப்பு. தொழில் நுட்பத் துறைகள் , மருத்துவத் துறைகள், கடல்சார் துறைகள், ஆசிரியர் படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் டிப்ளோமா படிப்புகள் உள்ளன. தொழில் நுட்ப டிப்ளோமாவில் Automobile, EEE, ECE, Mechanical, civil etc... போன்ற துறைகள் சிறந்த துறைகள். மேலும் பல சிறந்த பிரிவுகள் உள்ளன. டிப்ளோமா படித்து மேற்கொண்டு பொறியியல் (B.E/B.Tech) படிக்கலாம். பொறியியல் (B.E/B.Tech) படிக்க ஆர்வம் உள்ளவர்கள் டிப்ளோமா படித்து பொறியியல் படிப்பது சிறந்ததல்ல (Not Advisable ).

12 ஆம் வகுப்பு முடித்து பொறியியல் படிக்கவும். டிப்ளோமா மட்டும் படிக்க விரும்புவர்கள் 10 -ஆம் வகுப்பிற்கு பிறகு டிப்ளோமா படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளது.

III. சான்றிதழ் படிப்பு (ITI):

இது ஓராண்டு படிப்பு. Fitter welder, machinist , AC mechanic போன்ற துறைகள் சிறந்த துறைகள். இன்னும் மருத்துவம் சார்ந்த, தொழில் நுட்பம் சார்ந்த பல்வேறு படிப்புகள் ITI-ல் உள்ளது. உடனடி வேலைவாய்பிற்க்கு ஏற்ற படிப்பு, ஆனால் அதிக சம்பளம் கிடைக்காது.

எஸ்எஸ்எல்சி முடித்த பிறகு வேலை வாய்ப்பு

(கோரிக்கை: தயவு செய்து மாணவர்களை 10 -ஆம் வகுப்பு மேல் படிக்க வையுங்கள்)

1. சிறு தொழில் நுட்ப பயிற்சிக்கு பிறகு வேலை. (தமிழகத்தில் அரசு, மாணவர்களுக்கு இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் தொழில் பயிற்சி அளித்து வருகின்றது.)

2. இராணுவத்தில் வேலை மற்றும் அரசு வேலை, இரயில்வேயில் கலாசி வேலை போன்றவை

3. Date Entry வேலைகள்

4. சமுதாய கல்லூரிகள் மூலம் 6 மாத பயிற்சிக்கு பிறகு உடனடி வேலைவாய்ப்பு.

மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு , ITI, டிப்ளோமா படிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள sithiqu.mtech@gmail.com என்ற ஈ - மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

THANKS : THATSTAMIL

Thursday, April 21, 2011

டிவி பார்க்கும் குழந்தைகளுக்கு இதய நோய் பாதிப்பு : ஆய்வு

சிட்னி : தினமும் அதிகநேரம் டிவி பார்க்கம் குழந்தைகளுக்கு இதய நோய் வர மிக அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவ ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை அனைவரது வீட்டிலும் தவறாமல் இடம்பெறும் சாதனம் டிவி. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் பேசி, விளையாடுவதை விட டிவி பார்ப்பதில் தான் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். ஓர் இடத்தில் அமராமல் ஓடி ஆடும் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க சிரமப்படும் தாய்மார்களோ, குழந்தைகயை ஓர் இடத்தில் அமர வைக்க டிவி.,யில் ஏதாவது கார்டூன் சேனலை போட்டுவிட்டு உணவு கொடுக்கின்றனர். விளைவு, இன்றைய இளம் தலைமுறையினர் விடிந்தது முதல் இரவு தூங்கும் வரை டிவி பார்ப்பதையே பிரதான பொழுது போக்காக கொண்டுள்ளனர். இவ்வாறு அதிக நேரம் டிவி பார்க்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்த ஆய்வில் இறங்கியது சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு.

3-6 வயதிலான சுமார் 1500 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவு பல அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி சராசரியாக நாள் ஒன்றிற்கு 2 மணி நேரம் டிவி பார்க்கும் குழந்தைகள், 40 நிமிடங்கள் வரை ஓடி,ஆடி விளையாடும் செயல்களில் ஈடுபட்ட போதிலும் அவர்களின் கண்களின் பின்புறம் உள்ள நரம்புகளை சுருக்கி விடுவதுடன் இதயம் உள்ளிட்ட பல முக்கிய உறுப்புக்களுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் நரம்புகளையும் சுருக்குகிறது. இதனால் இதயம் உள்ளிட்ட பல உறுப்புகளுக்கான சீரான ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இதுவே நாளடைவில் இதய நோய், ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோயை ஏற்படுத்த மிக அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக எச்சரிக்கிறது. அதேசமயம் நாள் ஒன்றிற்கு சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே டிவி பார்த்துவிட்டு, அதிக நேரம் விளையாடும் குழந்தைகளின் ரத்த ஓட்டம், இரண்டு மணி நேரம் டிவி பார்த்த குழந்தைகளின் ரத்த ஓட்டத்தை விட சிறப்பாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தைகள் நாள் ஒன்றிற்கு சுமார் 2 மணி நேரம் ஓடி, ஆடி விளையாட வேண்டும். இதனை பெற்றோர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும்.

THANKS : DINAMALAR

Tuesday, April 19, 2011

மே 14ந் தேதி +2 தேர்வு முடிவு: மே 25ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு

பிளஸ் 2 தேர்வு முடிவு, அடுத்த மாதம் (மே) 14ந் தேதி வெளியாகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு, மே 25ந் தேதி வெளியிடப்படுகிறது.


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு, கடந்த மாதம் (மார்ச்) 2 ந் தேதி தொடங்கியது. இந்த தேர்வை 1,890 மையங்களில் 7 லட்சத்து 74 ஆயிரத்து 205 மாணவ மாணவிகள் எழுதினார்கள். அவர்களில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 102 பேர் மாணவிகள். தனித்தேர்வர்கள் 57 ஆயிரத்து 56 பேர் ஆவார்கள். தேர்வு மார்ச் 25 ந் தேதி முடிவடைந்தது.

தேர்வு முடிந்ததும் தமிழ்நாட்டில் 43 மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில விடைத்தாள்கள் திருத்தும் பணி மார்ச் மாதம் 23 ந் தேதி தொடங்கியது. இந்த இரு பாடங்களின் மதிப்பீட்டில் மட்டும், மாணவர்களின் பதிவு நம்பர் அப்படியே இருக்கும்.

ஆனால் மற்ற பாடங்களின் மதிப்பெண்கள் தொழிற்கல்வியில் சேருவதற்கு மிகவும் முக்கியம் என்பதால் மாற்று (டம்மி) நம்பர் கொடுத்து விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. அதன்படி கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் முதலிய பாடத்திற்குரிய விடைத்தாள்கள் திருத்தும் பணி மார்ச் மாதம் 28ந் தேதி தொடங்கி முடிவடைந்துவிட்டது.

தமிழ் மற்றும் ஆங்கில விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. அடுத்த கட்டமாக மதிப்பெண்கள் கம்ப்ழூட்டரில் பதிவு செய்யும் வேலை நடைபெறும்.

73/4 லட்சம் மாணவ மாணவிகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மே மாதம் 14 ந் தேதி வெளியிட பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 28 ந் தேதி தொடங்கி ஏப்ரல் 11 ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வை 6,520 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 56 ஆயிரத்து 956 மாணவ மாணவிகள் எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

81/2 லட்சம் மாணவ மாணவிகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே மாதம் 25 ந் தேதி வெளியிட பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

THANKS : NAKKEERAN

Monday, April 18, 2011

ஏழ்மையை ஒழிப்பதில் இந்தியா அபார முன்னேற்றம் : உலக வங்கி தகவல்

வாஷிங்டன் : "உலகில் வளர்ந்து வரும் நாடுகளில், மூன்றில் இரண்டு பங்கு நாடுகள், ஏழ்மை மற்றும் பட்டினியை நன்றாக சமாளித்து, வளர்ச்சி இலக்கை அடைந்து வருகின்றன. இதில், இந்தியாவும் ஒன்று' என, உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக, உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாவது:உலகில் வளர்ந்து வரும் நாடுகளில், மூன்றில் இரண்டு பங்கு நாடுகள், ஏழ்மை மற்றும் பட்டினியை நன்றாக சமாளித்து, வளர்ச்சி இலக்கை அடைந்து வருகின்றன. குறிப்பாக இந்தியா, சீனா போன்றவை நல்ல வளர்ச்சி பெற்றுள்ளன.ஏழ்மையை ஒழிப்பதில் அபார முன்னேற்றம் கண்டுள்ளன. மேம்பட்ட பொருளாதார கொள்கைகள், விரைவான வளர்ச்சிகளால், 2015ம் ஆண்டிற்குள் இந்த நாடுகள் இன்னும் மேம்பட்ட வளர்ச்சியை பெறும்.உலகில் மிகவும் ஏழ்மையாக இருப்பவர்களை பாதியாகக் குறைக்க, தற்போதைய பொருளாதாரம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

உலகில் ஒரு நாளைக்கு 56 ரூபாய்க்கும் குறைவான வருமானத்தில் வசிப்பவர்களின் எண்ணிக்கை, 2015ல், 88 கோடியே 30 லட்சமாக இருக்கும். இதுவே, 2005ல், 140 கோடியாகவும், 1990ல், 180 கோடியாகவும் இருந்தது.வளர்ந்து வரும் நாடுகளில், கல்வியிலும் ஆண், பெண் பாரபட்சம் குறைந்து வருகிறது. பாதுகாப்பான குடிநீர் கிடைக்கிறது. வறுமையை முற்றிலும் ஒழிக்கும் நிலையை, பலநாடுகள் அடைந்துள்ளன. அதேநேரத்தில், இந்த நாடுகளில், 45 சதவீத அளவுக்கு சுகாதார பிரச்னை உள்ளன. பேறு கால இறப்பு வீதம், 39 சதவீதமாகவும், குழந்தைகள் இறப்பு விகிதம், 38 சதவீதமாகவும் உள்ளன.இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

THANKS : DINAMALAR

இருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்!!

நான் சரியான இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கிறேனோ இல்லையோஇருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 
மார்க்க சம்பந்தமான அறிவு எனக்கு இருக்கிறதோ இல்லையோஇருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
என் மனைவி – மக்கள்குடும்பத்தினருக்கு நான் இஸ்லாத்தைப் பற்றி கூறி நல்வழிப் படுத்துகிறேனோ இல்லையோஇருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 
எனது இல்லத்தில் இஸ்லாத்திற்கு மாறான செயல்கள் நடப்பதைக் கண்டும் காணாமல் இருந்து விடுகிறேன்இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 
மறுமை நாளைக்காக நான் எதை சேர்த்து வைத்திருக்கிறேன் என்று எண்ணிப் பார்க்க இந்த அவசர கால உலகத்தில் எங்கே முடிகிறது இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
 
ஐந்து வேளைத் தொழுவது கடமை என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் வேலைப் பளுவினால் என்னால் தொழமுடியவில்லைஇருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
ரமலானில் நோன்பு வைப்பது கட்டாயம் என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும். இருப்பினும் பசி தாகம் சமாளிக்க.. நோன்பு வைக்க என்னால் முடியவில்லை,இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
என் தொழிலில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. எனினும் கணக்குப் பார்த்து ஜகாத் கொடுத்திட மனம் இடம் தரவில்லைஇருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
என் வாழ்நாள் முழுவதும் ஓடி ஓடி உழைத்து ஓரளவு என் குடும்பத்திற்காக உழைத்து சேர்த்து ஓய்ந்து விட்டேன். இப்போது ஹஜ் செல்லும் அளவுக்கு என் உடலில் தெம்பு இல்லை இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
வீட்டில் அபிவிருத்தி வேண்டி மவ்லீது ராத்தீபுகளை புது புது மெட்டுகளில் ஓதி இறையருள் பெற முயற்சிக்கிறேன். இதெல்லாம் தவறு என்று உள்மனம் கூறுகிறது,இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 
உன்னையே வணங்குகிறோம்உன்னிடமே உதவி கோருகிறோம்! என்று தொழுகையில் ஓதிவிட்டு அவ்லியாக்கள்பெரியார்களிடம் உதவி தேடுவது என் இரத்தத்தில் ஊறிப்போய்விட்டதுஇருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 
என் நாட்டம் நிறைவேற சலவாத்துன்னாறியா 4444 தடவை ஓதி துஆ கேட்கிறேன். இது குர்ஆன்-ஹதீஸில் இல்லை என்றாலும் என் மன ஆறுதலுக்காக,அபிவிருத்திக்காக இதை ஓதுவதற்கு ஏற்பாடு செய்கிறேன். இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 
பால்கிதாப்-பில்லி-சூனியம்-ஏவல்-தகடு-தட்டு-தாயத்து-பேய்-பிசாசு-ஆவி எல்லாம் நம்புகிறேன்இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 
பூனை குறுக்கே செலவதுபல்லி தலையிலே விழுவதுஆந்தை அலருவதுகாகம் கரைவதுஸஃபர் பீடை மாதம்-கெட்ட சகுனம் என எல்லாம் பார்த்து பார்த்து ஒவ்வொரு வேலையும் செய்கிறேன்இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 
பலர் பாராட்ட கத்னா-பூப்புனித நீராட்டு விழாவை விமரிசையாக நான் நடத்துகிறேன்இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 
புதுமனை புகுவிழாவிற்கு பால் காய்ச்சி விழா நடத்துகிறேன். குழந்தைக்கு தர்காவில் சென்று முடி இறக்கி மொட்டை போடுகிறேன். அவ்லியா சன்னிதானத்தில் ஆடு,சேவல் பலி தருகிறேன்இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 
என் அம்மாவின் கடைசி ஆசைக்காகத்தான் மஹர் கொடுத்து மணம் புரியாமல் வரதட்சணை வாங்கிக் கொண்டு திருமணம் செய்தேன். என் மனைவியின் ஆசைக்காகத்தான் சுன்னத்தான தாடியை சிரைத்துவிட்டேன்இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 
என் தந்தையின் வற்புறுத்தலால் என் மகன் திருமணத்தை மேள தாளத்துடன் யானை ஊர்வலத்துடன் மிக ஆடம்பரத்துடன் நடத்துகிறேன்இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 
வட்டி வாங்கக்கூடாது என்று வான் மறைக்கூறினாலும் கூட என் தொழில் வளர்ச்சிக்காக குறைந்த வட்டியில் வீடுகட்டகடை ஆரம்பிக்கபைக் சவாரிக்காக வட்டி வாங்க வேண்டிய நிர்பந்தம். என்ன செய்வதுஇருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 
லாட்டரி சூதாட்டம்தான். அரசு அதனை தடை செய்திருந்தாலும் என்னநான் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை வாங்கி மறைத்து விற்பனை செய்து வருகிறேன்,இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 
குடி குடியைக் கெடுக்கும்! மது ஹராம்தான்ஆனால் எனக்கு டாஸ்மார்க் கம்பெனியில்தான் வேலை கிடைத்தது. கைநிரைய சம்பாதிக்கிறேன்இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 
சினிமா பார்க்கக் கூடாதாம்! இந்த காலத்தில் நடக்கக்கூடிய காரியமா என்னபேரும் புகழும் பேரின்பமும் பெற்றுத் தரும் கனவுத் தொழிற்சாலையல்லவா அது! பாம்பு மட்டும்தான் படம் எடுக்குமாமக்கள் பாராட்டும் விதமாக நான் கூட படம் எடுக்கிறேன்இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 
அளவு நிலுவையில் மோசடி கூடாதாம். வியாபாரத்தில் பொய் கூடாதாம். (பரக்கத்) இறையருள் கிடைக்காதாம். பொய் சொல்லாமல்மோசடி செய்யாமல் எப்படி விரைவில் பணக்காரன் ஆவதாம்இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 
ஒரு சாண் நிலம் ஆக்கிரமிப்பு செய்தாலும் மறுமையில் ஒரு பூமி அளவு நிலத்தை நான் சுமக்க வேண்டுமாம். பலரின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தஅந்த நிலத்தை திரும்பக் கொடுத்து விட்டு என் பிள்ளைகளுக்கு எதைக் கொடுத்துவிட்டுப் போவதாம்இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 
மண்ணாசைபெண்ணாசைபொன்னாசை கூடாதாம். பிறகு எதற்கு உலகத்தில் வாழ்வதாம்இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 
என் குடும்பத்தில் என் நான்கு பிள்ளைகள்நான்கு மத்ஹப்களில் இருக்கின்றனர். நானும் என் தம்பிகளும் எல்லா அரசியல் அமைப்பிலும் அங்கம் வகிக்கிறோம்,இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 
கடவுள்பாவம்புண்ணியம்நீதிநியாயம்உண்மை என்கிறவற்றில் நம்பிக்கை கிடையாது. ஏதோ உலகத்திலே பிறந்துட்டோம். முளைக்கிற செடி வளர்ந்து மரமாகிற மாதிரி நாமும் வளர்ந்துட்டோம். ஏதோ வாழந்துட்டு இருக்கிறோம். ஊரோடு இணைந்து போகத்தானே வேண்டும். இஸ்லாமிய அடிச்சுவட்டில் இக்காலத்தில் வாழ்ந்தால் உலகம் நகைக்காதாஇருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

(
அல்ஜன்னத்) ஆசிரியர்: போதும்! போதும்!! கொஞ்சம் இடம் கொடுத்தாபக்கம் பக்கமாக மானம்-விமானம் ஏற்றிடுவீங்க போலிருக்கே..?.
ரேசன் கார்டிலும்வாக்காளர் அட்டையிலும்பள்ளி கல்லூரி சான்றிதழ்களிலும் மட்டுமே முஸ்லிமாக வாழ்பவர்களே! சிந்தியுங்கள். நமது வாழ்வும். மரணமும் தூய இஸ்லாத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்திட வேண்டும் என்பதை உள்ளத்தில் பதித்துக் கொள்ளுங்கள். 

கல்வித்துறையில் கவனம் தேவை

நாகரிகமான, அறிவுத்திறன் சார்ந்த சமுதாயம் அமைய கல்வியே அடிப்படை. கல்வித்துறைக்கு அரசு கொடுக்கும் முக்கியத்துவம், தீட்டும் திட்டங்கள் வருங்கால சமுதாயத்தை நல்ல வழியில் இட்டுச் செல்லும். அந்தவகையில், அடுத்து அமையவுள்ள அரசு, கல்வித்துறைக்கு செய்ய வேண்டிய முக்கிய பணிகளை விவரிக்கிறார், "பொதுப் பள்ளிக்கான மாநில மேடை'யின் பொதுச் செயலர் பு.பா.கஜேந்திரபாபு.

கல்வித்துறையை பள்ளிக்கல்வி, உயர்கல்வி என அரசு இரண்டாக பிரித்து திட்டங்களை தீட்டி வருகிறது. இதில் அடிப்படை விஷயமாக தொடக்கப் பள்ளி கல்வி அமைகிறது. தொடக்கப் பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் அரசு நியமிக்கிறது. ஆனால், ஒரு பள்ளியில், ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் இருக்கும்போது, இதில் படிக்கும் 250 மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியர் தான். இந்நிலையில், 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது, 250 மாணவர்களுக்கு ஒருவர் என்று மாறுகிறது. எனவே, வகுப்புவாரியாக உள்ள மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு, ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.பள்ளிகள் சுகாதார வசதி, கற்றல் சூழல் ஆகிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கொண்டதாக உருவாக்க வேண்டும். இதன்மூலமே, பெற்றோரே விரும்பி, குழந்தைகளை அப்பள்ளிகளில் சேர்ப்பர். 10 வயதுக்கு உட்பட்ட மாணவனுக்கு இசை, ஓவியம், கைத்தொழில் போன்றவற்றையும் சேர்த்து கற்பித்தல் வேண்டும். இதற்கு, தனியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தொடக்கப் பள்ளிகளில், உடற்பயிற்சி ஆசிரியர் என்ற ஒருவரே இல்லை. உடற்பயிற்சி ஆசிரியரை நியமித்தால்தான், இளம் வயதிலிருந்து மாணவனுக்கு உடற்பயிற்சியோடு, விளையாட்டையும் கற்றுக் கொடுக்க முடியும். விளையாட்டை முறையாக போதிப்பதோடு, ஆர்வத்தையும் தூண்ட முடியும்.

"புத்தகப் பூங்கொத்து' என்று முறையை தொடக்கப் பள்ளிகளில் அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில், புத்தகங்களை வகுப்பறைகளில், கொத்தாக தொங்கவிட்டு, அதில் ஒன்றை அவனே தேர்வு செய்து படிக்க விடுகின்றனர். இதற்கு பதில், பள்ளிகளில் நூலகங்களைத் தொடங்கி, அதற்கு உதவியாளர் ஒருவரையும் நியமிப்பது சிறந்ததாக இருக்கும்."தேசிய கல்வித் திட்டம் 2005' மூலம், கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் உதவியாளனாக மாறவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் நமது கல்வி, "வங்கி முறைக் கல்வியாக' இருக்கிறது. இதில், "ஆசிரியரிடம் உள்ள அறிவை' மாணவனுக்கு மாற்றம் செய்கின்றனர். இதற்கு பதில், "வகுப்பறையில் மாணவனை பார்வையாளனாக வைத்திருக்காமல், பங்கேற்பாளனாக' மாற்றவேண்டும்.

"தேசிய பாடத் திட்டம்' மூலம், 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் விரிவாக்கம். செய்முறைத் தேர்வுக்கு மாணவனை உட்படுத்த வேண்டுமானால், ஒவ்வொரு பள்ளியிலும் ஆய்வகங்கள் அவசியம். மேலும், செய்முறைத் தேர்வை மாணவன் தனியாகச் செய்ய, அவனை தயார் செய்ய பயிற்சி அளிக்க வேண்டும்.அரசு அறிமுகம் செய்துள்ள தேசிய கல்வித் திட்டம் குறித்து தவறான பரப்புரைகளை செய்து வருகின்றனர். இதை அரசு தடுத்து நிறுத்துவதோடு, இத்திட்டத்தில் பயிலும் மாணவனுக்கு தாழ்வு மனப்பான்மை வராமல் தடுத்து தன்னம்பிக்கையை ஊட்டவேண்டும். உயர்நிலை பள்ளிகளில் மொழி ஆசிரியர்களை நியமித்து, அவர்கள் தான் மொழிப் பாடங்களை கற்பிக்க வேண்டும். அப்போது, அடிப்படை இலக்கணத்தை முறையாக கற்பிக்க முடியும்.

ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தேர்வு செய்கிறது. இதற்கு, நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இத் தேர்வில் அனைத்து மாணவர்களும் பங்கேற்கும் வகையில், அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.பொதுப் பாடத் திட்டம் மூலம், உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு, "புராஜக்ட்' தயார் செய்து சமர்ப்பிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். இதைக் கண்காணிக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இதுன்மூலம் தான், உற்பத்திக்கு தேவையான மனித உழைப்பை தயார் செய்வதைத் தவிர்த்து, சமூக நோக்குடைய மனித சக்தியை உருவாக்க முடியும்.
மேல்நிலைப் பள்ளியில், "சிறப்புத் தமிழ்' என்ற பாடம், தமிழகத்திலேயே ஒரு பள்ளியில் மட்டும் தான் உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 25 ஆண்டுகளாக, தமிழ் ஆசிரியர்கள் நியமனம் மேல்நிலைப் பள்ளிகளில் இல்லை. எனவே, தமிழ் ஆசிரியர்கள் நியமனத்தை உடனே தொடங்க வேண்டும்.இதனால், பி.ஏ., தமிழ் படிப்பை தேர்வு செய்பவர்கள் பெரும்பாலும், வணிகவியல் போன்ற பிற பாடங்களைப் படித்தவர்களாக உள்ளனர். எனவே, "சிறப்புத் தமிழ்' பாடம் அனைத்துப் பள்ளிகளிலும் இருக்கவேண்டும். மனப்பாடம் செய்து மதிப்பெண் பெறும் முறையை மாற்றவேண்டும்.

பு.பா.கஜேந்திரபாபு, பொதுச் செயலர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை.

THANKS : DINAMALAR