இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Tuesday, May 31, 2011

மாணவர்கள் அரசின் கல்வி உதவி பெறுவதற்கான விண்ணப்படிவங்கள்

அரசின் கல்வி உதவி பெறுவதற்கான விண்ணப்படிவங்கள்
(10,12 ஆம் வகுப்பு  மற்றம் கல்லுரி பயில்பவர்களுக்கு)






THANKS : TNTJ.NET

செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது!


ரியாத்: செளதி அரேபியாவில் 6 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றத் தடை விதிக்க அந் நாடு திட்டமிட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இது குறித்து செளதியின் அல் வதான் செய்தித் தாளுக்கு அந் நாட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அதெல் அல் பகி அளித்துள்ள பேட்டியில், செளதியில் உள்நாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. வேலைவாய்ப்பைப் பெற உள்நாட்டினரிடையே போட்டியை உருவாக்கி, அவர்களது பணித் திறமையை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் வெளிநாட்டினர் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேல் செளதியில் பணியாற்ற தடை விதிக்கப்படும். இந்த சட்டத்தை கொண்டு வந்த பின், அதை அமலாக்க வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு 5 மாத கால அவகாசம் வழங்கப்படும்.

கறுப்பு சந்தையில் உலவும் விசாக்களை 99 சதவீதம் கட்டுப்படுத்தவும் புதிய நடைமுறைகள் கொண்டு வரப்படும் என்றார்.

இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்தால் பல லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படுவர். இந்த ஆண்டு இறுதிக்குள் செளதி அரேபியாவில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டவுள்ளது குறிப்பிடத்தக்கது.
http://gulfnews.com/news/gulf/saudi-arabia/saudis-to-limit-stay-of-expat-workers-1.815142

Sunday, May 29, 2011

புகையிலையால் விளையும் தீங்கு: பாக்கெட்டுகளின் மீது புதிய படங்கள்!

புகையிலையால் ஏற்படும் தீங்குகளை விளக்கும் விதமாக, புகையிலை பொருட்களின் பாக்கெட்டுகளில், புதிய எச்சரிக்கை படங்கள் அச்சிடப்படும்  என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

பீடி, சிகரெட், குட்கா போன்ற புகையிலை பொருட்கள், உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படுத்துவதோடு புற்று நோயை ஏற்படுத்தும் ஆபத்தும் இருப்பதாக மத்திய அரசு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதன் காரணமாக அந்த பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகளில் எச்சரிக்கை வாசகங்களும் படங்களும் அச்சிடப்பட்டு வருகின்றன.
இதுவரை புகையிலை பொருள் பாக்கெட்டுகளில் தேள், சேதம் அடைந்த நுரையீரல் போன்ற படங்கள் அச்சிடப்படு வருகின்றன. சிகரெட் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை வாசகங்களுடன் சேதம் அடைந்த நுரையீரல் படம் அச்சிடப்படுகிறது.

வாய் புற்று நோய்க்கு புகையிலை பொருட்களை சுவைப்பதுதான் முக்கிய காரணம் என்று  இந்தியாவில் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி குலாம் நபி ஆசாத் சமீபத்தில் தெரிவித்திருந்தார். புகை பிடிப்பதை விடவும், புகையிலை பொருட்களை அப்படியே சுவைப்பதுதான் உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் என்பதால், புகையிலை பொருட்கள் உள்ள பாக்கெட்டுகளின் மீது கடுமையான எச்சரிக்கை படங்கள் இடம்பெறும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இது தொடர்பாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வருகிற டிசம்பர் 1-ந் தேதி முதல் புகையிலை பொருட்களின் பாக்கெட்டுகளின் மீது புதிய வாய் புற்றுநோய், நுரையீரல் புற்று நோய் ஆகியவை பற்றிய படங்கள் இடம் பெறும் என்று சுகாதார துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆண்டுக்கு ஒரு முறை இவ்வாறு புகையிலை பொருட்களின் பாக்கெட்டுகளின் மீது படங்கள் அச்சிடப்படுவது மாற்றப்பட்டு வந்தது. புகையிலை பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று இனி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை எச்சரிக்கை படங்களை மாற்றுவது என அரசு தீர்மானித்து உள்ளது.

Saturday, May 28, 2011

குஜராத்தில் ஊழல் மலிந்து கிடக்கின்றது – அண்ணா ஹசாரே

நிலம் கையகப்படுத்துவது உள்பட நில விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கிராம சபைகளுக்கு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு சமூக நல ஆர்வலர் அண்ணா ஹஸாரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பல்வேறு சமூகக் குழுக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆமதாபாதில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பின் அண்ணா ஹஸாரே கூறியதாவது: குஜராத்தில் ஊழல் மலிந்துள்ளது என்பது உரையாடல்களில் இருந்து தெரியவந்துள்ளது.

முதல்வர் நரேந்திர மோடிக்கு இரண்டு வேண்டுகோள்கள் விடுக்கிறேன். ஒன்று, மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்பட வேண்டும்.
இரண்டு, கிராமங்களில் உள்ள நிலங்கள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கிராம சபைகளுக்கு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.

ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அடுத்து, தொழிற்சாலைகளுக்காக விவசாய நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. அதை குஜராத்திலிருந்துதான் துவக்க வேண்டியிருக்கும் என கருதுகிறேன் என்றார் ஹஸாரே.

இந்தக் கலந்துரையாடல்களில் சமூக நல ஆர்வலர்கள் சுவாமி அக்னிவேஷ், அரவிந்த் கேஜ்ரிவால், மல்லிகா சாராபாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tuesday, May 24, 2011

பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைகிறது : மத்திய அரசு கவலை

புதுடில்லி : ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையை விட, பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதையடுத்து, இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில், மத்திய அரசு இறங்கியுள்ளது.

மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொடர்பான விவரங்கள், சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில், ஆண் - பெண் விகிதாசாரங்களில், பெரிய அளவில் வேறுபாடு இருந்தது தெரியவந்தது. ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையை விட, பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும், கடந்த சில ஆண்டுகளாக, பெண் குழந்தைகளின் விகிதாசாரம், வீழ்ச்சியடைந்து வருவதும் தெரியவந்தது.இது, மத்திய அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, பிரதமர் அலுவலகம் சார்பில், உயரதிகாரிகள் கூட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில், கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சியை கண்டறிவதற்காக பயன்படும் "ஸ்கேனிங்' வசதியை, சட்டவிரோதமாக பயன்படுத்தி, கருவிலிருக்கும் குழந்தை, பெண்ணாக இருப்பது தெரியவந்தால், அதை கருவிலேயே அழித்து விடும் நடைமுறை தொடருவதாக, அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். மேலும், குழந்தை பிறந்த பின், பெண் குழந்தையாக இருந்தால், அதை இரக்கமின்றி கொல்லும் நடைமுறையும், சில பகுதிகளில் இருப்பது குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சியை கண்டறிவதற்கான தொழில்நுட்ப வசதியில், மேலும் சில கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும், கருவை அழிப்பதற்காக மருந்துகள் பயன்படுத்தப்படுவதை தடை செய்வது குறித்தும், இது தொடர்பாக சட்டவிதிமுறைகளை உருவாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்புகள், விரைவில் வெளியாகும்.இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

THANKS : DINAMALAR

Thursday, May 19, 2011

பசியை தூண்டும் புதினா...

நமது அன்றாட சமையலில் சுவையும், மணமும் தரும் பொருட்களில் புதினாவிற்கு முக்கிய பங்குண்டு. புதினா பசியைத் தூண்டும் சக்தி கொண்டது. காரச் சுவையும், மணமும் கொண்டது. கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியைப் போல புதினாவும் அன்றாட உணவில் பயன்படுத்தப்படுகிறது.

புதினாவில் உள்ள சத்துக்கள்:

புதினாவில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.அதிக நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு நார்ச்சத்தும் இதனுள் அடங்கியுள்ளன. கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்றவையும் புதினாவில் உள்ளன. இது பல்வேறு மருத்துவ குணங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது.

வயிற்றுக்கோளாறுகள் நீங்கும்:

புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். ஆஸ்துமாவை புதினா கட்டுப்படுத்துகின்றது. வறட்டு இருமல், ரத்தசோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினா குணப்படுத்துகிறது. புதினாவை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஊளைச்சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்கவும், வாயுத் தொல்லையை போக்கவும் புதினா உதவுகிறது

புதினா கீரையுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு, சீரகம் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அருந்தினால் வாயுத் தொல்லை, வயிற்றுக் கோளாறுகள், சிறுநீரக கல்லடைப்பு போன்றவை நீங்கும். இந்த கசாயத்தை குழந்தைகளுக்கு கொடுத்து வர அவர்களுக்கு மலக்குடலில் உள்ள பூச்சிகள் சரியாகும்.

புதினா இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துச் சுத்தம் செய்து அதை வெய்யிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும்.நன்கு காய்ந்த பின் அதை எடுத்து எட்டில் ஒரு பங்கு சோற்று உப்பை ( 8 :1 )அத்துடன் சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும் தூளான பின் சலித்து எடுத்து பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பற்பொடியை தினசரி உபயோகித்து வந்தால் ஆயுள் வரை பல் சம்பந்தமான எந்த ஒரு நோயும் வராது. வாய் துர்நாற்றத்தை புதினா போக்குகிறது.

புதினா தேநீர்:

புதினாவை நிழலில் காயவைத்து, பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் புதினாவை சூப்செய்து சாப்பிடுவது நல்லது.

சிறு நீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாக் குடிநீர் தயார் செய்து குடித்தால் உடல் உஷ்ணம் தணியும், எரிச்சல் கட்டுப்படும். பெண்களுக்கு மாத விலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி பிரச்சினைக்கு புதினாக் குடிநீர் சிறந்த மருந்தாகும்.

புதினாவில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் மருத்துவ குணம் உடையது. புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து, சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பள பளக்கும்

மாமிசங்களை பதப்படுத்தும் ஆற்றல் புதினாவுக்கு உண்டு. பிரியாணி மற்றும் இறைச்சி வகைகளிலும் புதினா பயன்படுத்தப்படுகிறது.

THANKS : THATSTAMIL

கோடைத்தாக்குதலை சமாளிக்க...

கோடை ஆரம்பித்து விட்டாலே உடலின் ஆரோக்கியமும் பாதிப்புக்கு ஆளாகிறது. கிளீனிக்குகளில் கூட்டம் அலைமோதுவதால் கோடை காலத்துக்கு டாக்டர்களின் சீசன் என்ற பெயரும் உண்டு.

வெப்பநிலை மாற்றமே இதற்கு முக்கிய காரணம். சில நகரங்களில் 107 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். அப்போது வெளியில் சென்றால் தலைசுற்றல், மயக்கம், வாந்தி, வயிற்று வலி போன்ற “சன் ஸ்ட்ரோக்” பாதிப்புகள் ஏற்படும்.

உடலில் நீர்ச்சத்து குறைவதால் சோர்வு, தலைவலி, உடல்வலி, காய்ச்சல் போன்றவை ஏற்படும். வைரஸ் பாதிப்பால் அம்மை, தொண்டை வலி, சளி, இருமல், மூச்சுத் திணறல் போன்றவையும் கோடையில் தாக்குகிறது.

டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்களும் ஏற்படுகிறது. இந்த கோடை நோய்கள் வராமல் தடுக்க சில வழிமுறைகளை பின்பற்றினால் போதும்.

ஏசி அறையில் இருந்தவர்கள் உடனடியாக வெயிலில் வெளியே செல்லக் கூடாது. சிறிது நேரம் நிழலில் இருந்து விட்டு பின்னர் செல்ல வேண்டும்.

வெயில் காலத்தில் தண்ணீர் மூலம் நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால், வெளியிடங்களில் தண்ணீர் அருந்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் வயிற்றில் பாதிப்பு ஏற்படும்.

அதேபோல் கரும்புச்சாறு குடிப்பதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கரும்பு ஜூஸ் விற்கும் பலர் அதன் தோல் பகுதியை முற்றிலுமாக நீக்குவதில்லை. அதில் உள்ள அழுக்குகள் மற்றும் பூஞ்சைகள் கரும்பு ஜூஸில் கலக்கும் அபாயம் உள்ளது.

இதனால் வயிற்றுபோக்கு, மஞ்சள் காமாலை போன்றவை ஏற்படலாம். தெருவோர கடைகளில் வெட்டி வைத்து விற்கப்படும் பழங்களை வாங்கி சாப்பிடுவது, கண்ட இடங்களில் தண்ணீர் குடிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். வீட்டில் தண்ணீரை சுட வைத்து குடிக்க வேண்டும்.

தண்ணீர், திரவ உணவுகளை அதிகளவில் சாப்பிட வேண்டும். தர்பூசணி, பப்பாளி பழம், மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிடலாம். கோடையில் மாம்பழம் சிறந்தது என்றாலும், அதிகம் சாப்பிடக் கூடாது.

வியர்வை மூலம் உடலில் உள்ள தாதுக்கள் வெளியேறும் என்பதால், அதை ஈடுகட்ட எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம். கடைகளில் விற்கப்படும் ஐஸ்கட்டிகளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக்கூடாது.

அதன்மூலம் காலரா, மஞ்சள் காமாலை போன்றவை ஏற்படுகிறது. கோடையில் உணவு சீக்கிரம் கெட்டுவிடும் என்பதால், தயாரித்தவுடன் சாப்பிட வேண்டும். தாமதமாக பிரிட்ஜில் வைக்கப்படும் உணவு நச்சாக மாறும் வாய்ப்பு உள்ளது. கோடையில் மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், நார்சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

ஆடை விஷயத்திலும் கவனம் தேவை. மெல்லிய நிறத்தினாலான பருத்தி ஆடைகளை அணிவது  சிறந்தது. ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

மெத்தை, சோபாக்களில் படுப்பதை தவிர்த்து, கோரைப் பாய்களில் படுக்க வேண்டும். கோடையில் கொசுக்கள் மூலமும் பரவும் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது.

ஏர்கூலர் பயன்படுத்துபவர்கள், அதில் பயன்படுத்தும் தண்ணீரை தினமும் மாற்ற வேண்டும். இல்லையென்றால் அந்த தண்ணீர் மூலம் கொசுக்கள் பெருகும். வெயிலில் சுற்றுபவர்கள், தாகத்தை தணிக்க பால் சம்பந்தப்பட்ட குளிர்பானங்களை சாப்பிடுவது வழக்கம்.

இந்த குளிர்பானங்களை வைத்திருக்கும் ப்ரீசர் பெட்டியை ஒழுங்காக பராமரிக்கவில்லையென்றால் அது சலமோனெல்லா டைபி என்ற ஒருவகை டைபாய்டு காய்ச்சலை ஏற்படுத்தும் என்கிறார் டாக்டர் கனகராஜ்.

ரெசிபி

மாங்காய் சட்னி: அதிகம் புளிப்பு இல்லாத மாங்காயை பொடியாக துருவிக் கொள்ளவும். 4 காய்ந்த மிளகாய், வெந்தயம், கடுகு ஆகியவற்றை வறுத்து பொடி செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து அதில் மாங்காயை போட்டு தேவையான உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.

கடைசியில் அரைத்து வைத்துள்ள பொடியைத் தூவினால் மாங்காய் சட்னி தயாராகி விடும். சூடான சாதத்தில் நெய் ஊற்றி இதை போட்டு பிசைந்து சாப்பிடலாம். ரொட்டி, தோசை ஆகியவற்றுடன் தொட்டு சாப்பிடலாம். மாங்காய் சட்னி உடல் சூட்டை தணிக்கும்.

உருளைக்கிழங்கு சாலட்: வேகவைத்து தோல் நீக்கிய உருளைக்கிழங்குகளை ஒன்றிரண்டாக மசித்துக் கொள்ளவும். அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகுத்தூள், தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.

கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து சாலட்டில் போட்டு கிளறவும். பின்னர் கொத்தமல்லி தழைகளை தூவி சாப்பிடலாம். இதில் சிறிதளவு கட்டித்தயிர் சேர்த்தால் சுவையாக இருக்கும். வெயிலுக்கும் நல்லது.

வெஜிடபிள்ஸ் ப்ரெட் உப்புமா: காரட், உருளை, பீன்ஸ் காய்களை பொடியாக அரிந்து வேக வைத்து கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் வேகவைத்த காய்கறிகள், பட்டாணி, உப்பு, மிளகாய்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை போட்டு கலந்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வெங்காயம், இஞ்சி சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி பின்னர் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும். வேகவைத்த காய்களை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

பின்னர் சதுரமாக வெட்டிய ப்ரெட் துண்டுகளை சேர்த்து மெதுவாக கிளறவும். வெஜிடபிள் உப்புமா உடல் நலத்துக்கு உகந்தது.

பாட்டி வைத்தியம்

மிளகு, வெந்தயத்தை தண்ணீர் ஊற்றி சுண்ட காய்ச்சி, கஷாயத்தை மூன்று நாட்கள் குடித்தால் மற்றவரிடம் இருந்து அம்மை நோய் பரவாது.

வெங்காயச் சாறு எடுத்து அதை நீராகாரத்தில் கலந்து அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்தால் நீர்கடுப்பு பிரச்னை தீரும்.

நறுக்கிய வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை இளஞ்சூடாக இருக்கும் போது பருகினால் நீர்கடுப்பு குணமாகும். அதிக வலி இருந்தால் வெங்காயத்தை பச்சையாக மென்று தின்னலாம்.

கோடை மலச்சிக்கலுக்கு வெண்ணெய் சிறந்த மருந்து. அதை உருக்கி ஆறவைத்த பின் மேலே தெளிந்து நிற்கும் நெய்யை, இரு வேளை சாப்பிட்டால் குணமாகும்.

தொண்டை வலி தீர தயிரில் வெங்காயம் மற்றும் சர்க்கரையை கலந்து சாப்பிடலாம்.

உடலில் வேனல் கட்டி ஏற்பட்டால் வெண்ணையில் சுண்ணாம்பு கலந்து தடவினால், கட்டிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

வெயில் காலங்களில் அதிக அளவு வியர்க்கும் என்பதால், குழந்தைகளுக்கு ஜலதோஷம் மூக்கடைப்பு, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இதை போக்க பூண்டை பாலில் அரைத்து  கொதிக்க வைத்து நாட்டுச்சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு அரை டீஸ்பூன் அளவு கொடுக்கலாம்.

உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்று போக்கு பிரச்னைக்கு, ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை வறுத்து அதனுடன் சோம்பு, உப்பு சேர்த்து பொடித்து மோரில் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

டயட்

பொதுவாக வெயில் காலங்களில் பசி எடுக்காது. அதற்காக பட்டினி கிடந்தால் உடல் பலவீனமாகிவிடும். மனதுக்குப் பிடித்த உணவுக்கு பதிலாக, உடலுக்குத் தேவைப்படும் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

பருவகாலங்களுக்கு ஏற்ப கிடைக்கும் உணவுகள் மற்றும் பழங்கள் மருந்தாகவும் செயல்படும். கோடையில் இயற்கை உணவுகள் இதமளிக்கும். தர்பூசணி கோடையின் வரப்பிரசாதம்.

80 சதவீத தண்ணீர் சத்து உள்ள தர்பூசணி, உடலில் தண்ணீரின் அளவை சமன்படுத்தி புத்துணர்வை அளிக்கிறது. கிர்ணிப்பழமும் கோடைக்கு ஏற்றது.

பச்சைக்காய்கறிகளை சாலட்டாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்தை அதிகரிக்கும். அவற்றில் உள்ள சத்து சூரிய வெப்பத்தால் தோல் பாதிக்கப்படுவதை தடுக்கிறது. பசியையும் கட்டுப்படுத்துகிறது.

கோடை காலத்தில் சமையலில் பூண்டு அவசியம் இடம் பெற வேண்டும். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் ரத்தத்தை சுத்திகரித்து செரிமானத்தை சீராக்கும். வயிற்று உப்பிசம், மலச்சிக்கல் குணமாகும்.

கீரையை அதிக அளவில் சேர்க்க வேண்டும். வெள்ளரி, இளநீர், மோர், நுங்கு உடலுக்கு குளுமையை தரும். சத்தான இயற்கை உணவுகள் கோடைக்கு நல்லது என்கிறனர் உணவு நிபுணர்கள்.
THANKS : TAMILCNN

Wednesday, May 18, 2011

தூக்கத்திற்கும் மூளைக்கும் நெருங்கிய தொடர்புண்டு....

நாம் தூங்கும் பொழுது நம் மூளையின் முக்கிய பாகங்களும் சற்று ஓய்வெடுக்கின்றன. மூளை சரியாக ஓய்வெடுக்கவில்லையெனில், நம்மால் நிம்மதியாக தூங்க முடியாது. எப்பொழுதாவது தூக்கம் வராமல் இருப்பது இயற்கையான ஒன்று தான். ஆனால், தொடர்ந்து தூக்கம் வராமல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். மன அழுத்தம், மனச்சோர்வு, பயம், நாளமில்லா சுரப்பிகளின் குறைபாடுகள், பாலுறவு சிக்கல்கள், குடும்பச் சூழ்நிலை, கடன் தொல்லை, உடலின் அதிக உஷ்ணம் போன்றவற்றால் தூக்கமின்மை ஏற்படுகிறது. தூக்கத்தை சீராக ஏற்படுத்துவதும், தூங்கும் பொழுது மனதில் அமைதியை உண்டாக்குவதும் சில மின்காந்த அலைகளே. 
மூளை பகுதியில் இருந்து சுரந்து, உடலின் அனைத்து உறுப்புகளையும் கட்டுப்படுத்தி, பலவிதமான ஹார்மோன்களையும் என்சைம்களையும் செவ்வனே பணி செய்ய உதவும் ஆல்பா, பீட்டா, தீட்டா போன்ற மின் அலைகள் நமது தூக்கத்திற்கு பெரிதும் உதவுகின்றன. இவற்றில் ஆல்பா அலைகள் அமைதியான, ஆழ்ந்த தூக்கத்திற்கு பேருதவி புரிகின்றன. ஆசனம், பிராணாயாமம், தியானம் போன்றவற்றின் மூலமாக இந்த அலைகளை ஒருநிலைப்படுத்த முடியும். தூக்கத்தை தருவதற்காக உட்கொள்ளும் மருந்துகளால் ஆண்மைக்குறைவு, கை, கால் நடுக்கம், நரம்புத்தளர்ச்சி மற்றும் கடும் சோர்வு ஆகியவை உண்டாவதால் அவற்றை தவிர்த்து, யோகாவில் கவனம் செலுத்துவது நல்லது.

நாம் சரியாக தூங்காவிட்டால் ரத்தக்கொதிப்பு, மனச்சோர்வு, கண்களை இழுத்து பிடிப்பது போன்ற உணர்வு, கண் சிவப்பு, கோபம், கை, கால் நடுக்கம், தூக்கம் இடையில் கலைந்தவுடன் மலம் மற்றும் சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு, கொட்டாவி, கண், மூக்கு மற்றும் வாய் பாதையில் ஒரு வறட்சி, உச்சந்தலையில் சூடான சட்டியை கவிழ்த்து வைத்தது போன்ற உணர்வு, கண்ணை சுற்றியுள்ள பகுதிகள் வீங்கி, கன்னங்கள் ஒட்டிப் போதல், அல்சர், தலைவலி மற்றும் பலவித உடல் உபாதைகளும் சுறுசுறுப்பின்மையும் உண்டா கின்றன. உடல் மற்றும் மனதை குளிர்ச்சிப்படுத்தி, மூளைக்கு அமைதியை ஏற்படுத்தி, தூக்கத்தை உண்டாக்கும் அற்புத மூலிகை மருவு. ஓரிகானம் மேஜரேனா என்ற தாவரவியல் பெயர் கொண்ட லேமியேசியே குடும்பத்தை சார்ந்த மருவு செடிகள் விவசாயப் பயிராகவும் வளர்க்கப்படுகின்றன. இதன் இலைகளிலுள்ள நறுமண எண்ணெய், சாபினின், கார்வக்ரால் மற்றும் பல டெர்பின்கள், பிளேவனாய்டுகள் மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, ஆழ்ந்த தூக்கத்தை உண்டாக்குவதுடன், மன இறுக்கத்தையும் குறைக்கின்றன.

மருவு இலை மற்றும் சிறு பூக்களை ஒரு துணியில் முடிந்து, தலையணை போல் வைத்து உறங்க தூக்கம் உண்டாகும். அது மட்டுமின்றி அறை முழுவதும் நறுமணம் வீசும். மருவு இலைகளை இடித்து, சாறெடுத்து, சம அளவு நல்லெண்ணெயிலிட்டு காய்ச்சி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை தலையில் தேய்த்து, குளித்து வர இரவில் நன்கு தூக்கம் உண்டாகும். தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணெயில் மருவு இலைகளை ஊற வைத்து மாலையில் தலையில் தேய்த்து வந்தாலும் தூக்கம் உண்டாகும்.

வாயுக்களைஅடக்கலாமா?: அபான வாயு, தும்மல், சிறுநீர், மலம், கொட்டாவி, பசி, தாகம், இருமல், பெருமூச்சு, தூக்கம், வாந்தி, கண்ணீர், காம இச்சை மற்றும் சுவாசம் ஆகிய பதினான்கும் உடலின் இயல்பான வேகங்கள் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இவற்றை அடக்குவதால் நோய்கள் உண்டாகும். அபான வாயுவை அடக்குவதால் மார்பு வலி, வயிற்றுவலி, உடலில் குத்தல், மலம், சிறுநீர் தடை, பசி மந்தம் உண்டாகும். தும்மலை அடக்குவதால் தலைவலி, முகம் கோணல், இடுப்புவலி உண்டாகும். சிறுநீரை அடக்குவதால் நீரடைப்பு, நீர்த்தாரை புண், உறுப்பு சோர்வு உண்டாகும். மலத்தை அடக்குவதால் முழங்கால் வலி, கபம், தலைவலி, உடல் பலகீனம் உண்டாகும். கொட்டாவியை அடக்கினால் முகவாட்டம், செரியாமை மற்றும் புத்தி மங்கல் ஏற்படும். பசி மற்றும் தாகத்தை அடக்கினால் உடல் முழுவதும் குத்தல், உடல் இளைத்தல், முகச்சோர்வு மற்றும் மூட்டு வலி உண்டாகும்.இருமல் மற்றும் பெருமூச்சினை அடக்கினால் மூச்சில் துர்நாற்றம், இதய நோய், வயிற்றுப் புண்கள், மயக்கம் மற்றும் நடுக்கம் உண்டாகும். தூக்கத்தை அடக்கினால் தலைவலி, கண் சிவப்பு, செவிட்டுத்தன்மை உண்டாகும். வாந்தியை அடக்கினால் தோலில் தடிப்பு, கண் நோய், இருமல் உண்டாகும். கண்ணீரை அடக்கினால் மார்பு வலி, பீனிசம், ரோமக்கால்களில் புண்கள், அல்சர் உண்டாகும். காம இச்சையை அடக்கினால் திடீர் சுரம், மூட்டுகளில் வீக்கம், இரவில் இந்திரியம் வெளியேறுதல் ஆகியனவும், மூச்சை அடக்கினால் இருமல், சுவையின்மை, வெட்டை என்னும் உடல்சூடு ஆகியன ஏற்படுமென சித்த மருத்துவ நூல்கள் எச்சரிக்கை செய்கின்றன.

Monday, May 16, 2011

ஹஜ் பயணிகள் குலுக்கல் தள்ளிவைப்பு!

நடப்பு 2011ஆம் ஆண்டில், தமிழகத்திலிருந்து ஹஜ் புனித பயணத்திற்கு செல்லும் யாத்ரீகர்களை தேர்வு செய்வதற்கான குலுக்கல், நாளை 17அம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களால் இக்குலுக்கல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில ஹஜ் குழு உறுப்பினர், செயல் அலுவலர் அலாவுதீன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து ஹஜ் செல்லும் பயணிகளை தேர்வு செய்வதற்கான குலுக்கல், வரும் 17ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களால் ஹஜ் பயணிகள் தேர்வு, வரும் 24ம் தேதி சென்னை புதுக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஆணைக்கார் அப்துல் சுக்கூர் கலையரங்கில் நடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Monday, May 09, 2011

ஆன்லைனில் பள்ளிகள் மூலம் கல்வித் தகுதி பதியலாம்

சென்னை:  இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளவர்கள் தங்கள் மதிப்பெண்களை பதிவு செய்ய வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்குச் செல்லத் தேவையில்லை. அவரவர் பள்ளிகள் மூலமே ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

இந்த ஆண்டு பிளஸ் டூ-வில் தேர்ச்சி அடைந்துள்ளவர்கள் தங்கள் கல்வித் தகுதியை அவரவர் பயின்ற பள்ளிகளின் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழை வாங்கச் செல்லும் மாணவ-மாணவியர் தங்களது குடும்ப அட்டையை எடுத்துச் செல்லவும். அதில் பதிவுதாரரின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

10-ம் வகுப்பு கல்வித் தகுதியை ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துள்ளவர்கள் அதற்கான அடையாள அட்டையை எடுத்துச் செல்லவும்.

தற்போது புதிதாகப் பதிவு செய்பவர்களுக்கு பதிவெண் வழங்கப்படும்.

கல்வித் தகுதியை பதிவு செய்யும் மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் பதிவு செய்த பிறது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று தங்கள் முன்னுரிமையை பதிவு செய்யலாம்.

இந்த புதிய திட்டத்தால் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை வாங்கிய கையோடு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் குவிவது தவிர்க்கப்படும் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் தெரிவித்தார்.

THANKS : THATSTAMIL.

படைத்தவனிடம் பாவமன்னிப்பு தேடுவோம்

அல்லாஹ் தனது திருமறையில் 48:2 வசனத்தில் முஹம்மது (ஸல்) அவர்களின் முன் பின் பாவங்களை மன்னித்து விட்டதாகக் கூறுகின்றான். இப்படியொரு பாக்கியத்தைப் பெற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றாடம் பாவம் செய்து கொண்டிருக்கவில்லை. ஆனால் அதே சமயம் அன்றாடம் பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருந்தார்கள்.

“அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல் அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி’ (பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி அவன் பக்கமே திரும்புகின்றேன்) என்று கூறுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6307

“எனது உள்ளத்தில் கவனக்குறைவு ஏற்படுகின்றது. நிச்சயமாக நான் அல்லாஹ்விடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்அகர் பின் யஸார் (ரலி), நூல் : முஸ்லிம் 4870

“மக்களே! அல்லஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள். நான் அவனிடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்அகர் பின் யஸார் (ரலி), நூல் : முஸ்லிம் 4871

எப்போதும் இறைச் சிந்தனையில் இருக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உள்ளம் கொஞ்சம் அந்தச் சிந்தனையை விட்டு விலகினால் கூட அதற்காக பாவமன்னிப்பு தேடுகின்றார்கள். ஆனால் நாம் சிறு சிறு பாவங்களால் முற்றுகையிடப்பட்டுள்ளோம். அன்றாடம் ஆயிரக்கணக்கான பாவங்களைச் செய்து விட்டு கல்லாக உட்கார்ந்திருக்கின்றோம். அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவது கிடையாது. ஒரு மாதிரியான மிதப்பில் இருக்கின்றோம். இது போன்ற பாவங்களை விட்டு விலகுவதுடன் அன்றாடம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடி அதற்குரிய பலன்களை அடைய வேண்டும்.

வேதனையை விட்டும் பாதுகாவல்

(முஹம்மதே!) நீர் அவர்களுடன் இருக்கும் போது அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பவனாக இல்லை. அவர்கள் பாவ மன்னிப்புத் தேடிக் கொண்டிருக்கும் போதும் அவர்களை அல்லாஹ் தண்டிப்பவனாக இல்லை. (அல்குர்ஆன் 8:33)

பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தண்டனை இறங்காது என்பதை இந்த வசனம் உணர்த்துகின்றது.

மக்கள் செல்வமும், மழை நீர் வளமும்

உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான். உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான். செல்வங்கள் மூலமும், மக்கள் மூலமும் உங்களுக்கு உதவுவான். உங்களுக்காக சோலைகளை ஏற்படுத்துவான். உங்களுக்காக நதிகளையும் ஏற்படுத்துவான். (அல்குர்ஆன் 71:10-12)

அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடினால் அவன் மழை, செல்வங்கள், மக்கள் ஆகியவற்றைக் கொண்டு நமக்கு உதவுவான் என்பதை இந்த வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

ஸஹர் நேரத்தில்…

அவர்கள் இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள். (அல்குர்ஆன் 51:18)
(அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுவோராகவும், (இறைவனுக்கு) கட்டுப்பட்டோராகவும், (நல் வழியில்) செலவிடுவோராகவும், இரவின் கடைசி நேரத்தில் பாவ மன்னிப்புத் தேடுவோராகவும் (இருப்பார்கள்.)

(அல்குர்ஆன் 3:17)

இந்த வசனங்களில் இறை நம்பிக்கையாளர்களின் பண்புகளைப் பற்றி சொல்லும் போது, ஸஹர் நேரத்தில் அவர்கள் பாவமன்னிப்பு தேடுவார்கள் என்று வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இந்த வசனங்களுக்கு விளக்கமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இரவின் பிற்பகுதியில் பாவமன்னிப்பு தேடுவதை வயுறுத்தியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது, “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கின்றேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிக்கின்றேன்” என்று கூறுவான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 1145

சுவனத்தைப் பெற்றுத் தரும் ஸய்யிதுல் இஸ்திஃக்ஃபார்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“அல்லாஹும்ம அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கலக்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க. வ வஃதிக்க மஸ்ததஃத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஃத்து. அபூஉ லக்க பி நிஃமத்திக்க அலைய்ய வ அபூஉ லக்க பி தன்பீ. ஃபஃக்ஃபிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த.” (பொருள் : அல்லாஹ்வே! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமையாவேன். நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதிமொழியையும், வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு கோருகின்றேன். நீ (எனக்கு) அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கின்றேன். நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் ஒப்புக் கொள்கின்றேன். ஆகவே. என்னை நீ மன்னிப்பாயாக. ஏனெனில் பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை.)

என்று ஒருவர் கூறுவதே தலை சிறந்த பாவமன்னிப்பு கோரல் (ஸய்யிதுல் இஸ்திஃக்ஃபார்) ஆகும். யார் இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும், தூய்மையான எண்ணத்தோடும் பகல் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறந்து விடுகின்றாரோ அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். யார் இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டு, காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகின்றாரோ அவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.

அறிவிப்பவர் : ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி), நூல் : புகாரி (6306)

தொழுகையில் ஸலாம் கொடுத்ததும்…

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பும் போது மூன்று தடவை (அஸ்தஃக்ஃபிருல்லாஹ் என்று) பாவமன்னிப்பு தேடுவார்கள்.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி), நூல் : முஸ்லிம் 931 .

"ஊழலை ஒழிக்க ஒரே வழி எளிமை தான்'

"மக்களிடம் உள்ள நீதி, நேர்மை குறைபாடு, வறட்டு கவுரவ வாழ்க்கையினால் ஊழல் பெருகுகிறது. ஊழலை ஒழிக்க, மக்கள் எளிமையாக வாழ பழக வேண்டும்,'' என்று, தமிழக தலைமை தேர்தல் முன்னாள் அதிகாரி நரேஷ் குப்தா பேசினார்.

பல ஆண்டுகளாக லோக்பால் மசோதா நிறைவேற்றப்படாமல் இருந்தது. அன்னா ஹசாரே உண்ணாவிரதத்துக்குப் பிறகு, லோக்பால் மசோதா வரைவு கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. கமிட்டியில் இடம்பெற்றுள்ளோர் மீது, சில குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது. எப்படி இருந்தாலும் ஊழலை எதிர்க்கும் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது, பிரதமரின் கையில் தான் இருக்கிறது.மத்திய அரசு அளவில் மட்டுமல்லாது, மாநிலங்களிலும் அடிமட்டம் முதல் மேல்மட்டம் வரை லோக்பால் அமல்படுத்த வேண்டும். அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா மட்டுமல்லாது ஆப்ரிக்கா போன்ற ஏழை நாடுகளிலும் ஊழல் உள்ளது.

டெண்டர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஊழல் இருக்கும் அரசு, நல்ல அரசாக இருக்காது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அரசின் பல துறைகளில் செயல்படுத்துவது இல்லை. ஒளிவு மறைவற்ற வெளிப்படையான ஆட்சி நிர்வாகம் நடக்க வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் எவ்வளவு நாட்களுக்குள் பதில் கிடைக்கும் என்பதை தெளிவாக அரசு அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.இந்திய பிரதமரே, "ஊழல், புற்றுநோய் போல் பரவியுள்ளது' என்கிறார். முன்னாள் பிரதமர் இந்திரா, "இந்தியா மட்டுமல்லாது உலகமெங்கும் ஊழல் பரவியுள்ளது' என்றார்.

ஊழலுக்கு எல்லைகள் கிடையாது. அதனால், ஊழலை ஒன்றும் செய்ய முடியாது என்று நினைக்கக் கூடாது. வறுமை உள்ள இடத்தில் தான் ஊழல் அதிகமாக உள்ளது.பணக்காரர்கள் பணத்தைக் கொண்டு தங்களது காரியங்களை சாதித்துக் கொள்கின்றனர். பணம் இல்லாததால், ஏழைகள் தான் ஊழலால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.எல்லா இடங்களிலும் ஊழலும், வறுமையும் கைகோர்த்து நடக்கிறது. மக்களிடம் உள்ள நீதி, நேர்மை குறைபாடு, வறட்டு கவுரவ வாழ்க்கையினால் ஊழல் பெருகுகிறது. ஊழலை ஒழிக்க, மக்கள் எளிமையாக வாழ பழக வேண்டும்.

ஊழலை வேரறுக்க, பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு ஊழலுக்கு எதிரான போதனையை வீட்டில் இருந்து துவங்க வேண்டும். அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் என்று குறிப்பிட்ட நபர்களை குறை சொல்லக் கூடாது.ஊழலுக்கு எதிரான மாற்றம் உங்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்பட வேண்டும். நமக்குள் கட்டுப்பாட்டை வளர்க்க வேண்டுமே தவிர, யாரையும் மிரட்டக் கூடாது.இவ்வாறு நரேஷ் குப்தா பேசினார்.

THANKS : DINAMALAR

அயோத்தி நிலத்தை 3 ஆக பிரிக்கும் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை

டெல்லி: அயோத்தி நிலத்தை மூன்றாகப் பிரித்து ஒரு பகுதியை ராமர் கோவில் கட்டுவதற்கு இந்துக்களிடமும், இன்னொரு பகுதியை அங்கு சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோகி அகராவிடமும், இன்னொரு பகுதியை பாபர் மசூதி கமிட்டியிடம் வழங்க வேண்டும் என்றும், இதில் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளை வழங்கிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி இந்தத் தீர்ப்பை வழங்கியது அலகபாத் உயர் நீதிமன்றம். இந்தத் தீர்ப்புக்கு இன்று உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் வினோதமாகவும், விந்தையாகவும் இருப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

லக்னெள நீதிமன்றத்தின் நீதிபதிகள் தரம்வீர் சிங் சர்மா, சுதிர் அகர்வால், சிப்கத் உல்லா கான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பளித்தபோது ஒருமி்த்த தீர்ப்பை வழங்கவில்லை.

ஒவ்வொரு நீதிபதியும் தனித்தனியே வெவ்வேறு தீர்ப்பை வழங்கினர்:

நீதிபதி தரம் வீர் சர்மா, முழு நிலத்தையும் இந்துக்களுக்கே ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். நீதிபதிகளில் எஸ்.யு.கான், சுதிர் அகர்வால் ஆகியோர் அயோத்தி நிலத்தை 3 ஆகப் பிரித்து ஒரு பங்கை சன்னி மத்திய வக்பு வாரியத்திற்கும், இன்னொரு பங்கை நிர்மோகி அகாராவுக்கும், மூன்றாவது பகுதியை ராம் லல்லா அமைப்புக்கு அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

மொத்தத்தில் அவர்கள் அளித்த தீர்ப்பின்படி நிலத்தை 3 மாதத்துக்குள் மூன்றாகப் பிரித்து கோவில் கட்டிக் கொள்ள ராமஜென்ம பூமி அறக்கட்டளையிடமும் (ராம் லல்லா அமைப்பு), இன்னொரு பகுதியை அங்கு ஏற்கனவே கோவில் கட்டியிருந்த நிர்மோகி அகராவிடமும், இன்னொரு பகுதியை பாபர் மசூதி கமிட்டியிடம் (சன்னி மத்திய வக்பு வாரியம் சார்ந்த கமிட்டி) வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

அதே நேத்தில் மொத்த நிலத்தையும் தங்களிடம் தர வேண்டும் என்ற சன்னி முஸ்லீம் வக்பு வாரியத்தின் கோரிக்கையை 3 நீதிபதிகளும் ஒட்டு மொத்தமாக நிராகரித்தனர்.

அதன் மூலம் பாபர் மசூதி இருந்த இடமான 2,400 சதுர அடி நிலம் மூன்றாகப் பிரித்து மூன்று தரப்பினரிடமும் வழங்கும் வரை இப்போது இருக்கும் நிலையே, அதாவது, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே நிலம் இருக்க வேண்டும் என்றும், அந்த இடத்திலிருந்து ராமர் சிலை அகற்றக் கூடாது என்றும் தீர்ப்பளித்தனர்.

இதில் மசூதியின் மையப் பகுதி அமைந்திருந்த இடத்துக்குக் கீழே உள்ள இடம் ராமர் பிறந்த இடம் என்பதால், அந்த இடத்தில் கோவில் கட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், (இந்த நிலத்துக்கு உரிமை கோரும் இந்து அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து அறக்கட்டளை அமைத்து இந்த நிலத்தைப் பெற்று கோவில் கட்டிக் கொள்ளலாம்)

மீதமுள்ள இடத்தை அங்கு ஏற்கனவே சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோகி அகராவிடமும், பாபர் மசூதி கமிட்டியிடமும் பிரித்து வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிபதி சுதிர் அகர்வால் தனது தீர்ப்பில், இந்த மசூதி கட்டப்பட்ட இடத்தில் கோவில் இருந்துள்ளது என்பதை இந்திய தொல்லியல் துறையின் ஆய்வு நிரூபித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் மசூதி கட்டுவதை இஸ்லாம் மதமே தவறு என்கிறது என்றார்.

நீதிபதி சிப்கத் உல்லா கான் தனது தீர்ப்பில், கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதற்கு ஆதாரம் ஏதும் இல்லை. அந்த இடத்தில் கோவில் இருந்து, அது நெடுங்காலமாக சிதிலமடைந்து கிடந்தது. கோவில் முழுவதும் சிதிலமடைந்த பி்ன்னரே அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளது. இடிந்து கிடந்த கோவிலின் சில கட்டுமானப் பொருட்களும் மசூதி கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

இவ்வாறு தனித்தனியே நீதிபதிகள் கருத்துத் தெரிவி்த்தாலும் மூவரும் மொத்தத்தில் அளித்த தீர்ப்பின்படி, இந்த இடத்தில் 3ல் 2 பங்கை இந்துக்களிடமும் (ராமர் கோவில் கட்டவும், நிர்மோகி அகராவிடமும்), 1 பங்கு இடத்தை பாபர் மசூதி கமிட்டியிடமும் ஒப்படைக்க உத்தரவிட்டனர்.

இந்த இடத்துக்கு உரிமை கோரி ராம ஜென்மபூமி நியாஸ், நிமோகி அகரா ஆகியவை 1950களில் வழக்குத் தொடர்ந்தன. 1961ம் ஆண்டில் சன்னி முஸ்லீம் வக்பு வாரியம் வழக்குத் தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு கடந்த 60 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பையொட்டி நாடே பெரும் பரபரப்பில் ஆழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அந்தத் தீர்ப்பை எதிர்த்து நிர்மோகி அகரா, அகில பாரத் இந்து மகாசபை, ராம் விரஜ்மான் உள்ளிட்ட இந்து அமைப்புகளும், ஜமாயத் உலமா இ ஹிந்த், சன்னி மத்திய வக்பு வாரியம் உள்ளிட்ட முஸ்லீம் அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தன.

வக்பு வாரியமும், ஜமாயத் அமைப்பும் தங்களது மனுவில், இந்த தீர்ப்பு உரிய ஆதாரத்தின் அடிப்படையில் பிறப்பிக்கப்படவில்லை. மாறாக மத நம்பிக்கையின் அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இதை நிராகரிக்க வேண்டும். ராமர் பிறந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டதாக உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாத நிலையில் அதை உறுதிப்படுத்தி பிறப்பிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பு தவறானதாகும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்து மகாசபா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த தீர்ப்பில் பாதியை நாங்கள் ஏற்கிறோம். அதேசமயம், ஒரு பங்கு இடத்தை முஸ்லீம்களுக்குத் தர வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்க்கிறோம். ஒட்டுமொத்த நிலத்தையும் இந்துக்களுக்கே ஒதுக்கி உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி அப்தாப் ஆலம், நீதிபதி ஆர்.எம். லோதா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச், இன்று அளித்த தீர்ப்பில் அலகாபாத் உயர் மன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.

அப்போது அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்து நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். நீதிபதிகள் கூறுகையில், நிலத்தைப் பிரிக்குமாறு மனுதாரர்கள் யாருமே கோரவில்லை. ஆனால், யாருமே கேட்காத நிவாரணத்தைக் கொடுத்துள்ளது அலகாபாத் உயர்நீதிமன்றம். எவரும் கோராத வகையில், நிலத்தைப் பிரிக்குமாறு தீர்ப்பளித்திருப்பது வினோதமாகவும் உள்ளது, விந்தையாகவும் உள்ளது.
  
இது மிகவும் புதுமையான, புதிரான தீர்ப்பு. இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை தற்போதைய நிலையே அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் தொடர வேண்டும்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக உரியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

THANKS : THATSTAMIL