ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள், தேர்வுக்கு தயாராகும் முறையை அடுத்த ஆண்டு முதல் மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் 2011-ம் ஆண்டு முதல்மாற்றம் கொண்டு வர யூபிஎஸ்சி முடிவு செய்துள்ளது.
இதில் இரண்டாவதாக நடத்தப்படும் முதன்மைத் (மெயின்) தேர்வில் மாற்றம் இல்லை; முதல்நிலைத் தேர்வில் மட்டும் மாற்றம் வருகிறது. முதல்நிலைத் (பிரிலிமினரி) தேர்வில் இப்போது, பொது அறிவு, விருப்பப் பாடம் (அட்டவணையில் உள்ள 23 பாடங்களில் ஒன்று) என இரு பிரிவுகளாக தேர்வு நடத்தப்படுகிறது. இதில் விருப்பப் பாடத்துக்கு பதிலாக "சிவில் சர்வீசஸ் ஆப்டிடியூட் டெஸ்ட்' (சிஎஸ்ஏடி) என்ற புதிய தேர்வு நடத்தப்படவுள்ளது.
மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப சிவில் சர்வீஸ் தேர்வில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த விருப்பப் பாட தேர்வு தொடர்பாக யூபிஎஸ்சி-க்கு பல புகார்கள் வந்துள்ளன. எனவே இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த புதிய தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த விவரங்கள், டிசம்பரில் சிவில் சர்வீசஸ் தேர்வு அறிவிப்பு வெளியிடப்படும்போது அதனுடன் சேர்த்து வெளியிடப்படும் என்று தெரிகிறது.
நன்றி : தினமணி
No comments:
Post a Comment