இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Saturday, December 18, 2010

சைரன் வைத்த காரில் போகலாம் வாங்க!. பகுதி 1

எச்சரிக்கை: 18 ஆண்டுகளாகிவிட்டது!. தமிழ்நாட்டிலிருந்து ஒரு முஸ்லிம் I.A.S  தயார் படுத்தப்பட்டு. இந்த நிலை நீடித்தால் அதிகார வர்க்கத்தினால் நம் சமுதாயம் நசுக்கப்படும்.  இது ம் சமுதாய மக்ளுக்கு ஒரு எச்சரிக்கையாக கருதி தயாராகுங்கள். சைரன் வைத்த காரில் போகலாம்!. இல்லையெனில் இந்த சமுதாயம் ஆம்புலன்ஸில்தான் பயணப்பட நேரிடும்!!.

கல்வியும் அறிவும் ஒரு பெரிய  ஆயுதம். அதைக்கொண்டு ஒரு அறிவுப்புரட்சியையே ஏற்படுத்தலாம். எனவே அல்லாஹ்விடம்   
رَّبِّ زِدْنِي عِلْمًا 
இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக! என்று கேளுங்கள்.
போகலாம் தான்!. யாருக்குத்தான் அதற்கு ஆசை இல்லை!. ஆனால் அதற்கு நம்மிடையே இரு தகுதிகள் வேண்டுமே!. ஒன்று நீங்கள் ஆளும் வர்க்கமாக இருக்கணும்!. அதற்கு வாய்ப்பே இல்லை என்கின்றீர்களா?. அல்லது நாம் அதிகார வர்க்கமாக இருக்கணும்!. இது பெரும்பாலும் முப்பது நாற்பது வயதை தாண்டிவிட்ட நமக்கு சாத்தியமில்லை என்றாலும், நம் குழந்தைகளுக்கும், படித்துக்கொண்டிருக்கும் நம் சகோதர சகோதரிகளுக்கும் இது கிடைக்கலாம் அல்லவா?. அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?. ஒன்றே ஒன்றுதான், அவர்களை அதிகார வர்க்கமாக நாம் மாற்ற வேண்டும். இது சாத்தியமா என்றால், நாம் முயற்சி எடுத்தால் அது நூற்றுக்கு நூறு  சதவிகிதம்  சாத்தியமே!. அதற்கும் நாம் என்ன செய்யவேண்டும்.
ஊக்கமதை கைவிடேல்!
வெறும்  B.A, B.COM, B.B.A ன்று மட்டும் நாம் படித்தால் தற்போதுள்ள போட்டியான காலத்திற்கு அது உதவாது. வேலை கிடைத்தால் வருமானத்திற்கு வழி வகுக்குமே ஒழிய, அதிகார வர்க்கமாக மாற நமக்கு அது போதாது. சமுதாய முன்னேற்றத்திற்கும் நம்மால் உதவமுடியாது. இது நிதர்சனமான உண்மை. அதனால் நம் கல்வியை மேற்படிப்பின் பக்கம் திருப்ப வேண்டும். உயர்கல்வியை நாம் தொடரவேண்டும். அவ்வாறு தொடர விருப்பம் உள்ள ஏழை மாணவர்களுக்கு நம் சமுதாயத்தில் நல்ல உள்ளம் கொண்ட உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் சகோதரர்கள் அள்ளிக்கொடுக்க முன்வந்து கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு மற்றும் இந்திய அளவிலும் ஏகப்பட்ட அறக்கட்டளைகள் கல்வி உதவித்தொகையை அளித்துவருகின்றனர். எனவே திட்டமிட்டால் சைரன் வைத்த காரில் நம் குழந்தைகளையோ சகோதர சகோதரிகளையோ பயணப்படவைக்கலாம். அதற்கு நீங்கள் உங்களின் மேல்நிலை மற்றும் இளங்கலைப்படிப்பின் ஆரம்பகாலத்திலே உங்களின் பொதுஅறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும். சதா பத்திரிக்கைகள், பொதுஅறிவு நூல்கள், செய்தி தொலைக்காட்சிகள், என்று உங்களின் கவனம் ஊடகத்தின் பக்கம் இருக்கவேண்டும். அல்லது பெற்றோர் / சகோதரர்களாகிய நாம் அவர்களை அதன்பால் திருப்பவேண்டும். ஏனெனில் விதையை விதைத்தால்தான் அதன் வீரியத்தை நாம் அறியமுடியும்!. உயர்தர விதையை வெறும் கண்ணாடிப் பாத்திரத்தில் வைத்திருப்பதினால் பலன் இல்லை. அதன் வீரியத்தை இந்த மண்ணில் விதைக்காதவரை அதனால் அதன் தன்மையை நிருபிக்க முடியாது. இது மறுக்கமுடியாத உண்மை!.
துறைகளும் அதில் உள்ள துரைகளும்:
எனவே IAS., IPS., IFS., INDIAN AUDIT & ACCOUNTS SERVICE., INDIAN CUSTOMS & CENTRAL EXCISE SERVICE., INDIAN REVENUE SERVICE., INDIAN POSTAL SERVICE., INDIAN INFORMATION SERVICE., INDIAN RAILWAY PERSONAL SERVICE மற்றும் IIT., IIM  போன்ற உயர்கல்வியில் நம் கவனத்தை திருப்பவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். ஏனெனில் இந்தியாவின் நிர்வாகத்தினை நிர்வகிக்க இந்த சிவில் சர்வீஸ் தேர்வுகள் மூலமே நாம் சென்றடையமுடியும். இந்தியாவின் நிர்வாகத்துறையை சுமார் 96 துறைகளாக பிரித்துவைத்துள்ளார்கள். நாட்டின் பல்வேறு துறைகளில், நிர்வாக முடிவு எடுக்கும் பதவிகளான IAS,IPS பணிகளில் 5,500 அதிகாரிகள் உள்ளனர். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுகள், பிரிலிமினரித் தேர்வு, முக்கியத் தேர்வு என இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது. மாநில அரசுத் தேர்வாணையம் மூலம் குரூப் 1 தேர்வு எழுதி பணியில் சேர்வோர், 10 முதல் 15 ஆண்டுகள் பணியாற்றிய பின், IAS,IPS தகுதி பெற வாய்ப்பு உள்ளது. நேரடியாக IAS,IPS ஆவதன் மூலம் 15 ஆண்டுக் காலத்தை சேமிக்க முடியும். இட ஒதுக்கீடுகளைச் சார்ந்திருக்காமல் மாணவர்கள் தங்கள்  திறமைகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இடஒதுக்கீட்டிற்கு மேலும் நாம் முஸ்லிம்களை அரசுப்பணிகளில் அமர்த்தமுடியும்.
துரை இங்க்லீஷ் எல்லாம் பேசணும்:

சிவில் சர்விஸ் தேர்வில் இரண்டு பிரிவுகள் உள்ளது. இதில் அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படுகின்றது. வரும் ஆண்டு முதல் CSAT எனப்படும் CIVIL SERVICE APTITUTE TEST சேர்க்கப்பட உள்ளது. குறிப்பாக கணிதம் ஆங்கிலம் அறிவு மிக மிக அவசியமாகும். இந்தியையும் நன்றாக கற்றுக்கொள்ளுங்கள்!. மேலும் சிவில் சர்விஸ் தேர்வுகளில் தேர்வு பெரும் பெரும்பாலோனோர் எஞ்சினியரிங் கோர்ஸ் முடித்தவர்களாகவே உள்ளனர். எனவே எஞ்சினியரிங் படித்த முஸ்லிம் மாணவர்கள் இதோடு நின்று விடாமல் இதுபோன்ற மேற்படிப்புக்கு உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள். பல்வேறு பதில்களிருந்து ஒன்றைத் தெரிவு செய்திட வேண்டிய வினாமுறை என்பதால் ஆயத்த நிலையில் ஒரு பாடத்தின் அனைத்து அம்சங்களையும் ஆழ்ந்து அறியவேண்டியது முக்கியம். முதலாவது சுற்றுத் தயாரிப்புக்கு 3 மாதங்களும் திரும்ப ஒருமுறை திருப்பிப் பார்த்துப் படிக்க ஒரு மாதமும் தேவை. முதல்நிலைத் தேர்வுகளுக்கான ஆயத்தின்போது தொடக்கத்திலேயே கேள்விகளுக்கு விரைவாகப் பதில் எழுதிடப் பழகுதல் மிக முக்கியமான ஒன்றாகும். முந்தைய ஆண்டு வினாத்தாள்களைப் பெற்று அவற்றுக்கு விடையளித்துப் பார்க்க வேண்டும். இம்முறை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். ஆயத்தப் பணிகளின் போக்கை நெறிப்படுத்துவதுடன் தேர்வுகளில் விடையளிப்பதை மேம்படுத்தவும் உதவும். முதல்நிலைத் தேர்வில் உள்ள பொதுப்பாட வினாத்தாள் பரவலானபாடத்திட்டத்தைக் கொண்டது.

தேர்வுமுறைகள்:
சமீபத்தில் மாநில அரசுகள் இடஒதுக்கீட்டை நமக்கு அளித்துள்ளது. மத்திய அரசாங்கமும் விரைவில் அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அவ்வாறு கிடைக்குமானால், அந்த இடத்தினை நிரப்ப எத்தனை முஸ்லிம் சகோதர சகோதரிகளை நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம்?. எனவே முதலில் மத்திய மாநில அரசாங்கம் நடத்தும் TNPSC, UPSCEX எனப்படும் அரசு பொது வேலைக்கான தேர்வை எழுதி வெற்றிபெறவேண்டும். இது பிரிலிமிணரி எக்ஸாம் ஆகும். இதற்கென பல இடங்களிலும் பயிற்சி வகுப்புகள் உள்ளன. இது பொதுஅறிவையும், நாம் கற்ற கல்வியின் அடிப்படையிலும் இதற்கான கேள்விகள் இருக்கும். இதில் தவறாக அளிக்கப்படும் கேள்விக்கு எதிர்மறையான மதிப்பெண்கள் அதாவது, முதல் மூன்று கேள்விகளுக்கு நீங்கள் சரியான பதிலை அளித்து இருந்து, நான்காம் கேள்விக்கு தவறானபதிலை அளித்தீர்களேயானால், முதலில் பெற்ற மூன்று மதிப்பெண்ணில் இருந்து ஒன்று, தவறான நான்காம் விடைக்காக கழிக்கப்பட்டு உங்கள் மதிப்பெண் இரண்டு என்றே கணக்கிடப்படும். எனவே மிகுந்த அக்கறையுடன் இந்த தேர்வை நீங்கள் எழுதவேண்டும். பின் இதில் வெற்றிபெறும் மாணவர்கள் அடுத்தக்கட்ட தேர்விற்கு அழைக்கப்படுகின்றனர்.
IAS,IPS,IFS போன்ற அரசு உயர் பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வு முறைகளை அறிந்து கொள்ளும் முன், இத்தேர்வு குறித்த சில அடிப்படையான விவரங்களைத் தெரிந்து கொள்வது முக்கியம். சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருடாவருடம் தேர்வு எழுதுவர். நிரப்பப்பட வேண்டிய காலியிடங்களின் 12 மடங்கு எண்ணிக்கை அளவுக்கு முதன்மைத் தேர்வில் இருந்து மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். அதிலிருந்து ஒரு காலியிடத்துக்கு 3 பேர் என்ற அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்குப் போட்டியாளரின் எண்ணிக்கை அமையும்.
ஏனெனில் கடந்த ஆண்டு மட்டும் ஏறத்தாழ 5.5 இலட்சம் UPSC EXAM எழுதிய மாணவர்களில் சுமார் 12 ஆயிரம் பேர்கள் மட்டுமே இந்த முதல்நிலை தேர்வை எழுத முன்னேறினார்கள். பின் இதில் வெற்றி பெற்றவர்களில் மூன்றாயிரம் பேர்கள் மட்டுமே நேர்முக தேர்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர். பின் நேர்முகதேர்விலும் வெற்றிபெற்று IAS,IPS,IFS ஆனவர்கள் ஆயிரம்பேர்கள் மட்டுமே!. இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் இந்த தேர்வை நாம் எழுத எவ்வளவு முக்கியத்துவம் செலுத்தவேண்டும் என்று!. இந்த நீளமான தொடர்தேர்வில் ஏதேனும் ஓரு நிலையில் நீங்கள் தோல்வி அடைந்தீர்களேயானால், மீண்டும் முதல்நிலையில் இருந்து உங்களின் தேர்வை நீங்கள் தொடரவேண்டும்!. இவ்வாறு மூன்றுமுறை மட்டுமே இந்த தொடர்தேர்வில் நீங்கள் இடம்பெற முடியும்!. மேலும் ஒரே முயற்சியில் வெற்றி பெற்று இளம்வயதிலே IAS ஆகியோர் ஏராளம். சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன் நான் படிக்கும்போது ஓருமுறை மட்டும் முதல் நிலை தேர்வை எழுதி பெயிலாகி அத்தோடு விட்டுவிட்டேன். போதிய வழிகாட்டியும் இன்று உள்ளதைப்போல் உற்சாகம் தருபவர்களும் இல்லாததே இதற்கு காரணம். ஆனால் தற்போது IAS., IPS., IFS போன்ற தேர்வை எழுதுவதற்கு இலவசமாகவே பயிற்சியளிக்க பல தொண்டு நிறுவனங்கள் உள்ளன. இதில் குறிப்பிடத்தக்கது சென்னையில் சைதை துரை அவர்களால் நடத்தப்படும் மனிதநேய அறக்கட்டளையும் ஒன்றாகும். மேலும் தற்போது  சென்னையில் புதுக்கல்லூரியிலும் இதற்கென ஓரு அகடாமியையும் ஏற்படுத்தியுள்ளனர். இதை முஸ்லிம் சகோதரர்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இதேபோல் மாவட்டத்திற்கு ஒன்று என்ற அளவில் இதுபோன்ற பயிற்சி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படவேண்டும்.
 
படிக்கும் முறை:
தேர்வாளர்கள் முக்கியமான பகுதிகளை இனங்கண்டு அவற்றில் கருத்தூன்றிப் படிக்க வேண்டும். பொதுஅறிவுத் தாளில் கணிதத்திறன் தொடர்புடைய வினாக்களில் நல்ல மதிப்பெண்களைப் பெற வாய்ப்புள்ளது. முதன்மைத் தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் முதல்நிலைத் தேர்வு முடிந்த மாத்திரத்திலேயே தொடங்கப்பட வேண்டும். முதல்நிலைத்தேர்வு முடிவுற்ற தேதிக்கும், அத்தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதிக்கும் இரு மாதங்கள் இருக்கும். இக்கால அவகாசத்தை முதன்மைத் தேர்வின் இரண்டாவது விருப்பப் பாடத்துக்கான ஆயத்தப் பணிகளுக்குப் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் அடுத்த இரு மாதங்களைப் பொதுப் பாடங்கள் மற்றும் இன்னொரு விருப்பப்பாட ஆயத்தப் பணிகளுக்குப் பயன்படுத்த முடியும். தேர்வுக்கு முந்தைய கடைசி ஒரு மாதத்தை அனைத்துப் பாடங்களையும் திரும்பப் பார்த்துப் படிக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். முதன்மைத் தேர்வுக்கு அதிகமான மதிப்பெண்கள் உள்ளதால் அத்தேர்வுக்கான ஆயத்தப் பணிகளும் மிக முக்கியமானதாகும். ஆயத்தப் பணிகளில் தொடக்க நிலையிலிருந்தே குறிப்புகள் எடுத்து வந்தால் இதைத் தவிர்க்கலாம். திரும்பத் திரும்ப வினாக்கள் கேட்கப்படும் பகுதியை மிகக் கவனம் செலுத்திப் படிக்க வேண்டும். அடிப்படை விஷயங்களை உணர்ந்து அது தொடர்புடைய அண்மைக்கால குறிப்பிடத்தக்க சம்பவங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை அறிந்துகொண்டு அதில் கவனம் செலுத்திப் படிக்க வேண்டும். முதன்மைத் தேர்வில் கட்டுரைத்தாள் என்பது ஒரு தனித்தன்மை மிக்கது. பலதலைப்புகளில் கட்டுரையை எழுதிப் பார்ப்பது சிறந்த பயிற்சியாக அமையும். வெற்றி பெறுவதற்கான அடிப்படை விஷயம் தொடர்ச்சியான கடின உழைப்பு. இத்தேர்வு முறையில் மொத்த காலஅளவு ஏறக்குறைய ஓராண்டு. இதைக் கருத்தில் கொண்டு இக்காலம் முழுவதும் கடினமாக உழைக்க வேண்டும்.

தேர்வின் கால அட்டவணை:
சிவில் சர்விஸ் தேர்வுகள் முறையாக டிசம்பர் அல்லது ஜனவரியில் அறிவிக்கப்படும். முதல் நிலை தேர்வுகள் மே மாதம்  நடைபெற்று ஆகஸ்ட் மாதம் முடிவுகள் வெளியிடப்படுகின்றன. அக்டோபர் அல்லது நவம்பரில் மெயின் தேர்வுகள் நடைபெற்று இதன் முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படுகின்றது. பின் ஏப்ரல் மாதம் நேர்முகத்தேர்வு நடைபெற்று மே மாதம் இதில் வெற்றி பெற்றவர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்படுகின்றது. அதாவது ஒருவருட தொடர் தேர்வுமுறைகள் இங்கு பின்பற்றப்படுகின்றது.

தொடர்ச்சி பகுதி 2 ல்...

No comments:

Post a Comment