இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Saturday, June 18, 2011

பள்ளி சிறுவர்களை பாழாக்கும் புதுவித லாட்டரி

கோவையில் பள்ளிகளின் அருகில், "லக்கி பிரைஸ்' என்ற பெயரில், சிறுவர்களுக்கான சுரண்டல் பரிசுச் சீட்டுகள், அதிகளவில் விற்கப்படுகின்றன. சிறுவர்களிடம் சூதாட்ட மோகத்தைத் தூண்டும் இவ்வகை பரிசுச் சீட்டுகளை தடை செய்ய, மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 
ஏழை, எளிய மக்களின் குடும்ப பொருளாதாரத்தைச் சுரண்டி வந்த லாட்டரி சீட்டு விற்பனை, தமிழகத்தில் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், தடையை மீறி பல இடங்களில், வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக, பரவலாக புகார் உள்ளது. லாட்டரி சீட்டு போன்றே, பள்ளிச் சிறுவர்களைக் குறிவைத்து, பெட்டிக் கடை, ரோட்டோர கடைகளில், "லக்கி பிரைஸ்' என்ற பெயரில், சுரண்டல் பரிசுச் சீட்டுகள் அதிகளவில் விற்கப்படுகின்றன. சிறுவர்கள், ஒரு கூப்பனை 50 பைசா கொடுத்து வாங்கி, அதிலுள்ள எண்களை சுரண்டும்போது, பரிசுக்குரிய எண்கள் இருந்தால், பணம் அல்லது பொருள் வழங்கப்படுமென, கடைக்காரர்கள் கூறுகின்றனர். இது போன்ற பரிசுச் சீட்டுகள், பள்ளி அருகிலுள்ள கடைகளிலேயே அதிகம் விற்கப்படுகின்றன.

 
சூதாட்ட மோகத்துக்கு உள்ளாகும் சிறுவர்கள், தங்கள் வீட்டிலிருந்து பணத்தை எடுத்து வந்து, கடைகளில் கொடுத்து சீட்டு வாங்கி சுரண்டுவதை, வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இதனால், பள்ளி அருகிலுள்ள பெட்டிக் கடைகளில், கூட்டம் அலைமோதுகிறது. நடிகர், நடிகைகளின் போட்டோவுடன், ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு, அதன் மீது பரிசுக்கான எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன; இதைப் பார்க்கும் சிறுவர்கள், எளிதில் ஈர்க்கப்படுகின்றனர். இதுவும் ஒரு வகையான லாட்டரிச் சீட்டு தான். சிறு வயதிலேயே, சுரண்டல் மூலம் கிடைக்கும் பணத்துக்கு ஆசைப்படும் எண்ணம், பிஞ்சு மனங்களில் விதைக்கப்படுகிறது. உழைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற சிந்தனைக்கு மாறாக, உழைக்காமலும் சேர்க்க முடியும் என்ற விஷ விதையை விதைக்கிறது. இது போன்ற பரிசுச்சீட்டுகளை தடை செய்ய மாவட்ட நிர்வாகமும், போலீஸ் துறையும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து, மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "குலுக்கல் மற்றும் லாட்டரிச் சீட்டு, சுரண்டல் முறைகளில் பரிசு வழங்குவது, "பணச்சுழற்சி மற்றும் பரிசுச் சீட்டு சட்டத்தின்'படி குற்றமாகும். இதுபோன்ற குற்றங்கள் குறித்து தகவல் அறிவோர், அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவிக்கலாம்' என்றார்.

 
உடல் நலனுக்கும் தீங்கு: பரிசுச் சீட்டு சுரண்டலில் ஈடுபடும் சிறுவர்கள் பணத்தை இழப்பதுடன், ஆரோக்கிய குறைபாட்டுக்கும் ஆளாவதாக புகார் எழுந்துள்ளது. பரிசுச் சீட்டில் எண்களை மறைத்துள்ள, "அலுமினியக் கோட்டிங்கை' விரல் நகத்தால் சிறுவர்கள் பலரும் சுரண்டுகின்றனர். அப்போது, அலுமினிய துகள்கள் நகத்தின் இடுக்குகளில் படிந்து விடுகின்றன. சாப்பிடும் சிறுவர்கள் பலரும் கையை சுத்தமாக கழுவத் தெரியாதவர்களாக உள்ளனர். அவ்வாறு, கழுவாத போது, நக இடுக்கில் படிந்திருக்கும் அலுமினிய துகள்களும் உணவுடன் சேர்ந்து, வயிற்றுக்குள் போய்விடும் அபாயம் இருப்பதாகவும், அவ்வாறு நிகழும் போது வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, இதுகுறித்தும், சுரண்டல் பரிசுச் சீட்டுகளை வாங்கக் கூடாதெனவும் தங்களது பிள்ளைகளுக்கு பெற்றோர் அறிவுறுத்த வேண்டியது அவசியம்.

THANKS : DINAMALAR

No comments:

Post a Comment