இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Friday, September 20, 2013

மாணவர்கள்,ஆசிரியர்கள் பள்ளியில் மொபைல் போன் பயன்படுத்த தடை

சென்னை: பள்ளி கல்வித்துறையில், மொபைல் போன் பயன்படுத்த, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும், மொபைல் போன் பயன்பாட்டுக்கு, தடை விதிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளில் மொபைல் போன் அதிகரித்துள்ளதாக தெரிய வந்ததை அடுத்து, தொடக்கக் கல்வித் துறை கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை கீழ் இயங்கும், அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 2007ம் ஆண்டிலேயே, மொபைல் போனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. எனினும், நகரப் பகுதிகளில் உள்ள, பள்ளி மாணவர்களில் ஒரு சிலர், மொபைல் போனை கொண்டு வருகின்றனர். இதை முற்றிலும் தடுப்பதற்கு, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

நடவடிக்கை:
ஆரம்ப, நடுநிலைப் பள்ளி மாணவர், வயதில் மிகவும் சிறியவர்கள் என்பதால், இந்த பள்ளிகளில், மொபைல் போன் பயன்பாடு இல்லை என்ற நிலை, இருந்து வந்தது. ஆனால், தற்போது, வயது வித்தியாசம் இன்றி, சிறுவர்களும், மொபைல் போன்களை, அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அரசு பள்ளிகளில், இது போன்ற நிலை இல்லை என, துறை வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், தனியார் பள்ளிகளில், மொபைல் போன் பயன்பாடு இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து, தற்போது, தொடக்க கல்வித்துறை, கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக, தொடக்க கல்வி இயக்குனர், இளங்கோவன் வெளியிட்ட அறிவிப்பு: பள்ளி வளாகத்தில், மொபைல் போன் பயன்படுத்துவதால், மாணவர்களின் கவனம் திசை திரும்புகிறது. எனவே, மாணவ, மாணவியர், பள்ளிக்கு, மொபைல்போன் கொண்டு வராமல் இருக்க, பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைமை ஆசிரியர், பெற்றோருக்கு, உரிய அறிவுரை வழங்க வேண்டும்.


ஆசிரியர்களுக்கும் தடை:
வகுப்பு அறைகளில், ஆசிரியர், மொபைல்போனை பயன்படுத்தக் கூடாது; பாடம் நடத்தும்போது, மொபைல் போனை, "சுவிட்ச் ஆப்' செய்து வைக்க வேண்டும். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மூலமாக, அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், தகவல் தெரிவித்து, விதிமுறையை, தவறாமல் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

THANKS : DINAMALAR

No comments:

Post a Comment