இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Wednesday, October 19, 2011

அம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி?

வெயில், மழை கலந்த சீதோஷ்ண நிலை தற்போது நிலவுவதால் வைரஸ்கள் வேகமாக பெருகி நோய்களை பரப்பி வருகின்றன. சளி, காய்ச்சல் தொடங்கி அம்மை உள்ளிட்ட பெரிய நோய்கள் வரை வைரஸ்களால் ஏற்படுகின்றன. அம்மை நோய்களில் இருந்து காத்துக் கொள்வது பற்றி ஆலோசனை சொல்கிறார் டாக்டர் முத்து செல்லக்குமார்.

வைரஸ் கிருமிகள் மிகவும் நுண்மையானவை. அவற்றின் ஆன்டி ஜீன்கள் அடிக்கடி மாற்றம் அடைவது, புதிய அவதாரம் எடுப்பது போன்ற காரணங்களால் வைரஸ்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது சவாலாக உள்ளது.

இந்தியா வெப்ப நாடாக இருப்பதால் இங்கு அம்மை நோய் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. வெரிசெல்லா ஜோஸ்டர் என்ற வைரசால் சின்னம்மை நோய் ஏற்படுகிறது. பாராமிக்ஸோ குடும்பத்தை சேர்ந்த ஆர்.என்.ஏ. வைரஸ் தட்டம்மையை ஏற்படுத்துகிறது.

அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். சின்னம்மையாக இருந்தால் உடலில் வியர்குரு போல சிறிய கொப்புளங்கள் தோன்றும்.

பின்னர் பெரிதாகி நீர் கோர்த்துக் கொள்ளும். நிறம் மாறி கொப்புளங்களில் இருந்து நீர் வடிந்த பின்னர் வறண்டு உதிரும். கொப்புளம் உள்ள இடங்களில் வடு ஏற்படும்.

உடலில் அரிப்பு, தாங்க முடியாத வலி போன்ற பிரச்னைகள் உண்டாகும். ஒரு வாரத்தில் கொப்புளங்கள் உலர்ந்து விடும். இந்த அம்மை நோய் குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தாக்கும்.

மேலும் கொப்புளம் குணமாகும் வரை இருமல் மற்றும் தும்மல் மூலமாக இந்நோய் பிறருக்கு பரவ வாய்ப்புள்ளது.

சின்னம்மை தானாகவே குணமாகும் அல்லது தக்க மருந்துகளை பயன்படுத்தி குணப்படுத்த லாம். அம்மை நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது சிலருக்கு நிமோனியா அல்லது மூளைக்காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது.

கரு தரித்த பெண்களுக்கு சின்னம்மை ஏற்படும்போது கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும். குழந்தைக்கு பார்வைக் குறைபாடு, தலை சிறிதாக இருத்தல், மூளை வளர்ச்சி குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

சின்னம்மை எளிதில் பரவும்  என்பதால் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் வருகிறது. சின்னம்மை ஒருவரது வாழ்வில் ஒரு முறை வந்து விட்டால் மீண்டும் வர வாய்ப்பில்லை.

வாழ்நாள் முழுவதும் இந்த அம்மை நோய்க்கான தடுப்பாற்றல் உடலில் ஏற்பட்டு விடும். சின்னம்மை இது வரை வராத பெரியவர்கள் மற்றும் ஒரு வயது நிறைவடைந்த குழந்தைகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தட்டம்மை தாக்குகிறது. பொதுவாக அம்மை நோயை முழுமையாக குணப்படுத்தவும், வைரஸ் கிருமிகளை அழிக்கவும் மருந்துகள் கிடையாது.
அம்மை நோயால் உடலில் ஏற்படும் காய்ச்சல், உடல் வலி, அரிப்பு போன்ற பாதிப்புகளைக் குறைத்து, நோய் அறிகுறிகளைப் போக்குவதற்கான மருந்துகள் மட்டுமே உள்ளன.

பாதுகாப்பு முறை: வழக்கமாக அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டால், வேப்பிலையை தலைமாட்டில் வைத்து படுக்க வைத்து விடுகின்றனர். அம்மைக் காலத்தில் ஏற்படும் காய்ச்சல், உடல் வலி மற்றும் அரிப்புக்கு மருந்து எதுவும் எடுத்து கொள்வதில்லை.

மேலும் சத்தான உணவு உட்கொள்வதும் இல்லை. இதனால் அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். போதுமான ஓய்வு மற்றும் தூக்கமின்மையால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இவற்றை தடுக்க வேண்டியது அவசியம். அம்மையால் ஏற்படும் உடல் பிரச்னைக்கு மருந்து தருவது தெய்வ குற்றம் என்று நினைக்கும் மனநிலை மாற வேண்டும்.

அம்மை நோய் தாக்குவதைத் தடுக்க குழந்தைகளின் ஒன்பதாவது மாதத்தில் இருந்து தடுப்பூசி போட வேண்டும். அதன் பின்னர் குழந்தைக்கு ஒன்றரை வயதாகும் போது எம்.எம்.ஆர். எனப்படும் முத்தடுப்பு ஊசி போட வேண்டியதும் அவசியம்.இதில் தட்டமைக்கான தடுப்பூசியும் அடங்கும். சின்னம்மை தடுப்பூசி ஒரு வயது முடிந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் போடலாம்.

தடுப்பூசிகளை சரியாகப் போடுவதன் மூலம் அம்மை நோய் வராமல் தடுக்கலாம். முறையான மருத்துவம் மற்றும் உணவு முறைகளைப் பின்பற்றி பெரிய பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்.

நன்றி: தமிழ் சிஎன்என்

Saturday, October 15, 2011

உள்ளாட்சிக்கான தேர்தலா ?ஊழலாட்சிக்கான தேர்தலா ?முடிவு உங்கள் கையில்.

சாதாரணமான மக்களும் வியக்கும் வண்ணம் இப்போதுள்ள உள்ளாட்சி தேர்தல்கள்  மாறி வருகின்றது.ஏனென்றால் அந்த அளவுக்கு போட்டி போட்டுக்கொண்டு வேட்ப்புமனு தாக்கல் செய்யபட்டுள்ளன.

ஒரு நேரத்தில் உள்ளாட்சி  தேர்தலில் ஊரில் உள்ள மக்களில் சற்று பிரபலமானவர் போட்டி இடுவார் ஆனால் இன்றோ பெரிய பெரிய அரசியல் கட்சிகளும் அதிக கவனம் செலுத்தி வேட்பாளர்களை நிறுத்தி வருகின்றது.அதற்க்கு காரணம் உள்ளாட்சிகளில் நிறைவேற்ற படும்  திட்டங்களுக்கு நிதிகளின் தொகை அதிகமாக ஒதுக்கபடுவதே காரணம்.பஞ்சாயத் ராஜ் திட்டம் மூலம் கோடிகணக்கான பணம் மதிய அரசால் ஒதுக்கபடுகின்றன.அதற்கு என்ன அது தெரிந்ததுதானே என்று சிலர் நினைக்கலாம். தெரியாத விசயங்கள் உள்ளது ஊரில் நிறைவேற்றப்படும் திட்டங்களை செயல்படுத்தும் காண்ட்ராக்டர்கள் மூலம் தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு கமிசனாக(லஞ்சமாக) 4 சதவிகிதம் அதிகமாக வழங்கபடுகிறது. அட போங்க சார் இது நம்ம இந்தியால என்ன பெரிய  விசயமா ?என்று கேக்கலாம் தேசிய அளவில் நடக்கும் ஊழல்கள்  நம்மை எந்த அளவில் பாதிகின்றன என்பதை நாம் இன்னும் உணராமல் இல்லை (விலைவாசி உயர்வு,பெட்ரோல்,கேஸ்,போன்றவைகளின்விலை உயர்வு)நேரடியாகவே பாதிகின்றன.உள்ளாட்சிகளில் நடக்கும் ஊழல்கள் நமது ஊரில் நடக்கும் திட்டங்களில் தரமின்மையாலும்,பஞ்சாயத்துகளில் நடைபெறும் நிர்வாக சீர்கேடுகளினாலும் பாமரனும் பாதிக்கபடுகிறான்.

கிராம நிர்வாக அலுவலரில் இருந்து தாசில்தார் வரை லஞ்சம் அளித்தால்தான் நமக்கு தேவையான ஆவணங்களை  பெற முடியும்.இப்படி லஞ்சம் புரையோடி உள்ள நாட்டில் யாரு என்னதான் செய்ய முடியும் என்று நினைத்து நாமும் பழகி விட்டோம்.

தற்போது உள்ள சூழ்நிலையில் கண்டிப்பாக ஒரு ஊழலற்ற MLA வையோ MP யைய்யோ  நம்மால் தேர்ந்தெடுக்க  முடியாது என்பது நிதர்சனம்.ஆனால் கண்டிப்பாக ஒரு வார்டு கவுன்சிலரை,பஞ்சாயத் தலைவரை,நகராட்சி தலைவரை, உள்ளாட்சி தேர்தலில் போட்டி இடும் கிராம புற வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க முடியும் இதில் கண்டிப்பாக அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் நாம் எதிர்பார்க்கும் ஊழலற்ற நிர்வாகத்தை தரமாட்டார்கள் அப்படியே அவர்கள் நல்லவர்களாக  இருந்தாலும் அவர்கள் சார்ந்துள்ள கட்சியினர் அவர்களை நல்லவர்களாக் இருக்கவிடுவதில்லை.அதனால் இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டி இடுபவர்களிலும்  அவர்களுடைய கடந்த கால வாழ்க்கை முறையை பார்த்து தேர்ந்தெடுப்பதே நல்லது

யார் ஒருவர் பதவி ஆசை இல்லாமல் பொது சேவைகளை பெருமைக்கு செய்யாமல்,தானா தர்மங்களை பிறர் காண செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களை போன்றவர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் ஆகவே தங்களுடைய குடும்பத்தினரின்  பொன்னான வாக்குகளை மேற்கண்டவிசயங்களை சிந்தித்து இந்த  செய்தியை படிக்கும் நண்பர்கள்  தங்கள் குடும்பத்தினருக்கு தெரிவித்து வாக்களிக்க வேண்டும் என நமது  ஊரின்,மாவட்டத்தின், நாட்டின்  நலன் கருதி ஒரு ஊழலற்ற பஞ்சாயத்து,நகராட்சி,மாநகராட்சி  ( தலைவரை) வார்டு உறுப்பினர்களை,கவுன்சிலர்களை ,மேயர்களை தேர்ந்தெடுக்க  வேண்டும் என்றுகேட்டுக்கொள்கிறேன்.
 
THANKS : முகைதீன்