இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Thursday, June 30, 2011

கல்விக்கு இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவம்

இஸ்லாத்தின் மூல வேத நூலான புனித மிகு அல்குர்ஆனின் முதல் வசனமே ‘இக்ரஃ’ நபியே நீர் ஓதுவீராக, கற்பீராக என்ற ஆணையுடன்தான் அருளப்பட்டது. ஒன்றே இஸ்லாம் கல்விக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தை விளக்குகின்றது. கல்வியை அரசியலை ஆய்வியலை வலியுறுத்தும் நூற்றுக்கணக்கான அல்குர்ஆன் வசனங்கள் காணப்படுகின்றன.

குறிப்பாக அல்குர்ஆனின் 39:09, 17:85 27:52, 29:43, 35:28, 20:114ம் இலக்க வசனங்கள் அல்குர்ஆன் கல்விக்கு அறிவியலுக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. அவ்வாறே எம் பெருமானார் (ஸல்) அவர்களும் கல்வியின் ஆய்வின் முக்கியத்துவத்தை பல்வேறு ஹதீஸ்கள் மூலம் வலியுறுத்தியுள்ளார்கள். அவற்றில் சிலவற்றை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

* “கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்” (அல்- ஹதீஸ், புகாரி)
* “ ஒருவன் கல்வி கற்பதற்காகப் புறப்பட்டு வெளிக்கிளம்பும் போது மலக்குகள் மண்ணில் உள்ளவர்கள், விண்ணிலுள்ளவர்கள் மட்டுமன்றி கடலிலுள்ள மீன்கள் உட்பட அவனுக்காக துஆ பிரார்த்தனை செய்கின்றன. (அபூதாவூத் 3634)
* “மறுமையில் நபிமார்களும், அறிஞர்களும் எவ்வித வேறுபாடும் காணப்படாது. நபிமார்களுக்குரிய நபித்துவம் என்று அந்தஸ்தை தவிர” (ஹதீஸ்) இவ்வாறு அறிவின், அறிஞர்களின் சிறப்பை வலியுறுத்தும் நூற்றுக் கணக்கான நபி மொழிகள் பாபுல் இல்ம் என்ற ஹதீஸ் பிரிவில் காணப்படுகின்றன.

பெருமானார் (ஸல்) அவர்களுக் குப் பின் கிலாபத் ஆட்சி செய்த நாற்பெரும் கலீபாக்களும், அதன் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உமையாக்கள், அப்பாஸிகள், உதுமானிய ஆட்சியாளர்கள் அனைவரும் இஸ்லாம் வலியுறுத்திய கல்விக்கு தமது அரசாங்க செயற்பாடு களினூ டாக உரிய அந்தஸ்தையும், கெளரவத்தையும் வழங்கி வந்தார்கள். முக்கியமாக முஸ்லிம்கள் அனைவ ருமே குர்ஆனை ஒதவும் விளங்கவும் செயற்படுத்தவும் தூண்டப்பட்டார்கள்.

அறிவையும் ஆய்வையும் மூல நோக்காகக் கொண்டு பல ஆய்வியல் அமைப்புக் கள் கலிபாக்களின் காலத்திலேயே தோற்றுவிக்கப்பட்டன. குறிப்பாக ‘தாருல் உலூம்’ (அறிவியல் கூடம்) தாருல் ஹிக்மா, பைதுல் ஹிக்மா என்பன போன்ற அறிவியல் சார்ந்த கல்வி நிலையங்கள் இவற்றில் மிக முக்கியமானவைகளாகும். இக்கல்வி நிறுவனங்கள், விவசாய, இரசாயனவியல், உயிரியல், புவிவியில், தர்க்கவியல்,கணக்கி யல், மருத்துவம், தத்துவவியல், மிருக வியல் போன்ற “உலூமுல் அக்லிய்யா” என்ற அனைத்து விஞ்ஞானத்துறை பாடங்களில் இலவசக் கல்வியை தொடர்ந்து வழங்கி வந்தன.

இஸ்லாமிய கல்விநிலையங்களுக்கும் (மத்ரஸாக்கள் தாராளமான நிதி வசதிகளையும் மாணவர்களுக்கான இலவசக் கல்வி, புலமைப் பரிசில் களையும் தொடர்ந்து வழங்கி வந்தன. இதன் காரணாக இஸ்லாமிய உலகம் அதன் பொற்காலம் என்ற அறிவியல், அரசியல், பொருளாதார, சமூக மேம் பாட்டு வளர்ச்சியைக் கண்டு உலகில் தன்னிகரில்லாத கெளரவத்தை உலக அரங்கில் பெற்றிருந்தது.

இன்று பொதுவாக உலகில் மத சார்பான கல்வி முறைகளும், மதச்சார்பற்ற கல்வி முறைகளும் காணப்படுகின்றன. முஸ்லிம்களைப் பொறுத்தவரை இவ்விரண்டையும் இணைத்த கல்வி முறைமை ஒன்றே இஸ்லாத்தின் வழிகாட்டலும், இன்றைய அவசியத் தேவையுமாகும்.

பொதுவாக இன்றைய மேற்குலகக் கல்வி சட்வாதத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வியாக வகுக்கப்பட்டுள்ளன. மேற்குலகக் கல்வியின் இன்றைய குறிக்கோள், தேசத்தின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண் டுள்ளது. அது மதசார்பான, சமூக ஒழுக்கவியல் சார்பான எதையும் அக் கறையோடு நோக்குவதில்லை. சர்வதேச ரீதியாக கல்வியை இன்று விருத்தி செய்ய முற்பட்டுள்ள உலக வங்கியும இக்குறிக்கோளையே கல்விப்பணியில் அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்தவரை கல்வியில் நோக்கத்தை அது பின்வருமாறு வரையறுக்கின்றது.

1. ஒழுக்க மேம்பாடு
2. இஸ்லாமிய தனித்துவத்தை- தலைமைத்துவத்தை உருவாக்குதலும் விருத்தி செய்தலும்
3. எம்மைப் படைத்த வல்ல அல் லாஹ்வுக்கு பொறுப்புக் கூறல்.
அண்மையில் நடைபெற்ற உலக முஸ்லிம்களின் முதலாவது கல்வி மாநாடு கல்வியின் நோக்கம் பற்றிய மேற்கண்ட குறிக்கோள்களை உறுதிப்படுத் தியுள்ளன. எனவே இஸ்லாமியக் கல்வி என்பது அல்-குர்ஆன், சுன்னாவின் வழிகாட்டலில் இறைவனுக்கு மட்டும் அடிபணியும், நாம் இறைவனின் பிரதிநிதி (கலிபா) என்ற அடிப்படையில் நிறுவப்பட வேண்டும்.

இக்கல்விக் கூடங்களில் காணப்படும் ஒழுக்க சீர்கேடு, பாலியல் துஷ்பிரயோகம் சமய நம்பிக்கையின்மை, கலாசார பாதிப்புகளைப் பற்றி அவர்கள் அக்கறையுடன் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இன்று எமது பிள்ளைகள் எதிர்நோக்கம் பாடசாலை சவால்களாவன

1. குற்றம், துப்பாக்கி, கற்பழிப்பு போன்ற குற்றச் செயல்கள்
2. போதைப் பொருள் பாவனையும் தடை செய்யப்பட்ட ஆண் பெண் உறவுகளும்
3. ஓரினச் சேர்க்கை
4. வறுமை
5. விவாகரத்து
6. குடும்ப பிளவுகளும், ஒரு பெற்றோர் குடும்பமும்
7. இளம்வயது கர்ப்பம் தரித்தல்
8. பாலியல் துஷ்பிரயோகம்
9. சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்

எனவே ஒவ்வொரு இஸ்லாமிய பெற்றோரும் தமது பிள்ளைகளின் ஒளிமயமான எதிர் காலத்துக்காகவும், இஸ்லாமிய இலட்சியத்துடனான அவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும் பின் வரும் விடயங்களை கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. அதிகாலையில் சுபஹுத் தொழுகையோடு கண்விழித்து பிள்ளைகளைத் தொழப் பழக்குதல்.

2. செளகரியமான சந்தோஷமான குடும்ப வாழ்வுக்கு முயலல்.

3. பிள்ளைகளுக்கு வேண்டிய சகல வசதிகளையும், வாழ்க்கை அமைப்பையும் செய்து கொடுத்தல்.

4. நல்ல கல்வியை ஊட்டுதல்

5. தினமும் பிள்ளைகளோடு சேர்ந்து குர்ஆனை ஓதுதல், அவர்களோடு அதிகமாக காலத்தை செலவிடல்.

6. சிறந்த இஸ்லாமிய வழிகாட்டல் அமைந்த இலக்ரோனிக் சாதனங் களை ஏற்படுத்தி அவற்றை கண் காணித்தல்.

7. இஸ்லாமிய உரைகளை, நிகழ்ச் சியை பார்க்கும், கேட்கும் வசதிகளை செய்து கொடுத்தல்.

இவ்வாறான பல முயற்சிகளை இங்குள்ள பெற்றோர்கள் உடனடியாக மேற்கொள்ளாவிடில் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குரியதே. நீங்களும் இறைவனிடத்தில் மறுமையில் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

நன்றி : தாவா வேர்ல்ட்

+2 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு நானோ கார் பரிசு!

ஓசூர்: மாநில அளவில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற ஒசூர் ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளி மாணவி கே.ரேகாவுக்கு பள்ளி நிர்வாகம் நானோ கார் வழங்கியது. மூன்றாம் இடம் பிடித்த மாணவி பி.எஸ்.ரேகாவுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.

மாநில அளவில் பிளஸ் 2 தேர்வில் 1200 க்கு 1190 மதிப்பெண்கள் பெற்று கே.ரேகா முதலிடம் பிடித்தார். மேலும் அதே பள்ளி மாணவி பி.எஸ்.ரேகா 1200 க்கு 1186 பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்தார். இந்த மாணவிகளை கெளிரவிக்கும் வகையில் ஒசூர் ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளி தாளாளர்கள் மணிவண்ணன் மற்றும் செல்வி மணிவண்ணன் ஆகியோர் பள்ளி நிர்வாகம் சார்பில் முதல் மாணவி கே.ரேகாவுக்கு நானோ காரையும், 3 ம் இடம் பிடித்த மாணவி பி.எஸ்.ரேகாவுக்கு மொபெட்டும் வழங்கி கெளிரவித்தனர்.

மேலும் பிளஸ் 2 வகுப்பில் பாடம் நடத்திய 8 ஆசிரியர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் மதிப்பிலான இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. பள்ளித் தலைமை ஆசிரியர் சம்பத்குமாருக்கு சொகுசு கார் வழங்கப்பட்டது. மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

Wednesday, June 29, 2011

மனிதனின் மூளை அளவு குறைந்து விட்டது: நிபுணர்கள் தகவல்

இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர் டாக்டர் மார்தா லாகர் தலைமையிலான குழுவினர் மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

அவர்கள் ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங்களில் வாழும் மனிதர்களின் மண்டை ஓடுகள் மூலம் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

சமீபத்தில் இஸ்ரேலில் உள்ள குகைகளில் இருந்து மனித மண்டை ஓடுகள் கிடைத்தன. இது கடந்த 1 லட்சம் முதல் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குகை மனிதர்களுடையது என தெரிய வந்தது.

அவர்கள் நடத்திய ஆய்வின் மூலம் இவர்கள் மிகவும் உயரமாகவும், கட்டுமஸ்தான உடலமைப் புடனும் இருந்தது தெரிய வந்துள்ளது.

அதே போன்று அவர்களின் மூளை அளவு பெரிதாக இருந்தது. அவர்களின் உடல் அமைப்பை தற்போது வாழும் மனிதர்களுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

கடந்த 10 ஆயிரம் ஆண்டுக்குள் ஆதிகால மனிதனை விட தற்போதைய மனிதனின் உயரமும், உடல் எடையும் குறைந்துள்ளது.

அதே நேரத்தில் மூளையின் அளவும் 10 சதவீதம் குறைந்து சுருங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அதற்கு தற்போது உணவு கட்டுப்பாடு மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலை, இதை தொடர்ந்து ஏற்படும் நோய்களும் காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Thursday, June 23, 2011

இனி எந்த மொழியையும் தமிழுக்கு மாற்றலாம்! தமிழை எந்த மொழிக்கும் மாற்றலாம்!! - அறிமுகப்படுத்தி அசத்தியது கூகுள்

தமிழ் மட்டும் தெரிந்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் தெரியாதவர்களின் நீண்ட நாள் கனவை இன்று கூகுள் நினைவாக்கியுள்ளது.

ஆம் ! இனி தமிழில் நாம் எழுதும் வாக்கியங்களை எந்த மொழிக்கும் மாற்றிக் கொள்ளலாம். அதே போன்று ஆங்கிலம் அரபி ஜெர்மனி போன் எந்த மொழியில் உள்ள வாக்கியங்களையும் யாருடைய துனையும் இன்றி தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.

மற்ற மொழிகளில் உள்ள இணையதளங்களையும் நம் தாய் மொழி தமிழில் யாருடைய துனையின்றியும் படித்துக் கொள்ளலாம்.

நமக்கு தமில் தெரிந்திருந்தால் போதும் அது சகல மொழிகளும் தெரிந்ததற்கு சமம்…Google Translate  என்று சொல்லப்படும் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவை இன்று 5 இந்திய மொழிகளுக்கான  (Bengali , Gujarati , Kannada , Tamil and Telugu) மொழிபெயர்ப்பு சேவையை அறிமுகம் செய்துள்ளது.

ஆச்சிரியமாக உள்ளதா ? நீங்களே முயற்சி செய்து பாருங்கள்…


எனினும் கூகுள் இதை மற்ற மொழிபெயர்ப்புகளை போன்று துள்ளியமான மொழிபெயர்ப்பாக (supported language) இதை அறிமுகப்படுத்தவில்லை alpha languages என்று சொல்லப்படும் பரிசோதனை மொழிபெயர்ப்பாக இதை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது இந்த தமிழ் மொழிபெயர்ப்பு தொழில்நுட்பம் முழுவதுமாக முடியவில்லை பரிசோதனையில் உள்ளது போகப் போகப் தமிழ் மொழிபெயர்ப்பின் தரம் மற்ற மொழிபெயர்ப்புகளை போன்று மிகத்துள்ளியமாக இருக்கும்.

நன்றி : TNTJ

காஸ் இணைப்பு பெற "ஆதார்" எண் கடிதம்

"புதிய காஸ் இணைப்பு பெறுவதற்கு, இந்திய அரசு தனி நபர்களுக்கு வழங்கும், "ஆதார்' எண் ஒதுக்கீடு மற்றும் முகவரிக்கான கடிதத்தை, அடையாள ஆதாரமாக இணைக்கலாம்' என, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கூறியுள்ளது.

இது குறித்து, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்திய அரசு தனி நபர் அடையாளத்துக்காக, ஒவ்வொரு தனி அடையாள வழங்கும் பணியை துவக்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, "ஆதார்' எண் ஒதுக்கியதற்கான கடிதம் வழங்கப்படுகிறது. முகவரி, புகைப்படம் ஆகியவையும் அந்த கடிதத்தில் இடம் பெறும். புதிய காஸ் இணைப்பு பெறுவதற்கு, தனி நபர் அடையாளத்துக்காக அளிக்கப்படும் சான்றுகளுடன், "ஆதார்' எண் ஒதுக்கீட்டு கடிதத்தையும் ஆதாரமாக இணைக்கலாம்.

பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகியவை தங்கள் முகவர்களுக்கு, புதிய காஸ் இணைப்பு வழங்க, "ஆதார்' எண் கடிதத்தையும் ஒரு சான்றாக இணைத்து கொள்ளும்படி அறிவுரை அனுப்பியுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ரேஷன் கார்டிற்கும் மிக்சி, மின்விசிறி, கிரைண்டர்: ஒரே "பேக்கேஜ்' ஆக வழங்க உத்தரவு

ஒவ்வொரு குடும்பத்துக்கும், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை சேர்த்தே, "பேக்கேஜ்' ஆக வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக கொள்முதல் செய்யப்படும், 25 லட்சம் பொருட்களை, எந்தெந்த குடும்பத்துக்கு வழங்குவது என்பதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.

அரிசி வாங்க தகுதியுள்ள, 1.83 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதில், முதல் கட்டமாக, 25 லட்சம் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி கொள்முதல் செய்ய, டெண்டர் விடப்பட்டுள்ளது. இவற்றை வினியோகிக்கும் பணி, செப்டம்பர் 15ம் தேதி துவங்க உள்ளது. இதில், தலா, 25 லட்சம் பொருட்கள் கொள்முதல் செய்வதால், மொத்தம், 75 லட்சம் பொருட்களை, ஒரு வீட்டுக்கு மிக்சி, மற்றொரு வீட்டுக்கு கிரைண்டர், இன்னொரு வீட்டுக்கு மின்விசிறி என அளித்தால், 75 லட்சம் குடும்பங்கள் ஒரே சமயத்தில் பயனடையும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது. ஆனால், முதல்வர் ஜெயலலிதா, மூன்றையும் சேர்த்தே ஒரே, "பேக்கேஜ்' ஆக வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இதனால், ஒவ்வொரு குடும்பத்துக்கும் இந்த மூன்று பொருட்களும் மொத்தமாகவே வழங்கப்பட உள்ளன. இதன் மூலம், ஒரு வீட்டுக்கு மின்விசிறி கிடைத்து, இன்னொரு வீட்டுக்கு கிரைண்டர் கிடைத்தால் ஏற்படும் அதிருப்தி தவிர்க்கப்படும்.

மேலும், மூன்று பொருட்களுமே மிகவும் தரமாக இருக்கவேண்டும் என்பதில், தமிழக அரசுஉறுதியாக உள்ளது. சந்தையில் உயர்தரத்தில் உள்ள பொருளையே வழங்க வேண்டுமென விரும்புகிறது. இதற்காக, எந்த நிறுவனம் சப்ளை செய்தாலும், அரசு நிர்ணயித்து உள்ள தரத்துடன் வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 25 லட்சம் மிக்சி கொள்முதல் செய்ய, 500 கோடி ரூபாய்க்கும், கிரைண்டர் கொள்முதல் செய்ய, 500 கோடி ரூபாய்க்கும், மின்விசிறி கொள்முதல் செய்ய, 250 கோடி ரூபாய்க்கும் டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டர், ஜூலை 11ம் தேதி திறக்கப்படுகிறது. அதற்கு முன்பாக, இப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டம், கடந்த 21ம் தேதி நடத்தப்பட்டது. அதில், பொருட்களின் தரம் குறித்து, நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு விளக்கப்பட்டது. அவர்களது சந்தேகங்கள்குறித்தும் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டு உள்ளன. இவற்றுக்கும் உரிய விளக்கங்களை அரசு அளிக்க உள்ளது.

டெண்டர் முடிந்து, பொருட்களை கொள்முதல் செய்வதற்கான உத்தரவு, ஜூலை 15ம் தேதிக்குள் வழங்கப்பட்டு விடும். எனவே, செப்டம்பர் 15ம் தேதி முதல், பொருட்களின் வினியோகம் துவங்கும். ஒரே நிறுவனத்துக்கு, 25 பொருட்களையும் தயாரிக்கும் உரிமத்தை கொடுக்காமல், பல்வேறு நிறுவனங்களுக்கு பிரித்து வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், சென்னையில் என்ன தரத்தில் கிரைண்டர் வழங்கப்படுகிறதோ, அதே தரத்தில் மதுரை அல்லது கன்னியாகுமரியிலும் வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது. முதல் கட்டமாக, 25 லட்சம் பொருட்களை கொள்முதல் செய்வதால், மொத்தமுள்ள, 1.83 கோடி குடும்ப அட்டைகளில், யாருக்கு முதலில் இவற்றை வழங்குவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி, தலைமைச் செயலர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தலைமைச்செயலகத்தில் நேற்று நடந்தது. இதில், முதல் கட்டமாக பயனாளிகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களாக கண்டறியப்பட்டுள்ள, "அந்த்யோதயா அன்னா யோஜனா' திட்டத்தின் கீழ் வரும் பயனாளிகளுக்கு முதல் கட்டமாக இவற்றை வழங்கலாமா அல்லது அனைத்து மாவட்டங்களிலும், ஒன்றியங்களிலும் பரவலாக கிடைக்கும் வகையில் பொருட்களை வழங்கலாமா என்பதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இவை விரைவில் வெளியிடப்படும்.

வருவாய்த் துறையே பொறுப்பு: மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறியை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்தாலும், அவை, ஏற்கனவே இலவச "டிவி' வழங்கப்பட்ட முறைப்படியே மக்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளன. அதாவது, வருவாய்த் துறையினர் மூலமே வினியோகம் செய்யப்படும். எனினும், இப்பொருட்கள் உரியவர்களுக்கு உரியமுறையில் வினியோகிக்கப்படுகிறதா என்பதையும், அவற்றின் தரம் மற்றும் அப்பொருட்களை, "சர்வீஸ்' செய்வதற்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளனவா என்பதையும், புதியதுறையான சிறப்பு திட்ட அமலாக்கத் துறை கண்காணிக்கும். இதற்காக, மாவட்ட அளவில், சிறப்பு திட்ட அமலாக்கத் துறை சார்பாக, புதிதாக ஆட்களை நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மக்களுக்கு இலவசப்பொருட்கள் கிடைப்பதை, இத்துறை உறுதி செய்யும்.

நன்றி : தினமலர்

Wednesday, June 22, 2011

DR. ZAKIR NAIK - ABOUT HIJAB

ABOUT HIJAB P.J

அன்னியப் பெண்ணின் முகத்தைப் பார்க்கலாகாது என்ற சட்டம் குறித்து வரும் அறிவிப்புகள்.

சாதாரண நிலையில் அன்னிய ஆண்/பெண்களின் முகத்தை அன்னிய பெண்/ஆண்கள் சரியான காரணமின்றிப் பார்ப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

இறைமறை 24:30,31 வசனங்களில் மூஃமினான ஆண்களுக்கும், மூஃமினான பெண்களுக்கும் என இரு பாலினருக்கும் சேர்த்தே பார்வைளைத் தாழ்த்திக் கொள்ளும்படி அல்லாஹ் கூறுகிறான்.

ஆண் முகம் மறைக்காமல் இருப்பதால் அங்கு பார்வைகள் சந்திக்காமல் இருக்க என்ற கருத்து கொண்டு, பெண்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என்பது சரியே! பெண்கள் முகத்திரை அணிந்திருந்தால் பார்ப்பதற்கு எதுவுமே இல்லை. எனும்போது ஆண்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும் என்பது இங்கு பொருத்தமாக இல்லை. அதாவது, பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என்று சொல்வது ஒரு செயலைத் தவிர்த்துக்கொள்ளும்படி இடும் கட்டளையாகும். அந்தக் கட்டளை இருபாலினருக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும். ஏனெனில் இரு சாராருக்கும் ஒரே மாதிரியாக ''பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும்'' எனச் சொல்லப்படுகிறது.

பெண்கள் முகத்திரை அணிந்து பார்வைக்காக கண்கள் மட்டும் திறந்திருக்கலாம் என்று சொன்னால் கண்கள் முகத்தின் ஒரு பகுதியாகும். என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

''நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம், ஏதேச்சையாக (அன்னியப் பெண் மீது) பார்வை விழுவதைப் பற்றிக் கேட்டேன். அப்போது எனது பார்வையை (உடனடியாகத்) திருப்பிக்கொள்ள வேண்டுமென அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்" என்று ஜரீர் பின் அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத்)

"அலியே! எதிர்பாராது அன்னியப் பெண்ணைப் பார்க்க நேரிட்டால் மீண்டும் பார்க்காதே!. ஏனெனில் முதல் பார்வை உனக்கு (அனுமதிக்கப்பட்டு) உள்ளது. இரண்டாம் பார்வை (அனுமதிக்கப்பட்டது) இல்லை" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மதீ, அபூதாவூத்)

"நானும் மைமூனா(ரலி)வும் நபி(ஸல்) அவர்களிடம் இருந்த போது இப்னு உம்மி மக்தூம்(ரலி) வந்தார்கள். ஹிஜாப் சம்பந்தமான கட்டளை வந்த பிறகு இது நடந்ததாகும். அப்போது நபி(ஸல்) அவர்கள், ''இவரை விட்டும் நீங்கள் இருவரும் மறைந்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். அதற்கு நான் "அவர் குருடாயிற்றே! அவர் எங்களைப் பார்க்கவோ அறியவோ முடியாதே?'' என்று கேட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ''நீங்கள் இருவரும் குருடிகளா?; நீங்கள் அவரைப் பார்க்க மாட்டீர்களா?'' என்று கேட்டதாக உம்முஸலாமா(ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதீ)

உங்களில் ஒருவரை ஒரு பெண்(ணின் அழகு) கவர்ந்து அவரது உள்ளத்தில் தவறான எண்ணம் தோன்றினால் உடனே அவர் தம் மனைவியை நாடிச் சென்று அவளுடன் உறவு கொள்ளட்டும். ஏனெனில் அது அவரது மனதில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள் - முஸ்லிம் 2718. திர்மிதீ)

மேற்கண்ட அறிவுரைகளிலிருந்து ஓர் ஆண் அன்னியப் பெண்ணையோ, ஒரு பெண் அன்னிய ஆணையோ அவசியமின்றிப் பார்ப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். எதிரில் வருவது பெண், அல்லது ஆண் என்று தெரிந்தால் மீண்டும் அந்தப் பெண்ணை/ஆணைப் பார்ப்பதை விட்டும் பார்வையைத் திருப்பிக் கொள்ள வேண்டும். இது தான் அன்னியரைக் காண்பதைக் குறித்து ஆணுக்கும் பெண்ணுக்கும் இஸ்லாம் வழங்கும் அறிவுரையாகும்.

அவசிய நிமித்தம் அன்னியப் பெண்ணைப் பார்ப்பதில் தவறில்லை. மருத்துவரிடம் நோயைச் சொல்லும் போது அவரை நோக்கியே சொல்ல வேண்டியிருக்கும். வியாபாரம், மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் அன்னிய ஆணும் அன்னியப் பெண்ணும் பொது இடங்களில் பணி போன்ற அவசிய நிமித்தம் கருதி நேரடியாக உரையாட வேண்டியச் சந்தர்ப்பம் நிகழுமானால் அதில் தவறில்லை. மார்க்க சம்பந்தமாக பெண்கள் நபி(ஸல்) அவர்களை நோக்கி கேள்வி கேட்டுள்ளனர். நபி(ஸல்) அவர்களும் பெண்களின் கேள்விகளுக்கு அவர்களை நோக்கி விளக்கமளித்துள்ளார்கள்.

இந்த அறிவிப்புகளிலிருந்து, அன்னியப் பெண்ணைப் பார்க்கலாம், தீய எண்ணத்துடன் - சபலத்துடன் பார்க்கலாகாது. தேவையின்றிப் பார்ப்பதே தடைசெய்யப்பட்டதாகும். என்றே விளங்க முடிகிறது.

மூஃமினான ஆண்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் (24:30) என்ற வசனத்தின் கருத்திலிருந்தும் எதிரே வருவது பெண்ணாக இருந்தால் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என ஒரு முறை பார்ப்பதற்கான அனுமதியாகும்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் மீது அவதூறு சுமத்திய செய்தியின் அறிவிப்பில் ஸஃப்வான் இப்னு முஅத்தல் அல் ஸுலமீ (ரலி) அவர்கள் தனியாக தூங்கிக்கொண்டிருந்த ஆயிஷா (ரலி) அவர்களின் முகத்தைப் பார்த்தே இவர் நபியவர்களின் துணைவியார் என்று தெரிந்து கொள்கிறார். (புகாரி 2661)

இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரை அணியக் கூடாது; அவள் கையுறைகளையும் அணியக் கூடாது!'' என்று இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (ஸஹீஹுல் புஃஹாரி-1838)

நபியே நீர் உம்மனைவிகளுக்கும், உன் பெண்மக்களுக்கும்,ஈமான் கொண்டவர்களில் பெண்களுக்கும்,அவர்கள் தங்கள தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக.அவர்கள் (கண்ணியமானவர்கள் என ) அறியப்பட்டு,நோவினை செய்யப்படாமல்
இருக்க இது சுலபமான வழியாகும்.மேலும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்.மிக்க அன்புடையவன்.
(அல் குர் ஆன் : 33:59)

இந்த வசனத்தில் உள்ள "தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு"எனற கருத்து,தலையை மறைக்க போடப்படும் துணியை குறிக்கிறது.மேலும் முன்றானை என்ற பதம்,பெண்கள் மார்புப்பகுதியை மறைக்க பயன்படும் ஆடையும் கூட,அப்படி இருக்க,அதுவேறு முன்றானை,தலையில் போடப்படுவது வேறு முன்றானை என பகுக்க இயலவில்லை.

பெண்களின் ஆடையை வல்ல அல்லாஹ்,வரையரை செய்யும் போது,அது,உடல் அங்கங்கள் தெரியாத அளவில் தடிமனான ஆடையாக இருக்க பணிக்கிறான், அப்படிப்பட்ட ஒரு ஆடையே முன்றானையாக பயன்படுத்த முடியும்,அது போன்ற ஓர் ஆடைகொண்டு,முகத்தை மூடுவதாக பொருள் கொண்டால்,பெண்களை மற்றவர்கள் பார்ப்பது இருக்கட்டும்,முதலில் பெண்கள் யாரையும் அல்ல எதையும் பார்க்கமுடியாத சூழல் உருவாகும். அப்படியாயின்,அவர்கள்,வெளியில் செல்லும் போது,பார்வையற்றவரை போலவா சென்றுவர முடியும்..

பெண்கள் விஷயத்தில் அவ்வளவு அருட்கொடைகளை வழங்கியுள்ள வல்ல ரஹ்மான்,இந்த வசனத்தின் மூலம் இது போன்றதொரு பொருள் தந்து,அவர்களை,கூண்டில் அடைக்க எண்ணியிருக்க மாட்டான்.. அல்லாஹ் பேரன்பும் பெரும் கிருபையும் உள்ளவனாயிற்றே...

பார்க்க  (புகாரி 4795)

”நீங்கள் (உங்கள் மனைவியராகிய) அப்பெண் களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள்.” (அல்குர்ஆன் 4:19)

இன்று இஸ்லாத்தின் எதிரிகளும் அவர்களோடு சேர்ந்தவர்களும் பெண்ணின் சிறப்பைப் போக்கி அவளுடைய உரிமைகளைப் பறிக்க விரும்புகின்றனர். இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ள சிறப்பு, கண்ணியம், பாதுகாப்பு முதலியவற்றை இறைமறுப்பாளர் களும் நயவஞ்சகர்களும் விரும்புவதில்லை; அவர்கள் பெண்ணினம் மதிக்கப்படுவதை வெறுக்கின்றனர். அவர் களின் இதயங்களை பகைமை எனும் நோய் பிடித்துக் கொண்டுள்ளது. தங்கள் இச்சையைத் தீர்த்துக் கொண்ட தன் பின் மிருகத்தனமான இச்சையுள்ளவர்களையும் பலவீன முஸ்லிம்களையும் வேட்டையாடுவதற்கான ஒரு வேட்டைக் கருவியாகவும் இதனால் அவர்கள் பெண்களை ஒரு அழகுபொருளாகவும், தங்கள் இச்சை களைத் தீர்த்துக் கொள்ளும் கருவிகளாகவும் பயன்படுத்தி வருகின்றனர். அடிமைகளை விடவும் கேவலமாக நடத்து பவர்களும் உள்ளனர்.

மனைவி தன் கணவனின் வீட்டை கண்காணிக்கக் கூடியவளாக இருக்கிறாள். தனக்கு கீழே உள்ளவர்களைப் பற்றி அவள் (மறுமையில்) விசாரிக்கப்படுவாள்’ என்று நபி(ஸல் அவர்கள் கூறினார்கள்.” (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று முறைப்படி அவர்கள் மீது பெண்களுக்கும் உரிமையுண்டு.” (அல்குர்ஆன் 2:228)

மனைவிக்கு செலவு, ஆடை, வசிக்கும் இடம் ஆகியவற்றை ஏற்பாடு செய்து கொடுப்பதை கணவனின் மீது அல்லாஹ் கடமையாக்கி இருக்கிறான் என்றால் அது அவன் அவளிடமிருந்து இன்பம் அனுபவிப்பதற்காகவும் அவனுக்கு பணிவிடை செய்கிறாள் என்பதற்காகவும், பொதுவாக கணவன் மனைவியரிடையே வழக்கத்தில் உள்ள ஒன்றிற்காகவும்தான்.

ஓர் ஆண் ஒரு அன்னிய பெண்ணுடன் தனிமையில் இருக்கும்போது மூன்றாவதாக ஷைத்தான் இருக்கிறான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

.
பார்க்க  (புகாரி 6228)

இதே ஹதீஸ் திர்மிதீயிலும் 811வது ஹதீஸில்

அப்பெண் இளம் பருவத்து பெண்ணாக இருந்தார் எனக் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட இந்த சம்பவம்.அப்பெண் முகத்தை மறைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. மேலும் இது இறுதி ஹஜ்ஜின் போது நடந்தது,என குறிப்பிடப்படுவதால்,பர்தாவின் சட்டம் அருளப்பட்ட பின்னரே நடந்தது எனபதை அறியமுடிகிறது.அப்பெண் அன்னிய ஆண்களுக்கு மத்தியில்,சபையில் இருந்துள்ளார் என்பதும் விளங்குகிறது,அவரின் அழகு ஆண்களை கவருவதாக இருந்தது என்பது தெளிவு.

அப்படி இருக்க,அது சமயம் நபியவர்கள்,அப்பெண்ணின் கேள்விக்கே தவிர,வேரெந்த உபதேசமும் கூறவில்லை.முகத்தை அன்னிய ஆண்களுக்கு முன் மூடிக் கொள்ளுங்கள் என்று கூட ஆலொசனை கூறவில்லை.அவரின் முகம் வெளிப்படுவதை அனுமதித்துள்ளார்கள்.

ஆனால் அவரால் கவர்ப் பட்ட,சஹாபியை பார்ப்பதை விட்டும் திருப்பியுள்ள்ளார்கள். இங்கு நபி (ஸல்) அவர்கள் பர்தா சம்பந்தமான ஆண், பெண் சட்டங்களை,முறையாக பேணியுள்ளார்கள்.அதாவது,அல்லாஹ்,அன்னியர்களுக்கு மத்தியில் தானாக வெளிப்படுவதான முகத்தை மறைக்க தேவைஇல்லை என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்கள்.

ஆண்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளவேண்டும் என்ற சட்டத்தை,பின்பற்றாத சஹாபியை அவர் பார்ப்பதை விட்டும் தடுத்துள்ளார்கள். என்பது இதன் மூலம் எனக்கு அறியக்கிடைக்கும் தெளிவு.....
அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன்.பாங்கும் இகாமத்தும் இல்லாமல் உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுகையை துவக்கினார்கள்.பின்னர் பிலாலின் மேல் சாய்ந்து கொண்டு இறையச்சம் பற்றி கட்டளையிட்டார்கள்.இறைவனுக்கு கட்டுப்பட வேண்டும் என மக்களுக்கு ஆர்வமூட்டினார்கள்.மக்களுக்கு தேவையான அறிவுரை கூறினார்கள்.

பின்னர்,பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கும் அறிவுரை கூற்னார்கள்.தர்மம் செய்யுங்கள்.ஏனெனில் நீங்கள் தான் நரகத்தில் அதிகமாக இருப்பீர்கள்' என்று குறிப்பிட்டார்கள்

அப்போது பெண்கள் பகுதியில் இருந்து,இரண்டு கன்னமும் கருப்பாக இருந்த ஓரு பெண் எழுந்து,ஏன்? என்று கேள்விகேட்டார்கள்.அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,நீங்கள் அதிகமாக குறை சொல்கிறீர்கள்:கணவனுக்கு நன்றி மறக்கிறீர்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்:ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
ஸஹீஹ் முஸ்லிம் : 1467

இதில் அப்பெண்ணின் முக அமைப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.அதை அறிவிக்கும் நபித்தோழர்,மற்றும் பிலால் ரலி ஆகிய அன்னிய ஆண்களுக்கு மத்தியில் அபெண் முகத்தை மறைக்காமல் இருந்துள்ளார் என்பதற்கு இது சான்றாக அமைகிறது.

'இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)இ நூல்: திர்மிதி எண்: 1082)

'நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போல் அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் அவளுடனேயே உறவு கொள்வீர்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின ஸம்ஆ (ரலி),  நூல்: புஹாரி 4942, 5204)

Monday, June 20, 2011

அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் அங்கீகாரம் ரத்து: அரசு எச்சரிக்கை

கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என, தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, சென்னையில் நான்கு பள்ளிகள் உட்பட பல பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.

கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணத்தை உயர்த்தக் கோரி, 6,355 தனியார் பள்ளிகள், ரவிராஜபாண்டியன் குழுவிடம் மேல்முறையீடு செய்திருந்தன. இந்தப் பள்ளிகளுக்கு கடந்த 14, 15 ஆகிய தேதிகளில் புதிய கட்டணம் நிர்ணயித்து அறிவிக்கப்பட்டது. இந்தக் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகக் கூறி, பெற்றோர் அமைப்புகளும், பெற்றோர்களும் தலைநகர் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில், பள்ளிகள் முன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

 உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். பள்ளிகள் திறந்து சில தினங்கள் கடந்த நிலையிலும், பள்ளி நிர்வாகங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருவது, அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. போராட்டங்களை ஒடுக்கும் வகையில் அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. பல பள்ளிகளில், குழு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணத்தை வசூலிப்பதால், கல்வித் துறைக்கு தலைவலியை ஏ ற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், குழு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது உட்பட பல்வேறு கடும் நடவடிக்கைள் எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இயக்குனர் தேவராஜன் கூறியதாவது: குழு நிர்ணயித்த கட்டணத்தை விட பல பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகின்றன. இந்த புகார்களுக்கு உட்பட்ட பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல் கட்டமாக, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிறோம். சென்னையில் நான்கு பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன. கடலூர் உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது. அப்படி வசூலிப்பது குறித்த புகார்கள் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தேவராஜன் தெரிவித்தார்.

THANKS : DINAMLAR

Sunday, June 19, 2011

சிறுபான்மையின மாணவ&மாணவிகள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்...

சிறுபான்மையின மாணவ&மாணவிகள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அருண் ராய் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் சிறுபான்மையினராக கருதப்படும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, பவுத்த, சீக்கிய மற்றும் பாரசீக மதங்களை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு நடப்பு ஆண்டு (2011 -12) பள்ளி படிப்பு கல்வி உதவி தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


கல்வி உதவி தொகைகள் பெற முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில் 50 சதவீ தத்துக்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 1 முதல் 10 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும்.


கல்வி உதவி தொகை வேண்டி பூர்த்தி செய்யப்பட்ட புதுப்பித்தல் விண்ணப்பங்களை 4.7.2011க்குள்ளும், புதிய விண்ணப்பங்களை 11.7.2011க்குள்ளும் கல்வி நிலையங்களில் மாணவ-மாணவிகள் அளிக்க வேண்டும. இந்த கல்வி உதவி தொகை பெறுவதற்கு மாணவ-மாணவிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும்.


கல்வி நிலையங்கள் மாணவ-மாணவிகளிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்த்து உரிய படிவத்தில் புதிய உதவி பெறுவதற்கான கேட்பு பட்டியலை 20.07.11க்குள்ளும், புதுப்பித்தலுக்கான கேட்பு பட்டியலை 15.7.11க்குள்ளும் மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். எனவே சிறுபான்மை இனத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் இந்த கல்வி உதவி தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் அருண்ராய் கேட்டுக்கொண்டுள்ளார்.

Saturday, June 18, 2011

பள்ளி சிறுவர்களை பாழாக்கும் புதுவித லாட்டரி

கோவையில் பள்ளிகளின் அருகில், "லக்கி பிரைஸ்' என்ற பெயரில், சிறுவர்களுக்கான சுரண்டல் பரிசுச் சீட்டுகள், அதிகளவில் விற்கப்படுகின்றன. சிறுவர்களிடம் சூதாட்ட மோகத்தைத் தூண்டும் இவ்வகை பரிசுச் சீட்டுகளை தடை செய்ய, மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 
ஏழை, எளிய மக்களின் குடும்ப பொருளாதாரத்தைச் சுரண்டி வந்த லாட்டரி சீட்டு விற்பனை, தமிழகத்தில் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், தடையை மீறி பல இடங்களில், வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக, பரவலாக புகார் உள்ளது. லாட்டரி சீட்டு போன்றே, பள்ளிச் சிறுவர்களைக் குறிவைத்து, பெட்டிக் கடை, ரோட்டோர கடைகளில், "லக்கி பிரைஸ்' என்ற பெயரில், சுரண்டல் பரிசுச் சீட்டுகள் அதிகளவில் விற்கப்படுகின்றன. சிறுவர்கள், ஒரு கூப்பனை 50 பைசா கொடுத்து வாங்கி, அதிலுள்ள எண்களை சுரண்டும்போது, பரிசுக்குரிய எண்கள் இருந்தால், பணம் அல்லது பொருள் வழங்கப்படுமென, கடைக்காரர்கள் கூறுகின்றனர். இது போன்ற பரிசுச் சீட்டுகள், பள்ளி அருகிலுள்ள கடைகளிலேயே அதிகம் விற்கப்படுகின்றன.

 
சூதாட்ட மோகத்துக்கு உள்ளாகும் சிறுவர்கள், தங்கள் வீட்டிலிருந்து பணத்தை எடுத்து வந்து, கடைகளில் கொடுத்து சீட்டு வாங்கி சுரண்டுவதை, வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இதனால், பள்ளி அருகிலுள்ள பெட்டிக் கடைகளில், கூட்டம் அலைமோதுகிறது. நடிகர், நடிகைகளின் போட்டோவுடன், ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு, அதன் மீது பரிசுக்கான எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன; இதைப் பார்க்கும் சிறுவர்கள், எளிதில் ஈர்க்கப்படுகின்றனர். இதுவும் ஒரு வகையான லாட்டரிச் சீட்டு தான். சிறு வயதிலேயே, சுரண்டல் மூலம் கிடைக்கும் பணத்துக்கு ஆசைப்படும் எண்ணம், பிஞ்சு மனங்களில் விதைக்கப்படுகிறது. உழைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற சிந்தனைக்கு மாறாக, உழைக்காமலும் சேர்க்க முடியும் என்ற விஷ விதையை விதைக்கிறது. இது போன்ற பரிசுச்சீட்டுகளை தடை செய்ய மாவட்ட நிர்வாகமும், போலீஸ் துறையும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து, மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "குலுக்கல் மற்றும் லாட்டரிச் சீட்டு, சுரண்டல் முறைகளில் பரிசு வழங்குவது, "பணச்சுழற்சி மற்றும் பரிசுச் சீட்டு சட்டத்தின்'படி குற்றமாகும். இதுபோன்ற குற்றங்கள் குறித்து தகவல் அறிவோர், அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவிக்கலாம்' என்றார்.

 
உடல் நலனுக்கும் தீங்கு: பரிசுச் சீட்டு சுரண்டலில் ஈடுபடும் சிறுவர்கள் பணத்தை இழப்பதுடன், ஆரோக்கிய குறைபாட்டுக்கும் ஆளாவதாக புகார் எழுந்துள்ளது. பரிசுச் சீட்டில் எண்களை மறைத்துள்ள, "அலுமினியக் கோட்டிங்கை' விரல் நகத்தால் சிறுவர்கள் பலரும் சுரண்டுகின்றனர். அப்போது, அலுமினிய துகள்கள் நகத்தின் இடுக்குகளில் படிந்து விடுகின்றன. சாப்பிடும் சிறுவர்கள் பலரும் கையை சுத்தமாக கழுவத் தெரியாதவர்களாக உள்ளனர். அவ்வாறு, கழுவாத போது, நக இடுக்கில் படிந்திருக்கும் அலுமினிய துகள்களும் உணவுடன் சேர்ந்து, வயிற்றுக்குள் போய்விடும் அபாயம் இருப்பதாகவும், அவ்வாறு நிகழும் போது வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, இதுகுறித்தும், சுரண்டல் பரிசுச் சீட்டுகளை வாங்கக் கூடாதெனவும் தங்களது பிள்ளைகளுக்கு பெற்றோர் அறிவுறுத்த வேண்டியது அவசியம்.

THANKS : DINAMALAR

Thursday, June 16, 2011

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர்

ஈரோடு கலெக்டர், தன் குழந்தையை, குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சேர்த்தார்.

ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார், கால்நடை மருத்துவத்தில் முதுகலை பயின்றவர். இவரது மனைவி ஸ்ரீவித்யா, எம்.பி.பி.எஸ்., படித்துள்ளார். தர்மபுரி கலெக்டராக ஆனந்தகுமார் பணிபுரிந்த போது, அவரது மகள் கோபிகா, அங்குள்ள மெட்ரிக் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்றார். ஜூன் 3ம் தேதி, ஈரோடு மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற அவர், கோபிகாவை, ஈரோட்டில் உள்ள பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார். ஈரோடு கலெக்டர் பங்களாவில் இருந்து அரை கி.மீ., தொலைவில் உள்ள, குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், நேற்று காலை இரண்டாம் வகுப்பில் சேர்த்தார். பள்ளிக்கு திடீரென வந்த கலெக்டரை, தலைமை ஆசிரியை ராணி வரவேற்று, தன் இருக்கையில் அமரும்படி கேட்டுக் கொண்டார். அந்த இருக்கையில் அமர மறுத்த கலெக்டர், தலைமை ஆசிரியையை அவருக்கான இருக்கையில் அமரும்படி கூறிவிட்டு, பெற்றோர் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டார். மாணவர் சேர்க்கைக்கான படிவத்தை பூர்த்தி செய்தார். தன் மகளுக்கான மாற்றுச் சான்றிதழை தலைமை ஆசிரியையிடம் வழங்கி, மகளை அப்பள்ளியில் சேர்த்தார்.

""என் குழந்தைக்கு இலவச சீருடை வழங்கப்படுமா?'' என, கலெக்டர் கேட்டார். ""சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டும் பள்ளி மூலம் இலவச சீருடை வழங்கப்படும். மற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படாது,'' என, தலைமை ஆசிரியை கூறினார். ""என் குழந்தையும் பள்ளியில் சத்துணவு சாப்பிடும். அதற்கான பட்டியலில் சேர்த்து, பள்ளி சீருடை வழங்குங்கள்,'' என, கலெக்டர் கேட்டுக் கொண்டார். பின், குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு, கலெக்டர் அலுவலகம் சென்றுவிட்டார். இதையறிந்த நிருபர்கள், கலெக்டரிடம் கேட்டபோது, ""இது என் சொந்த விஷயம்; இதைப்பற்றி சொல்ல ஏதுமில்லை,'' என்றார்.

THANKS : DINAMALAR.

Wednesday, June 15, 2011

இளைஞர்கள் நினைத்தால் ஊழலை ஒழிக்க முடியும்-: அப்துல்கலாம் பேச்சு

 ''ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள இளைய சமுதாயத்தினர், ஊழலுக்கு எதிராக தங்கள் குடும்பத்தில் மாற்றத்தை கொண்டு வந்தால் நல்ல சமுதாயம் உருவாகும். நாடு மாறவேண்டும் என்றால் ஒவ்வொரு வீடும் மாற வேண்டும். இதை கருத்தில் கொண்டு தான், இளைய சமுதாயத்திற்காக ஒரு இயக்கத்தை ஆரம்பித்துள்ளேன்,'' என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.

தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தில் சி.பி.எஸ்.சி. மற்றும் வேதபாடச்சாலையுடன் கூடிய ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி வித்யா மந்தீர் பள்ளி திறப்பு விழா நடந்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பள்ளியை திறந்துவைத்து பேசியதாவது:

நல்லொழுக்கம் இருந்தால் அனைத்தும் நல்லதாக நடக்கும். பெற்றோர், ஆரம்ப பள்ளி ஆசிரியர் ஆகியோரால் நல்லொழுக்கத்தை கொடுக்க முடியும். தற்போது, ஊழல் என்பது நாட்டில் மிகப்பெரிய வியாதியாக இருக்கிறது. அதை எப்படி ஒழிக்க வேண்டும் என நான் செல்லும் இடமெல்லாம் இளைஞர்கள் என்னிடம் கேள்வி கேட்கின்றனர். இ-மெயில்களும் வருகின்றன. ஊழலை ஒழிப்பதற்காக பல சட்டங்கள் உள்ளன. பலர் கைது செய்யப்படுகிறார்கள். சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, சிலர் தண்டிக்கப்படுகிறார்கள். லஞ்சம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது. நம் வீட்டில் இருக்கும் ஆண், பெண்கள் தான் லஞ்சத்தை தங்கள் பணியில் ஈடுபடுத்துகிறார்கள். "ஊழல் என்பது எனக்கு இழுக்கு' என்று ஒவ்வொருவரும் நினைக்கின்ற சூழல் வரவேண்டும். இந்தியாவில் 200 மில்லியன் வீடுகளில் 80 மில்லியன் வீடுகள் லஞ்சத்தில் ஈடுபடுகிறது என வைத்துக்கொண்டால் கூட அந்த வீடுகளில் எப்படி லஞ்சத்தை ஒழிப்பது. ஒவ்வொரு வீடுகளில் இருக்கும் இளைஞர்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளரும்போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும். ஊழலால் வந்த பணத்தால் எங்களுக்கு எந்த வசதியும் வேண்டாம் என்று முடிவெடுத்தால், அவர்களால் பெற்றோர்களை ஊழலில் இருந்து மாற்ற முடியும் என்பது எனது நம்பிக்கை.

அன்பு, பாசம் என்ற மிகப்பெரிய ஆயுதம் இளைய சமுதாயத்தின் கையில் இருக்கிறது. அதை அவர்கள் லஞ்சம் வாங்கும் பெற்றோர்கள் மீது செலுத்தினால் லஞ்சத்தை விட்டு பெற்றோர்களால் கண்டிப்பாக வெளியே வர முடியும். ஏனென்றால் தான் பெற்ற பிள்ளையே அவமானமாக நினைப்பதை, ஒரு இழிவான செயலான ஊழலை செய்ய எந்த ஒரு பெற்றோருக்கும் மனது வராது. ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள இளைய சமுதாயத்தினர் லஞ்சத்திற்கு எதிராக தங்கள் குடும்பத்தில் இந்த மாற்றத்தை கொண்டு வந்தால் நல்ல சமுதாயம் உருவாகும். சமூக உணர்வோடு கூடிய நல்ல தலைவர்கள் கிடைப்பார்கள். நாடு ஊழலில் இருந்து விடுபடும். நாடு மாறவேண்டும் என்றால் ஒவ்வொரு வீடும் மாற வேண்டும். இதற்காக இளைய சமுதாயத்திற்காக ஒரு இயக்கத்தை ஆரம்பித்துள்ளேன். இந்த இயக்கத்தில் 15 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் உறுப்பினராகலாம். தலைவர் என்று யாரும் இல்லை. "என்னால் எதை கொடுக்க முடியும் அல்லது உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்' என்ற எண்ணத்தை இளைஞர்களிடம் உருவாக்குவது தான் இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம். எனக்கு வேண்டும் என்ற சுயநல எண்ணம்தான் லஞ்சம் வாங்க தூண்டுகிறது. நாம் ஒவ்வொருவரும் நமது மனதை, வீட்டை, குடும்பத்தை தூய்மையாக மாற்றுவேயானால் நாடு மாறும். எல்லோரும் இதில் ஈடுபட்டு சமூகமாற்றத்தை ஏற்படுத்துவோம்.

THANKS : DINAMALAR

உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு நான்காவது இடம்

பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா, நான்காவது இடத்தில் உள்ளது. பெண் சிசுக் கொலை, குழந்தைகள் கடத்தல் உள்ளிட்டவை இந்தியாவில் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இதுதொடர்பாக நடத்தப்பட்ட சர்வேயில். உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக திகழ்வது பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. காங்கோ குடியரசு மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக் இந்தியா, சோமாலியா ஆகிய நாடுகள் உள்ளன.
 
பெண்கள் உரிமைக்கான சட்டப்பூர்வ தகவல் மற்றும் சட்ட ஆதரவு அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தர வரிசைப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் 3 நாடுகள் தெற்காசியாவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
 
பாலியல் கொடுமைகள், சுகாதார சீர்கேடு, பாலியல் அல்லாத கொடுமைகள், கலாச்சார ரீதியிலான சித்திரவதைப் பழக்கவழக்கங்கள், மதம் அல்லது பாரம்பரியம் சார்ந்த பெண்களுக்கு எதிரான பழக்க வழக்கங்கள், கடத்தல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நாடுகள் இதில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
 
இந்தியாவைப் பொறுத்தவரை பெண் சிசுக் கொலை, சிசுக் கொலைகள், பெண் குழந்தைகள் கடத்தல் ஆகியவை அதிகமாக இருக்கிறதாம். 2009ம் ஆண்டு இந்தியாவில் 1 கோடி பேர் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டதாக மத்திய உள்துறை செயலாளர் மதுகர் குப்தா கூறியதாக ஆய்வு தெரிவிக்கிறது.
 
மேலும் 2009ம் ஆண்டு நடந்த குழந்தைகள் கடத்தல் சம்பவங்களில் 90 சதவீதம் இந்தியாவுக்குள் நடந்தவையாகும். மீதமுள்ள 10 சதவீதம் வெளிநாட்டுக் கடத்தல் சம்பவங்களாகும். மேலும் இந்தியாவில் 30 லட்சம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும், அவர்களில் 40 சதவீதம் பேர் 18 வயதுக்குக் குறைவானவர்கள் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.
 
கட்டாயத் திருமணங்களும் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான முக்கியக் கொடுமைகளில் ஒன்றாக இருந்துவருகின்றது . 
 
THANKS : MAALAIMALAR

Tuesday, June 14, 2011

செல்போன் அதிகம் பயன்படுத்துவோருக்கு மூளைப் புற்றுநோய் வரும்...

மே மாத இறுதியில் உலக சுகாதார அமைப்பு ஒரு தகவலை வெளியிட்டது. செல்போன் அதிகம் பயன்படுத்துவோருக்கு மூளைப் புற்றுநோய் வரும் என்பதுதான் அந்தத் தகவல். புற்றுநோய் அபாயப் பொருள் பட்டியலில் 2பி என்ற இடத்தில் இப்போது செல்போன் இடம்பெறத் தொடங்கியுள்ளது.
 புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய (கார்சினோஜெனிக்) 2பி பட்டியலில் வாகனப்புகை, குளோரோபாம், காரீயம், பூச்சிக்கொல்லி மருந்து, சில ஊறுகாய் வகைகளும்கூட இடம்பெற்றுள்ளன. அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தப் பட்டியலில் இப்போது செல்போன் சேர்வதால் என்ன நேர்ந்துவிடப்போகிறது என்று நினைக்கத் தோன்றும். ஆனால், விஷயம் அப்படியாகக் கவலைப்படாமல் விட்டுத்தள்ளக்கூடியதாக இல்லை. ஏனென்றால், மற்ற விஷயங்களை ஒருவர் தவிர்த்துவிட முடியும். ஆனால், செல்போன் ஒரு மனிதனின் வாழ்வில் தவிர்க்க முடியாத பொருளாக மாற்றப்பட்டுவிட்டது.
 14 நாடுகளில் 31 அறிவியல் அறிஞர்களைக் கொண்டு ஆய்வு செய்ததில் கிடைத்த முடிவு- செல்போனில் வெளிப்படும் மின்காந்த அலைகள் மூளையின் நரம்புச் செல்களைச் சுற்றியுள்ள கிளையல் செல் எனப்படும் செல்களைத் தாக்கி, புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் அதிகமாக உள்ளது. அதாவது தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு, ஒரு நாளைக்குச் சராசரியாக அரைமணி நேரம் செல்போனில் பேசுபவர்களில் 40 விழுக்காட்டினருக்கு மூளைப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்கிறது உலக சுகாதார அமைப்பு. இந்தியாவில் நாம் தினமும் எவ்வளவு நேரம் செல்போனில் பேசுகிறோம் என்பதைக் கணக்கெடுத்து, அவரவர்களே தங்கள் மூளையைச் சோதித்துக் கொள்ளலாம்.
 இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகமிக அதிகமாக உயர்ந்துவிட்டது. உயர்ந்துகொண்டும் வருகிறது. 2004 மார்ச் மாதம் 35.62 மில்லியனாக இருந்த செல்போன் இணைப்புகள், 2010 அக்டோபர் மாதம் 706.7 மில்லியனாக உயர்ந்துள்ளது. அதாவது 1884 விழுக்காடு அதிகம்! ஆனால், லேண்ட்லைன் எனப்படும் கம்பிவழித் தொலைபேசிகள் குறைந்து வருகின்றன. 2004-ம் ஆண்டு 40.9 மில்லியனாக இருந்தது, 2010 அக்டோபரில் 35.4 மில்லியனாகக் குறைந்துவிட்டது. அதாவது 13.4 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது.
 இதுபோதாதென்று, ஒவ்வொரு போனிலும் இரண்டு சிம்கார்டுகள் வைத்துக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்து வருகிறார்கள். அதாவது ஒவ்வொரு நபரும் இரண்டு, மூன்று சிம் கார்டு வாங்கிப் பயன்படுத்த ஊக்குவிக்கும் வணிகம் இது. இதனால் அவர்களுக்கு லாபம். எல்லா சிம் கார்டையும் பயன்படுத்திப் பேசலாம். பேசிக்கொண்டே இருக்கலாம். மூளைப் புற்றுநோய் வந்தால், அந்த நிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனைகளில் போய் பணத்தைக் கொட்டி சிகிச்சை பெறலாம்!
 உலக சுகாதார நிறுவனத்தின் இந்தத் தகவலை ஏற்காதவர்களும் இருக்கிறார்கள். எக்ஸ்-ரே, புறஊதாக் கதிர்கள் உடலில் உள்ள செல்களைத் தாக்கி, பாதிக்கச் செய்யும் தன்மையுள்ளவை (அயோனைசிங் ரேடியேஷன்) என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவ்வாறு நம் உடலின் செல்களைப் பாதிக்காத கதிர்வீச்சுகள் (நான்-அயோனைசிங் ரேடியேஷன்) என்றுதான் ரேடியோ அலைகள் அறியப்பட்டுள்ளன. அந்த வகையைச் சேர்ந்த மின்காந்த அலைகளால் இயங்கும் செல்போன், எவ்வாறு மூளையின் செல்களைப் பாதிக்கும் என்பது இதுவரை அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இது உண்மையே என்றாலும், செல்போன் பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படாது என்று உறுதிப்படச் சொல்வதற்கு யாராலும் முடியவில்லை. இந்நிலையில் இந்த ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும்.
 செல்போன் பயன்பாட்டைத் தவிர்ப்பது என்பது இனிமேல் இயலாத காரியம். ஆனால், அதன் பயன்பாட்டை தேவை இருந்தால் மட்டுமே பயன்படுத்துவது என்பது எல்லோராலும் இயலக்கூடியது.
 அதிகநேரம் செல்போன் பயன்படுத்துவோரின் காதுகளுக்குக் கேட்புத்திறன் குறையத் தொடங்குகிறது என்று ஏற்கெனவே ஓர் ஆய்வறிக்கை வெளியானது. இப்போது அதைவிடவும் ஆபத்தானது என்று அறிக்கை சொல்கிறது. இதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. குறிப்பாகக் குழந்தைகள் இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கச் செய்யலாம்.
 இப்போதெல்லாம் பள்ளி மாணவர்களுக்கு - ஏன், மழலையர் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும்கூட-செல்போன் கொடுக்கிறார்கள். கேட்டால், ""பள்ளி முடிந்தவுடன் என் குழந்தை என்னிடம் பேசி, ஆட்டோ வந்தது ஏறிவிட்டேன் என்று சொன்னாலொழிய என்னால் நிம்மதியாக அலுவலகத்தில் இருக்க முடியாது'' என்று சொல்லும் பெற்றோரின் கவலை புரிகிறது. ஆனால், உங்கள் பிள்ளைகள் உங்களிடம் மட்டும் பேசினால் அது தகவல் தொழில்நுட்பத்தை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறீர்கள் என்று பொருள். உங்கள் குழந்தை மற்ற மாணவர்களுடன்- ஆட்டோவில் ஏறியது முதல் நீங்கள் வீடு திரும்பும்வரை- பேசிக்கொண்டே இருக்குமானால் அதை எப்படித் தடுக்க முடியும் என்பதையும் யோசிக்க வேண்டும்.
 உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் நமக்குச் சொல்லும் ஆய்வறிக்கையை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் அறிவுரையாக எடுத்துக்கொள்ளலாம்.
THANKS : DINAMANI