இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Thursday, March 31, 2011

எப்போதும் இளமை வேண்டுமா-'கறிவேப்பிலை'

கறிவேப்பிலை இருவகைப்படும். “நாட்டுக் கறிவேப்பிலை மற்றும் காட்டுக் கறிவேப்பிலை. நாட்டுக் கறிவேப்பிலை உணவிற்கும் காட்டுக் கறிவேப்பிலை மருந்துக்கும் பயன்படுகின்றன. நாட்டுக் கறிவேப்பிலையில் இனிப்பும், துவர்ப்பும், நறுமணமும் ஒருங்கே அமைந்திருக்கும்.

காட்டுக் கறிவேப்பிலை கசக்கும். கறிவேப்பிலையில் சுண்ணாம்பு, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரதம், இரும்பு, தாது சத்துக்கள் உள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, சி உயிர்ச்சத்துக்கள் நிறைய இருக்க¢ன்றன. சுண்ணாம்புச் சத்தும் நிறைய இருக்கிறது.

இந்தச் சத்துக்கள் உடல் பலத்தை அளிக்கவும் எலும்புகளுக்கு சக்தியூட்டவும் பயன்படுகிறது. வாயினருசி வயிற்றுளைச்ச னீடு சுரம் பாயுகின்ற பித்தமுமென் பண்ணுங்காண் - தூய மருவேறு காந்தளங்கை மாதே உலகிற் கருவேப்பிலை யருந்திக் காண்.

என்ற பாடலால் கறிவேப்பிலையை உண்டு வர வாயில் சுவையின்மை, பழஞ்சுரம், சீதக்கழிச்சலால் வரும் வயிற்றுளைச்சல், பித்தம், பைத்தியம் ஆகியவை குணமாகும் என்பது தெரிய வருகிறது. கறிவேப்பிலை மருந்துக்கும் பயன்படுகிறது. ஔடத குணமுள்ள இந்தக் கறிவேப்பிலை பல வியாதிகளையும் தீர்க்கிறது. கறிவேப்பிலை உடலுக்கு பலம் உண்டாக்கக்கூடியது.

பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது. பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும். அதோடு கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது. குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும்.

பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது. வாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமலிருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.

கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது. கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது.

அரோசிகம் எடுபட எந்த பதார்த்தத்தைச் சாப்பிட்டாலும் அது மண் போல ருசியறிய முடியாமலிருப்பதையே அரோசிகம் என்பர். அதாவது நாவில் ருசியறியும் உணர்ச்சி இழைகள் மறத்துப்போவதே இதற்குக் காரணம். இதைப் போக்க கறிவேப்பிலைத் துவையல் நன்கு பயன்படும். கறிவேப்பிலையை நன்கு அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்தால் முடி நன்றாக வளரும்.

இதற்குத் தேவையான அளவு கறிவேப்பிலையை எடுத்து, அதைச் சுத்தம் பார்த்து, அம்மியில் வைத்து தேவையான அளவு இஞ்சி, சீரகம், புளி, பச்சை மிளகாய், உப்பு இவைகளை வைத்து மை போல துவையல் அரைத்து, சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நாவில் ருசியறியும் தன்மை ஏற்படும். அடிக்கடி இந்த துவையலை சாதத்துடன் ருசித்துச் சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் வராது.

உடல் உறுதி பெறும். பைத்தியம் தெளிய புத்திசுவாதீனமில்லாமல் இருப்பவர்களின் புத்தியை ஸ்திரப்படுத்தி ஒரு நிலையில் நிறுத்தி, அறிவில் தெளிவை உண்டாக்க கறிவேப்பிலை நன்கு பயன்படும்.

சுத்தமாக ஆய்ந்து எடுத்த கறிவேப்பிலையை அம்மியில் மை போல அரைத்து, அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஒரு எலுமிச்சம்பழத்தின் சாற்றையும் விட்டுக் கலக்கி, தினசரி காலையிலும் மாலையிலும் சாதத்தில் போட்டுக் கலந்து சாப்பிடக் கொடுத்து விட வேண்டும்.

இந்த விதமாக புத்தி சுவாதீனம் அடையும் வரை கொடுத்து வர வேண்டும். கறிவேப்பிலையில் நிறைய உயிர்ச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால், பதார்த்தங்களில் மிதக்கும் கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்துவிடக்கூடாது.

ஆகாரத்துடன் அதையும் சேர்த்து மென்று விழுங்கிவிட வேண்டும். இரண்டு தினங்களுக்கு ஒரு முறையாவது கறிவேப்பிலைத் துவையலை சாப்பாட்டுடன் சேர்த்து வந்தால் உடல் நலம் பெறும்.
 
THANKS : TAMILCNN

மன இறுக்கத்தை போக்கும் வழிமுறைகள்

சத்தான உணவைச் சாப்பிடுங்கள் கவனியுங்கள்...
ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.

2. நன்றாகத் தூங்குங்கள்
நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக்குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத்தூக்கம் அவசியம்.

3. நடங்கள்! ஓடுங்கள்!


தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும்.

மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு செல்லவேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.

4. ஓய்வெடுங்கள்.
பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள்.

கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.

5. சிரியுங்கள்
மனம் விட்டு சிரியுங்கள். “மனம் விட்டு என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும்.

வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும். அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.

6. மனம்விட்டுப் பேசுங்கள்.

மனம் விட்டுப்பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும். எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள்.

யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.

7. உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்


இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது.

ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.

8. தெளிவாகச் செய்யுங்கள்


எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள், நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.

9. விளையாடுங்கள்
உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.

10. மற்றவர்களையும் கவனியுங்கள்


உங்கள் விருப்பங்களையும், உங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். அது மன உளைச்சலில் கொண்டுபோய்விடும். நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது.

உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பாராமல். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும் !!!

THANKS : TAMILCNN

Wednesday, March 23, 2011

ஃப்ளோரிடாவில் திருக்குர்ஆனை எரித்த கிறிஸ்துவ பாதிரி! – அமெரிக்காவில் பரபரப்பு!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஜர்ச்சில் பாதிரியார் ஒருவானால் கடந்த வாரம் திருக்குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கிறிஸ்தவ மதபோதகர் டெர்ரி ஜோன்ஸ் மேற்பார்வையில், தேவாலய பாஸ்டர் வேன் ஸாப் என்பனால் திருக்குர்ஆன் எரிக்கப்பட்டுள்ளது.
இந்த டெர்ரி ஜோன்ஸ் என்ற பாதிரியார் வெறு யாரும் இல்லை ஏற்கனவே கடந்த ஆண்டு, செப்டம்பர் 11 ஆம் தேதியன்று, தீவிரவாதிகள் 2001 ஆம் ஆண்டு நடத்திய இரட்டைக் கோபுர தாக்குதல் நினைவு தினத்தன்று குரானை எரிக்கப் போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவன் தான்..

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய் களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.

இணை கற்பிப்போர் வெறுத்த போதிலும் அனைத்து மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர் வழியுடனும் உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான்.

அல்குர்ஆன் 61-9,10
 
THANKS : TNTJ.NET

பேரிக்காயைவிட ஆப்பிள் ஆபத்து!

- அதிர்ச்சி தரும் தொப்பை ரிப்போர்ட்!

'தொப்பை இருந்தால் பணம் கொட்டும் என்று கிராமப் புறங்களில் பேசுவார்கள். அது உண்மையோ இல்லையோ, தொப்பை இருந்தால், மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் என்பது மட்டும் 100 சதவிகிதம் மருத்துவ நிஜம்! 
தொப்பையிலும் இரு வகை உண்டு. பார்க்க ஆப்பிள் பழ வடிவத்தில் சிலருக்கும், பேரிக்காய் வடிவத்தில் சிலருக்கும் இருக்கும். குறிப்பாகப் பெண்களுக்கு பேரிக்காய் வடிவத்தில் இருக்கும். இரண்டு தொப்பைகளுமே பிரச்னையானதுதான் என்றாலும், பேரிக்காய் வடிவத்தைக் காட்டிலும், ஆப்பிள் வடிவத் தொப்பை கூடுதல் ஆபத்தானது. இந்த வகைத் தொப்பை கொண்டவர்களுக்கு, மற்றவர்களைவிட ஹார்ட் அட்டாக் வர மூன்று மடங்கு வாய்ப்பு உள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பிரபல இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சிவகடாட்சத்திடம் பேசினோம், ''முன்பு இதய நோய் வருவதற்கான காரணங்களாகப் புகை பிடிப்பது, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், பாரம்பரியத்தன்மை ஆகிய ஐந்து விஷயங்களைப் பட்டியலிடுவோம்.
உடல் பருமன் என்பது புதியது அல்ல. இப்போது இதிலேயே நிறைய ஆராய்ச்சிகள் நடக்கின்றன. கடந்த ஐந்து வருடங்களாக மெட்டபாலிக் சிண்ட்ரோம் என்று ஒன்றைக் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த பாதிப்பு ஆசிய நாட்டவர்களுக்குத்தான் அதிகமாம்.  நல்ல கொலஸ்ட்ரால், மொத்த கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால், டிரை கிளசரைட் என்று கொழுப்பை நான்கு வகைகளாகப் பிரிக்கிறார்கள். இதில் ஆசிய மக்களுக்கு நல்ல கொலஸ்ட்ரால் குறைவாகவும், டிரை கிளசரைட் அதிகமாகவும் இருக்கிறது என்பது கண்டுபிடிப்பு. ரத்தத்தில் நல்ல கொழுப்பு அளவு சராசரியாக 40 மில்லி கிராம் இருக்க வேண்டும். ஆனால், இந்தியர்களுக்கு பெரும்பாலும் இதற்குக் குறைவாகவே உள்ளது.
அதேபோன்று, வெறும் வயிற்றில் சுகர் டெஸ்ட் எடுத்துப்பார்த்தால், சர்க்கரை அளவு 110 என்று இருக்க வேண்டும். ஆனால், நம் உடலில் 110-க்கு அதிகமாக இருக்கிறது.
இடுப்பு சுற்றளவு ஆண்களுக்கு 90 செ.மீ., பெண்களுக்கு 80 செ.மீ., என்ற அளவில் இருக்க வேண்டும். இந்த மூன்றில் ஓர் அறிகுறி இருந்தாலும், அவர்களுக்கு மெட்டபாலிக் சிண்ட்ரோம் உள்ளது என்று கூறுவோம்.
சரி, 'உடல் பருமனாக உள்ள எல்லோருக்கும் மாரடைப்பு வரவேண்டுமே ஏன் சிலருக்கு வருவதில்லை? என்று கேட்கலாம். அப்போதுதான் ஆப்பிள் ஷேப், பியர் ஷேப் (பேரிக்காய்) என்பதைக் கண்டுபிடித்தார்கள். இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதி பருத்திருப்பதை பியர் ஷேப் என்பார்கள். வயிறு பருத்திருப்பதை ஆப்பிள் ஷேப் என்பார்கள். பியர் ஷேப் உடல் பருமன் உள்ளவர்களுக்கு இதயப் பிரச்னை வருவது குறைவு. ஆனால், ஆப்பிள் ஷேப் உள்ளவர்களுக்கு மூன்று மடங்கு இதய நோய் வருவதற்கான ரிஸ்க் அதிகம்!
ஜப்பானின் சுமோ வீரர்களுக்கு வயிறு பெரிதாக இருக்கும். ஆனால், அவர்களுக்கு இந்தியர்களைவிட மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறைவு. ஏனென்றால், சுமோ வீரர்களுக்கு தோலின் அடியில்தான் கொழுப்பு உள்ளது. ஆனால், இந்தியர்களுக்கோ வயிறைச் சுற்றியே அதிக அளவில் கொழுப்பு உள்ளது. இது ஆபத்தானது.
'இன்டர்ஹார்ட் ஸ்டெடி என்று ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் புகைபிடிப்பது, நீரிழிவு, உயர் ரத்த
அழுத்தம், உடல்பருமன், பாரம்பரியத்தன்மை ஆகிய ஐந்து அபாயக் காரணிகளுடன் இன்னும் சிலவற்றைச் சேர்த்துள்ளனர். உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை, போதுமான காய்கறி - பழங்களை எடுத்துக்கொள்ளாதது, வீடு மற்றும் வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தம் ஆகியவைதான் அது.
நான் படிக்கும் காலத்தில், தினமும் விளையாடிவிட்டுத்தான் வீட்டுக்கு வருவோம். ஆனால், இன்று பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களே இல்லை.  உட்கார்ந்த இடத்தில் இருந்தே வேலை செய்வதும், அதிகமாக நொறுக்குத் தீனிகளை உட்கொள்வதும் அதிகரித்துவிட்டது. இதனால் உடலில் அதிகம் கொழுப்பு சேர்கிறது.
உடலில் எங்கு கொழுப்பு அதிகமாக உள்ளது என்பதைக் கண்டறிவது இப்போது சிம்பிள். சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்த்தாலே, கொழுப்பு தோலுக்கு அடியில் உள்ளதா அல்லது வயிற்றுப் பகுதிகளில் உள்ளதா என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்துவிட முடியும்.
உடலில் கொழுப்பு கூடாமல் இருக்க அல்லது கூடியிருக்கும் கொழுப்பைக் குறைக்க மூன்றே மூன்று விஷயங்கள் செய்தால் போதும். தினமும் ஆறு மணி நேரம் கண்டிப்பாகத் தூங்க வேண்டும். ஒரு மணி நேரத்தை உடற்பயிற்சிக்காகச் செலவிட வேண்டும். தினமும் 150 முதல் 250 கிராம் அளவு காய்கறியையும், அதே அளவு பழங்களையும் சாப்பிட வேண்டும்.
இது தவிர, கார்போஹைட்ரேட் (சர்க்கரை) சத்து குறைவாக எடுத்துக் கொண்டால், உடல் எடையைக் குறைத்து கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்!'' என்கிறார் டாக்டர் சிவகடாட்சம்.
இத்தனை எளிதுதானா 'சிக் உடல் பெறுவது?
THANKS - பா.பிரவீன்குமார்

வட்டியின் பக்கம் மட்டும் தலைசாய்த்து விடாதீர்கள்


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, எந்தவிதமான கஷ்ட காலங்களிலும் வட்டியின் பக்கம் மட்டும் தலைசாய்த்து விடாதீர்கள். ஏனெனில் வட்டி சம்பந்தப்பட்ட அனைத்தையும் அல்லாஹ் வெறுக்கின்றான்.

இதைப்பற்றி, அல்லாஹ் தன் திருமறையில்,

يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ ۗ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ

அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை ( (2:276) என்றும்,

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُّضَاعَفَةً ۖ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரிக்கக் கூடிய வட்டியை(வாங்கி)த் தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி(இதைத் தவிர்த்து)க் கொண்டால் வெற்றியடைவீர்கள் (3:130) என்றும் எச்சரிக்கிறான்.

"வட்டி வாங்குபவர்கள், வட்டி கொடுப்பவர்கள், அதை எழுதுபவர்கள் மற்றும் ஸதகா கொடுக்க மறுப்பவர்கள்
இவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.
அறிவிப்பாளர் : அலீ (ரலி); திர்மிதி 5347.

பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். - அவ்னிப்னி அபீ ஜுஹைஃபா (ரலி); புகாரீ 2086.

"
அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், "இறைத்தூதர் அவர்களே! அவை எவை?" என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது சூனியம் செய்வது நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வது வட்டி உண்பது
அனாதைகளின் செல்வத்தை உண்பது போரின்போது புறமுதுகு காட்டி ஓடுவது அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின்மீது அவதூறு கூறுவது"

என்று (பதில்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி); புகாரீ 2766.

இப்படி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெறுக்கின்ற வட்டியின் பக்கம் நாம் போகலாமா?

"பிறரிடம் உதவி கேட்டால் தர மறுக்கிறார்கள். வட்டியில்லா கடனும் கொடுக்க மறுக்கிறார்கள். பிறகு என்னதான் செய்வது? வட்டிக்குத்தான் கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது" என்று சிலர் கூறுகிறார்கள். செலவழிக்கப் பணம் இல்லாவிட்டால் வட்டிக்குப் பணம் கிடைக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டு வட்டியின் பக்கம் போகிறோம். வட்டி என்பதே கிடையாது என்று நினைத்தால் போவோமா? சற்றுச் சிந்தியுங்கள். தங்களது ஆடம்பரச் செலவுகளுக்கும் கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளில் பிறர் பார்த்து மெச்சுவதற்காக ஊராருக்கு விருந்து போடுவதற்கும் வட்டிக்குப் பணம் வாங்கும் எத்தனையோ பேர் நம் சமுதாயத்திலும் உள்ளனர். பன்றிமாமிசம் ஹராம் என்று எல்லோருக்கும் தெரியும். எந்த அளவு பசியிருந்தாலும் பன்றி மாமிசத்தை உண்ண மாட்டோமல்லவா. உணவு எதுவும் கிடைக்காத, உயிர்போகும் பட்சதில் பன்றி மாமிசத்தை உண்ணலாம் என்று சலுகை இருந்தும் நாம் உண்ண மாட்டோம். அதேபோன்றே இந்த வட்டியையும் ஒரு பன்றி மாமிசமாகக் கருத வேண்டும்.

ஏனெனில் இந்த வட்டியின் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட குடும்பங்கள் எத்தனை? தனது கற்பைப் பறிகொடுத்த பெண்கள் எத்தனை? தம் பெற்றோர், பிள்ளைகள், உறவினர்களை இழந்தோர் எத்தனை? இவை யாவற்றையும் கணக்கிட முடியாது. அந்த அளவிற்கு இந்த வட்டியின் கொடுமை தலை விரித்தாடுகிறது. வட்டிக்காகப் பணம் கொடுப்பது, வட்டிக்குப் பணம் வாங்குவது மட்டுமல்ல, அதற்காக சாட்சிக் கையெழுத்துப் போடுவதும் பாவமேயாகும். அதற்கு மறுமையில் மிகப்பெரும் வேதனை மட்டுமல்ல, நிரந்தர நரகமும் உண்டு.

இதைப்பற்றி அல்லாஹ் தன் திருமறையில்,

الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لاَ يَقُومُونَ إِلاَّ كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُواْ إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَن جَاءهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانتَهَىَ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللّهِ وَمَنْ عَادَ فَأُوْلَـئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ

யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய்) எழமாட்டார்கள். அதற்குக் காரணம் அவர்கள்,
நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது. என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின்பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (2:275) என்று எச்சரிக்கிறான்.

இன்னும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். என்னிடம் வந்தவர்கள் தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக் கொண்டு நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது, அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்! "அவர் யார்?" என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள், "ஆற்றில் நீங்கள் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!" எனக் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஸமுரா (ரலி); புகாரீ 2085.
எனவே அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே,
நம்மில் வசதியுள்ளவர்கள் ஏழ்மையில் உழல்வோருக்குக் கண்டிப்பாக வட்டியில்லாக் கடன் கொடுக்க முன்வர வேண்டும். வசதியற்றவர்கள் வட்டிக்காகப் பணம் வாங்குதலும், நகை அடகு வைத்தலும் செய்யாமல் இருக்க வேண்டும். வட்டியை ஒழிக்கப் போராட வேண்டும். வட்டியில்லாக் கடன் திட்டத்தை ஒவ்வொரு ஊரிலும் ஏற்படுத்த வேண்டும். அப்போது இந்த உயிர்க் கொல்லியான வட்டி, இந்த உலகை விட்டு ஒழியும், இன்ஷா அல்லாஹ்.

நிச்சயமாக நல்லது செய்வோருக்கு அல்லாஹ் எப்போதும் துணையிருப்பான்.

ஆக்கம் - ஹாஜிரா தாஜுன், நவி மும்பை. & அப்துல் அஜிஸ் சீர்காழி

- நன்றி சத்தியமார்க்கம்

Saturday, March 19, 2011

இன்று பூமிக்கு மிக அருகில் நிலவு

பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றிவரும் நிலவு, இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது. இதனால் நமது பார்வைக்கு வழக்கமாகத் தெரியும் அளவை விட மிகப் பெரிதாக நிலவு தெரியும்.


பூமியில் இருந்து நிலவு சுற்றிவரும் சுழற்சிப் பாதையில் அதன் சராசரி தூரம் 2,38,857 மைல்களாகும், அதாவது 3,84,403 கி.மீ. அது ஒரு நீள் வட்டப் பாதையில் பூமியை சுற்றி வருவதால் பூமிக்கு குறைந்த தூரத்திலும், பூமியில் இருந்து மிக அதிக தூரத்திற்கும் சென்று சுற்றி வருகிறது. அதன் சுழற்சிப் பாதையில் பூமியில் இருந்து வெகு தூரத்திற்கும் செல்லும்போது (அபோஜி) பூமியில் இருந்து 4,06,395 கி.மீ. தூரம் வரை செல்கிறது. இந்த நேரத்தில் வரும் பெளர்ணமி அன்று நிலவு மிகச் சிறியதாகத் தெரியும். 


அது தனது சுழற்சிப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது (பெரிஜி) அதன் தூரம் 3,57,643 கி.மீ. ஆக சுருங்குகிறது. இப்படிப்பட்ட நிலைதான் இன்று ஏற்படுகிறது. பெளர்ணமி தினமான இன்று நிலவு பூமிக்கு மிக அருகில் வருகிறது. பூமியில் இருந்து அதனை நாம் காணும் தூரம் 2,21,567 மைல்களாக, அதாவது 3,54,507.2 கி.மீ. தூரத்திற்கு வருகிறது. இதனால் நிலவு மிகப் பெரியதாகத் தெரியும்.


இப்படிப்பட்ட குறைந்த தூரத்திற்கு நிலவு வருவது ஒவ்வொரு ஆண்டும் நிகழவில்லை என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்பு 1955, 1974, 1992, 2005 ஆகிய ஆண்டுகளில் நெருக்கமாக நிலவு வந்தது. அதன் பிறகு ஆறே ஆண்டுகளில் பூமிக்கு நெருக்கமாக வருகிறது. 


இன்று வானத்தில் மேக மூட்டம் ஏதுமில்லாமல் இருந்தால் நீங்கள் அழகிய நிலவை மிக அருகில் நின்று பார்ப்பது போன்ற உணர்வுடன் பார்க்கலாம்.


நிலவு இப்படி பூமியை நெருங்கி வருவதால் கடல் பொங்கும் (எல்லா பெளர்ணமி, அமாவாசை தினங்களிலும்தான் பொங்குகிறது), நில நடுக்கம் ஏற்படும், எரிமலைகள் வெடித்துச் சீரும் என்றெல்லாம் எக்கச்சக்க புரளிகளும் பரவி வருகின்றன. ஆனால் இதையெல்லாம் அறிவியலாளர்கள் மறுத்துள்ளனர். இன்றைக்கு கடலில் எழும் அலைகள் அதிகமாக இருக்கும் என்று மட்டும் கூறியுள்ளனர்.

THANKS : WEBDUNIA

மணப்பெண்ணின் தாயாருக்கு திருமண நிதி உதவி திட்டம்

சகோ ஜாபர் சாதிக் அவர்கள்  Rural Development Department ல் பணியாற்றுகிறார்கள். தமிழக அரசு, வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பத்தினர்களுக்கு பல உதவி திட்டங்களை வழங்கி வருகிறது. அவற்றில் முக்கியமானது Dr. மூவாளூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் மணப்பெண்ணின் தாயாருக்கு          Rs 25000/- உதவி வழங்குகிறது (10th pass செய்திருக்கு வேண்டும்).  10 ஆம் வகுப்புக்கு கீழே படித்தவர்களுக்கு மேலும் பல திட்டங்கள் உள்ளன.

இதுபோன்ற திட்டங்களில் பல சமுதாயத்தினர்கள் பலன் அடைந்து வருகின்றனர்.   இதுபோன்ற உதவிகளை விட்டுவிட்டு, நம் சமூகத்தினர், ஜூம்ஆ தொழுகைக்குப்பிறகு, உதவி வேண்டி வருவதை பார்க்கும்போது, கஷ்டமாக இருப்பதாக சகோ உணர்கிறார்கள்.

ஆகையால் நம் சமூகத்தினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இதுபோன்ற நல திட்டங்களை பயன்படுத்திக்கொள்ளவும்.  மேலதிக விளக்கங்களுக்கு சகோ ஜாபர் சாதிக் அவர்களை ajsadiq@yahoo.com  இந்த மெயிலில் தொடர்பு கொள்ளலாம்.

THANKS : NAGORE ASIK

Thursday, March 17, 2011

ஹஜ் புனிதப் பயணம் - 3 ஆண்டுகள் தொடர்ந்து விண்ணப்பித்தவர்கள் இந்த ஆண்டு குலுக்கல் இன்றி தேர்வு!

ஹஜ் புனிதப் பயணம் செல்வதற்கான விண்ணப்பங்கள் நேற்று முதல்  வழங்கப்படுகின்றது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ் நாட்டில் வசிக்கும் முஸ்லிம் பெருமக்களில், ஹஜ்-2011-ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது.
ஹஜ் 2011-ற்கான விண்ணப்பப் படிவங்கள் சென்னை-34, புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து 16-3-2011 முதல் பெற்றுக் கொள்ளலாம்
அல்லது விண்ணப்பங்களை www.hajcommittee.com  என்ற இணையதளம் மூலமாகவும் அச்சு எடுத்துக் கொள்ளலாம்.
விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
விண்ப்பதை பூர்த்தி செய்யும் வழிமுறைகள்
ஹஜ் குழுவின் விதிமுறைகளின் அடிப்படையில் ஒரு குழு/உறையில் ரத்த-உறவுமுறையுள்ள குடும்ப நபர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் முதலானோர் ஐந்து நபர்களுக்கு மிகாமல் உள்ளடங்கியதாக இருக்கவேண்டும்.
இவ்வுறையில் அந்நிய நபர் எவரையும் சேர்க்கக்கூடாது. விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநில ஹஜ் குழுவிடம் விண்ணப்பித்தாலோ அல்லது ஒரு மாநில ஹஜ் குழுவில் பலமுறை விண்ணப்பித்தாலோ, அவ்வாறான விண்ணப்பங்கள் முற்றிலுமாக நிராகரிக்கப்படுவதுடன் எந்தவொரு மாநில ஹஜ் குழுவாலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
பாஸ்போர்ட்டில் மட்டுமே ஹஜ் பயணத்திற்கான விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால், கடவுச் சீட்டின் நகலை இணைத்து விண்ணப்பப் படிவங்களை 30 ஏப்ரல் 2011-ற்குள் மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தங்கள் வசம் பாஸ்போர்ட் இல்லாதவர்கள், முதலில் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்து மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திடமிருந்து பெற்ற ரசீதின் நகலை விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து சமர்ப்பிக்கவேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூ.200/- (ரூபாய் இருநூறு மட்டும்)-ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவிற்கான நடப்புக் கணக்கு எண்.31634038682-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகல் மற்றும் பன்னாட்டு கடவுச் சீட்டு இருப்பின் அதன் நகலை அல்லது பாஸ்போர்ட்டிற்காக விண்ணப்பித்திருந்தால் மண்டல பாஸ்போர்ட் அலுவலக ரசீதின் நகலை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்கவேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30-4-2011 ஆகும்.
தொடர்ந்து 3 ஆண்டு விண்ணபித்தவர்கள் இந்த ஆண்டு குலுக்கல் இன்றி தேர்வு
ஹஜ் 2008, 2009 மற்றும் 2010-ல், கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து விண்ணப்பித்து தெரிவு செய்யப்படாதவர்களின் விண்ணப்பங்களை நேரடியாக தெரிவு செய்யும் திட்டத்தைத் தொடர்வது என மத்திய ஹஜ் குழு முடிவெடுத்துள்ளது.
ஹஜ் 2011-ல் இச்சலுகையை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் மற்றும் சக பயணிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கான உறை எண் விபரங்களை விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட வேண்டும். (புதிய விண்ணப்பதாரர்கள் எவரையும் சேர்க்கக்கூடாது).
இவ்விண்ணப்பதாரர்கள் குலுக்கல் இன்றி தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் என்ற தகுதியைப் பெறுவார்கள். இவ்வாறு சிறப்பு வகையில் நேரடியாக தேர்வு செய்யப்படவுள்ளவர்கள் பாஸ்போர்ட்டை தங்கள் வசம் வைத்திருக்கவேண்டும் மற்றும் ஹஜ் 2011-ற்கு விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பங்களை பெறும் கடைசி நாள் வரையில், சிறப்பு வகை விண்ணப்பங்கள் ஒதுக்கீட்டை விடக் குறைவாக இருந்தால், மீதமுள்ள இருக்கைகள் பொதுவகையில் அளிக்கப்பட்டு, அவ்விருக்கைகளுக்கு மாநில ஹஜ் குழு குலுக்கல் நடத்தி தேர்வு செய்யும்.
மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட ஒதுக்கீட்டை விட அதிகமாக சிறப்பு வகையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால் மாநில ஹஜ் குழு, சிறப்பு வகை விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் குலுக்கலை நடத்தும்; பொது வகையில் புதியதாக விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
மத்திய ஹஜ் குழுவால் நிர்ணயிக்கப்படும் ஒதுக்கீட்டின் அடிப்படையில், கணினி மூலமாக குலுக்கலை நடத்தி தேர்வு செய்யப்பட்ட புனிதப் பயணிகளுக்கு தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தெரிவிக்கும்.
குலுக்கல் மூலமாக பயணிகள் தேர்வு செய்யப்படுவது முற்றிலும் தற்காலிகமானது. குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட புனிதப் பயணிகள், பாஸ்போர்ட்டின் முதல் பக்கத்தில் புகைப்படத்தை இணைத்து, அந்த பாஸ்போர்ட்டுடன் ரூ.31,000/- செலுத்தியதற்கான வங்கி ரசீதின் நகலை இணைத்து 15.6.2011-க்குள் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.